ஸ்ரீ என்பது தமிழ் எழுத்தே!

நமக்கு அரிச்சுவடியிலிருந்தே கற்பிக்கப்படுவது என்னவென்றால் ஸ்ரீ என்பது வடமொழி எழுத்தென்றுதான். ஆனால் ஒருநாள் திருமந்திரத்தின் சக்கரம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த ஸ்ரீ என்ற எழுத்து சி மற்றும் றீ என்ற எழுத்துக்களின் கூட்டுவடிவமே என்று புலப்பட்டது. இது ச என்ற எழுத்தின் ஒரு பகுதியையும், றீ என்ற எழுத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தைப் பாருங்கள். இவ்வடிவம் காலம் செல்லச் செல்லச் சிறிது சிறிதாக


உருமாறித் தற்போதைய ஸ்ரீ என்ற வடிவை அடைந்திருக்கிறது. இதுகுறித்து யாரேனும் முன்னமே எழுதியிருக்கிறார்களா என்று தெரியாது. தகவலிருந்தால் குறிப்பிடவும். இன்றும் ஈழத்தமிழர்கள் சிறீதரன், சிறீநிவாசன் என்று எழுதுவதைக் காண்கிறோம். ஆக, ஸ்ரீ என்பது தமிழ் எழுத்தே, அது வடமொழி எழுத்தல்ல என்றே தோன்றுகிறது. எக்காரணங்களால் ஸ்ரீ வடமொழி எழுத்து என்று பெயர்பெற்றது என்பதையறிய ஆவலுண்டாகிறது. மேலும் திருமந்திரத்தில் ம் என்ற உச்சரிப்பைக் குறிக்கச் சிறிய வட்டத்தையும் பயன்படுத்தியிருக்கிறார். உதாரணமாக ரீம் என்பதை "ரீ"க்குப் பக்கத்தில் ஒரு சிறிய வட்டத்தைப் போடுகிறார். இது ஐரோப்பிய எழுத்துக்களில் உதாரணமாக ஆங்க்ஸ்ட்ராம் என்பதன் குறியீடாக A என்ற எழுத்துக்கு மேலே போடுவோமே ஒரு வட்டம் அதனைப் போன்றதே. ஆனால் "ரீம்" இல் இவ்வட்டம் "ரீ"க்கு வலது பக்கத்தில் போடப்பட்டிருக்கும். இத்தகைய குறியீடுகளும் தற்காலத் தமிழில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமா என்ற கேள்வியை மொழியறிஞர்களிடமே விட்டுவிடுவோம்!

1 comments:

said...

//ஸ்ரீ என்பது தமிழ் எழுத்தே, அது வடமொழி எழுத்தல்ல என்றே தோன்றுகிறது.//

ஆமாம், ஆனால் நீங்கள் கண்டுபிடித்திருப்பது போன்ற சேர்க்கை அல்ல. பண்டு வடமொழிக்கு வரிவடிவம் இல்லை. முதலில், தமிழ் வட்டெழுத்துக்களை உருமாற்றி எழுத்துக் கண்டுபிடிக்கப் பெற்றது. அதுதான் க்ரந்தம். வால்மீகி தன் காவியத்தைக் கிரந்தத்திலேயே எழுதினாராகச் சொல்லப் படுகிறது.

மலையாளத்தில் 'சரி' என்று எழுதுகையில் வருகிற 'ச' தமிழ் 'ல'வை இடம் வலமாகத் திருப்பினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் அந்த 'ச' வடிவமும் 'ர'வுக்கு உரிய பகுதி அடையாளமும் 'ஈ'க்கு உரிய கொம்பும் இணைந்தது 'ஸ்ரீ'.

இது தமிழ்ச்சொல் 'சீர்' என்பதற்கு நிகரானது. 'சீர்வைகுண்டம்' 'சீர்இராப்பள்ளி' என்றிருப்பதே சரி. ஆனால் எல்லாவற்றிலும் தமிழையே காணவேண்டும் என்னும் ஆத்திரத்தால் பார்வை மங்கி, தமிழ்ச்சொற்களையும் வடமொழிச் சொற்களாக, தமிழர் வழக்குகளையும் வடவர் வழக்குகளாகக் காணும் நோய் நம்மிடை உண்டு (உழவுத் திருநாளில் ஆண்டுப் பிறப்பு இருந்ததை அறுவடை திருநாளுக்கு மாற்றியது இன்னோர் எடுத்துக்காட்டு).