மனசுக்குப் பட்டது

உறைந்தும் மேய்ந்தும் திரிகிறேன்.
சுனாமியில் வலைப்பதிவர்களின் பங்கு. தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றிப் பேசவில்லையாயினும் வலைப்பதிவர்களைப் பற்றிப் பேசியிருக்கிறது.

கபில் சிபல் தனக்குக் கிடைத்த சேதியை ஏன் தூங்கும் சோனியாவுக்குச் சொல்லக் காத்திருந்தார்? இவரை விசாரித்துத் தண்டிக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தைக் காட்டும்போதே கேளிக்கைக் கூத்துக்களாய்க் காட்டியதால் வந்த வினை. படித்த நாமும் வெத்துக் கவியும் வேண்டாப் பேச்சுமாய்க் கழித்ததால் வந்தது. பொழுது போக்குக்களைப் பொழுது முழுக்கச் செய்து கொண்டிருந்திருக்கிறோம். மக்களை அறியாமையில் வைத்திருந்ததில் அரசியல்வாதிகளுக்கு மட்டும் பங்கில்லை. கோழைகளாய் அடிமைப் படுத்தி வைத்திருப்பதில் மதவாதிகளுக்கு மட்டும் பங்கில்லை. நமக்கும் பங்கிருக்கிறது. உங்களுக்கும் எனக்கும். இந்த லட்சோப லட்சத்துக்கும் முன்னால் எத்தனையோ அழிந்தும் நாம் இதைக் கற்றுக் கொள்ளவில்லை. வேற்று நாட்டினர் துக்கம் அனுட்டிக்கும்போது கூட நம் தொலைக்காட்சித் தொழில்நுட்பம் பாட்டும் கூத்துமாய் அமர்க்களப்படும் அவலத்தைத் தடுக்க முடியவில்லை. வாயே திறக்காத போலித் தலைவர்கள், செய்கையறியாப் போலியமைச்சர்கள், கடமையறியாக் கற்றவர்கள் இவர்களால் கூட்டமாய்ப் புதையுண்டு போனது இவர்களையே நம்பியிருந்த மக்கள். இவர்களுக்காய்க் கொடி பிடித்து, இவர்கள் காட்டும் சாமியைக் கும்பிட்டுக் கடலில் கரைத்து, இவர்கள் கண்டுபிடித்த தொழில்நுட்பம் வீட்டுக்குள் படங்காட்டுவதற்குக் களிப்படைந்து இவர்களையே நம்பியிருந்தவர்கள். இவர்களை நாம் கொன்று விட்டோம். இப்போதும் கூடப் போலியாறுதல்கள், போலிக் கவிதைகளை நம் தலைவர்களாலும் கவிஞர்களாலும் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. இவர்களை மிதித்துத் தாண்டி, இருப்போரையாவது அறிவுடன் இருக்கச் செய்தல் நம் கடமை. சுரணையோடு இருக்கும் அந்த ஏழைக்குடிகளின் தன்மானத்தை அழிக்காமல் காக்க வேண்டும். நாலு வீடு கட்டிக் கொடுத்துப் பிச்சைக்காரராய் அவர்களைச் சாகடிப்பதை விட நீண்ட காலத் திட்டமாய் அவர்களுக்கு அறிவைத் தர ஏதாவது செய்ய வேண்டும். இங்கு நான் வெங்கட்டுடன் அறிவு பரவலாக்கத்தில் மறுபடியும் ஒத்துப் போகிறேன். அனாதையின் மயிறு பரவலாக்கம் என்ற கோவமும் நியாயமானதென்றாலும் உடனடிக் களையெடுப்புப் புரட்சிக்கு நாம் தயாராயில்லை. அதற்கு நமக்குப் பரவலான சுரணை இன்னும் வரவில்லை. இப்போதைக்குக் கொஞ்ச கொஞ்சமாயேனும் படித்தவர்கள் பொழுது போக்கு/இலக்கியங்களை விட்டு விட்டுக் குடிமக்களிடம் போயாக வேண்டும். இல்லையென்றால் காலம் நம்மை மன்னிக்காது.

5 comments:

said...

நல்ல பதிவு.

//இங்கு நான் வெங்கட்டுடன் அறிவு பரவலாக்கத்தில் மறுபடியும் ஒத்துப் போகிறேன். //

நானும் இதை ஒப்புகொள்கிறேன். 'அறிவு பரவலாக்கம்' என்று சொல்லபடுவதிலும், கொண்டு செல்லப்படும் அறிவின் தன்மையிலும் நிறய விமர்சனம் உண்டு. எல்லா பிரச்சனைக்கும் இந்த 'அறிவு பரவலாக்கம்' தீர்வு என்றும் நினைக்கவில்லை. அனால் அதை மீறி இந்த அறிவாவது கொண்டு பரவாலாக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

said...

nErmaiyAna karuththukkaL. uNmaiyum kUta! patiththavarkaL thangKaL pangkaI sariyAka seythAl, intha nilai mARum!

said...

உரத்து உளறுகிறேன்,பொறுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் கூறியுள்ள குறைகளுக்கெல்லாம் அடிப்படை கோளாறுகள் என்னவென்றால்:

1.தமிழக அரசியலில் "தகுதி இருப்பவர்கள்", 1967 க்கு பிறகு அரசாளும் தலைவர்களாக இருந்ததில்லை.நல்லவர்களான இரா.செழியன்,ப.நெடுமாறன் போன்றோருக்கு மக்கள் ஆதரவு இன்று வரை இல்லை.ஊழல்வாதிகள்,கொள்ளைக்காரர்களால் மாறி மாறி ஆளப்பட்டு வருகிறது தமிழ்நாடு மாநிலம்.

2.அரிதாரம் பூசியவர்களை பார்த்து எச்சிலொழுக வாய்பிளந்து, அவர்களை அரியாசனத்தில் ஏற்றுபவர்கள் நம் மக்கள்.மேலும் மக்களின் மனதில் வக்ர விதைகளை தூவும் குமுதம் போன்ற தாளிகைகள்,பிரித்தாளும் போக்கை கொண்டு செயலாற்றும் துக்ளக் போன்ற அரசியல் சஞ்சிகைகள் *பெரும்பான்மை* மக்களின் நலத்தை மனதில் கொண்டு செயலாற்றாமல்,வெற்றியுடன் இருந்துவருவது,நம் மக்களின் மரத்த மனப்பாங்கையே காட்டுகிறது.

3.நலிவுற்றோர்களுக்கு நிரந்தர தீர்வாக ஒழுங்காக ஏதும் நடந்ததில்லை.அதாவது-you give me a fish,you feed me for the day-you teach me how to fish,i can feed myself என்பது போல.

4.சுரணையோடு இருக்கும் அந்த ஏழைக்குடிகளின் தன்மானத்தை அழிக்காமல் காக்க வேண்டும்....

தற்காலத்திலும் இக்கூற்று உண்மைதானா...சினிமா மோகம்,உழைப்பை மறந்து அரசை நம்பி வாழ்தல் போன்றவை ஏழைக்குடிகளின் தன்மானத்தை மழுங்கடிக்க செய்யவில்லையா இன்னும்..?மேலும் சுரணை மட்டும் போதாது என்பதை நாம் நினவில் கொள்ள வேண்டும்.

5.இது என் நாடு,என்னுடைய மண்,என்னுடைய சாலை ..எனும் விழிப்புணர்வு அறவே கிடையாது.சுகாதார உணர்வு கூடுதலாக வேண்டும்.

6.தமிழக அரசியலில்,accountability என்பது படிப்படியாகக் கேலிக்குரியதாகி பல்லாண்டுகளாயிற்று.

7.தமிழக மக்களிடையே individual responsibility என்பதும் குறைவாக உள்ளதாகவே புலப்படுகிறது.

8.மக்களைப் போலவே அவர்களுடைய தலைவர்களும் என்பது உண்மைதான் என்பதை தமிழகம் நிரூபித்து வருவதாகத்தான் தோன்றுகிறது.

யோசித்தால் இன்னமும் சொல்லலாம் ;(
அடித்து துவைத்த சவம் என்றாலும் இவற்றை 1001 தடவையாக சொல்வதில் தவறில்லை,ஏனெனில் அதுதான் உண்மை.

நிற்க.

புலம்பெயர்ந்த தமிழகத் தமிழர்கள் தாய்மண்ணுக்கு நின்று நிலைக்கும் வகையில் (sustainable) உதவி செய்ய 'கடல் கொந்தளிப்பு பேரழிவு' ஒரு வாய்ப்பையளித்திருக்கிறது.

அமீரகத்திலிருக்கும் ETA போன்ற தமிழர்களால் நிர்வாகிக்கப்படும் நிறுவனங்கள்,வட அமேரிக்காவில் இருக்கும் தமிழர்களின் நிறுவனங்கள் ( உ.ம்: டலஸ்,டெக்சஸ் ல் இருக்கும் திரு.பால் பாண்டியனின் மென்பொருள் நிறுவனம்,இலினொய் ல் இருக்கும் திரு.ராம் துக்காராம் அவர்களின் நிறுவனம்) மற்றும் சிங்கை-மலேய பிறநாட்டுத் தமிழர்களின் நிறுவனங்கள் ஒன்றுகூடி,ஒரு லாப நோக்கற்ற-முற்றிலும் அரசு குறுக்கீடுகளற்ற நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும்...இந்நிறுவனத்தின் குறிக்கோள்கள்: ஏழ்மையை நீக்ககூடிய தரமான கல்வி பொருளற்றோர்களுக்கு சேர்வதற்கான செயல்கள்,மூடநம்பிக்கைகளை தகர்த்தல்,உழைப்பு ஒன்றே வாழ்வின் மேம்பாட்டிற்கு ஆதாரம் என்பதை மக்களிடையே பரப்புவது போன்றவற்றை அடிப்படைகளாக கொண்டிருக்க வேண்டும்.

நடுத்தர வர்க்கத்தினர் தன்னார்வலர்களாக தமது பங்கை மகிழ்வுடன் தரவேண்டும்..

இதுபற்றி - எப்படி இதை ஆரம்பிக்கலாம்,பொருள் படைத்த பலநாட்டுத் தமிழர்களை ஒன்று கூட வைக்க என்ன செய்யலாம் -என்பது குறித்து-குறைவாக பேசி/எழுதி -நிறைவாக செயலாற்றுவோர் ஒன்றுகூட வேண்டும்.

said...

வீச், அது அனாதை ஆனந்தன் (http://anathai.blogspot.com/).

said...

என்னய்யா..வெடிவேல், ஆளக் காணலை ரொம்ப நாளா..??