காந்தள்: பொய்க் கூப்பாடுகளும், சில உண்மைகளும்



நேத்து நம்ம பெயரிலி, "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடறான் பாருங்க",ன்னு அலறினாரு. என்னடான்னு பாத்தா டைம்ஸ் ஆப் இந்தியாவுல புலிப்பூ விஷப்பூன்னு சேதி வந்துச்சாம். இது மாதிரிப் பத்திரிகைகள் ஈழச் செய்தின்னாலே ஒரு விஷச்சாயம் பூசுறதுதானேன்னு விட்டிருக்கலாம். பிபிசியோட அன்னம்மா வேற சொன்னுச்சா, சரி என்னதான் இந்தப் பூவப் பத்தி உண்மை இருக்குன்னு பாக்கப் போனேன். நான் கண்டதைச் சொல்லுறேன்.

காந்தள் பூவை ஈழத்தோட தேசியப்பூன்னு அறிவிச்சாங்களாம். இதப்பத்தி வீரநாதன் எழுதினதை சந்திரவதனா போட்டிருக்காங்க. Gloriosa superba அப்படிங்கற காந்தள், ஆயுர்வேத, யுனானியில அரிப்புலேருந்து குட்டம் வரைக்கும் தோல் வியாதி, வயித்து நோய், மூல வியாதியக் குணப்படுத்துதாம்; அதுமட்டுமில்ல வயகரா எபக்டும் இருக்குங்குது. கூகிள்ல காந்தள்னு அடிச்சுக் கேட்டா அவனவன் காந்தள் காந்தள்னு உருகுற 17 சங்க இலக்கியத்தை எடுத்துக்கிட்டு வந்து போடுது. முருகனுக்குக் கால்ல போட்டானாம், போரப்போ கழுத்துல போட்டானாம். ஜிம்பாப்வே காரனும் இதைத்தான் தேசியப் பூங்குறான். அந்த ஊரு பெண்களமைப்புச் சின்னத்துல வரைஞ்சு வக்கிது. நம்ம ஊர்லேருந்து எடுத்துக்கிட்டுப் போயி ஒலகமெல்லாம் தொட்டிக்குத் தொட்டி வச்சு அழகு பாக்குறான். நா 25 ஏக்கராவுல போட்டிருக்கேன், யாருக்காச்சும் கெழங்கு வேணுமா, தண்டு வேணுமான்னு கேட்டுக்கிட்டு வலையில அலையுறான். ஏன்னா மருந்துக்கம்பெனி காரனுக்கு அது வேணும். ஏற்கெனவே கொல்ச்சிசின் (colchicine) அப்படின்னு ஒரு சரக்கைப் பிரிச்செடுத்து ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துறான். இதுக்கு மேலயும் எதாச்சும் தேறுமான்னு தேடுறான்.

இந்தியாவுல அழிஞ்சு போவுது சீக்கிரமாக் காப்பாத்துங்கய்யான்னு இந்திய சுற்றுப்புற-காட்டிலாகா அடிச்சுக்குற ஒரு செடி இது. ஐநா அமைப்பு சீக்கிரமாப் பாதுகாக்க வேண்டிய தாவரம்யான்னும், டில்லிக்காரன், ரொம்ப முக்கியமான மருந்துச் செடி, சுதேசிச் செடி, எந்தப் பயலும் இதை வெளிநாட்டுக்கு ஏத்தப்புடாது கைய வெட்டுவேன்னு அறிக்கை வுடுறான். சவ்வாது மலையிலேருந்து குத்தால மலை வரைக்கும் முந்தி இருந்துச்சாம், இப்ப இல்லையாம். இருக்க ஒன்னு ரெண்டையாச்சும் காப்பாத்துங்கய்யான்னு கை கூப்புது தமிழ்நாடு வனத்துறை. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இந்தக் காந்தளை வளக்கப் புடாதுன்னு எந்த நாடும் சொல்லலீங்க. சொல்லப் போனா இந்த அமைப்புகள் எல்லாஞ் சேந்து ஈழ மக்களுக்கு அவங்களோட சுற்றுப்புறச்சூழல் அக்கறைக்காகக் கை கூப்பனும்.

ஆனா இதுனாலெல்லாம் வெசமில்லன்னு நாஞ் சொல்றதா நெனைக்காதீங்க. வெசந்தான். தின்னா சாகலாம், சாகாமலும் போகலாம். இந்தியாவுல செடியே அதிகமில்ல, அதனால தின்னமாதிரி கேஸ் ரொம்ப அபூர்வம். இலங்கையில ஒரு கி.பி.1990 ஆராய்ச்சிப்படி 4556 பாய்ஸன் கேஸ் (விஷக் காளான், பூச்சி மருந்து... எல்லாம் சேர்த்து). அதுல கணக்குப் போட்டா 50 பேரு (சரியாச்சொன்னா 50.116 பேர்) இந்தக் காந்தளைத் தின்னிருக்கான். இதுக்கு என்னய்யா பரிகாரம் சொல்லுது அந்த அறிக்கை?, சொல்லிக்குடுங்க, எல்லாருக்கும் இது வெசமய்யா, திங்காதீங்கன்னு சொல்லுங்க அப்படிங்குது. அரளி வெதை, பூ, காய், இலை எல்லாத்தையும் தின்னுட்டு நம்ம ஊர்ல சாகற கேஸ் இதைவிட அதிகம். அதையும்தான் வீட்ல, ரோட்ல, கோயில்ல, கொளத்துல, ஆபீஸ்ல வளக்குறோம். அதுக்காக அதை வளக்கக் கூடாதுன்னு யாரும் குதிக்கலையே. அமெரிக்காவுல டெக்ஸாஸ் மாநிலம் கால்வெஸ்டன் நகரத்துல வித விதமா அரளிய வச்சு அலங்காரம் பண்ணி, "அரளி விழா"ன்னு கொண்டாடுறான். அதுக்காக அந்த ஊர்ல அரச்சு அரச்சுக் கோப்பயில ஊத்திக் குடிச்சுக்கிட்டா இருக்கான். இல்ல. ஏன்னா, "பாருங்கப்பா அழகாயிருக்கு ஆனா வெசம்"னு சின்னப் புள்ளயிலேருந்து பெரியாளு வரைக்கும் சொல்லிக் குடுக்குறான். அதே மாதிரி சொல்லிக் குடுத்தாப் போதும். அதவுட்டுட்டு அய்யோ வெசக்கூட்டம் வெசச்செடி வளக்குதுன்னு கூப்பாடு போட்டா என்ன அருத்தமுங்கறேன்? சொல்லுறதயெல்லாம் அப்புடியே நம்பிக்கிட்டு இருந்ததெல்லாம் அந்தக் காலமப்புன்னு எழுதினவங்கிட்ட சொல்லனும்போல இருக்கு.

0 comments: