சுஜாதா இன்னும் இறக்கவில்லை!

ஒவ்வொரு மரணமும் ஒவ்வொருவரையும் வெவ்வேறு விதங்களில் வினைபுரியத் தூண்டுகிறது. இதிலே ஒருவரைப் பற்றிய நிறுவப்பட்ட கதைகள் மற்றும் ஊடகங்களின் முன்னேற்பாடுகள் (பில்டப்புகள்) பெரும்பங்கு வகிக்கின்றன. பெருங்கூட்டத்தின் போக்கு சரியானதாகத் தோற்றம் பெறுகிறது. அதனால்தான் இராவண வதத்தையும், வீரப்ப சம்ஹாரத்தையும் கொண்டாடுகிறோம், நகுலனை அவரது எழுத்தழகையும் தாண்டி அனாதையாக அனுப்புகிறோம். தமிழ்ச்செல்வனுக்கு அழும்போது அழுகையைக் கண்டிக்கிறோம். சுஜாதாவின் மரணம் நிச்சயமாக எந்தவொரு மரணத்தையும் போலவே உற்றார், உறவினர், நண்பர்கள், விசிறிகள் என்பாருக்கு வருத்தத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில் அவர் வாழ்ந்த காலத்தில் எந்தெந்த மக்களை எதிர்த்து எழுதினாரோ, செயல்பட்டாரோ, எந்த மனிதாபிமானமற்ற தன்மைகளுக்குக் கொடி பிடித்தாரோ, அத்தகைய செயல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இப்போது இவ்வளவு அழுகை ஏன் என்று கேட்கிறார்கள். இன்னும் யாரும் இதைத் தீபாவளியாகக் கொண்டாடவில்லை, அல்லது அவர் ஒரு இந்துத் தீவிரவாதி அவருக்காக அழுவது சட்ட விரோதம் என்று யாரும் சொல்லவில்லை. எனவே மரணித்தவர் ஒவ்வொருவரையும் எப்படிப் பாதித்தாரோ அதே வகையிலேயே அவரது மரணத்தை எதிர்கொள்வதே நேர்மையாக இருக்க முடியும். அமைதியாக இருத்தல் போலி மனிதாபிமானத்தைக் காட்டுமே தவிர எழுத்து நேர்மையாக இராது. சுஜாதாவின் மரணத்தால் வருத்தமுற்றிருப்பவர்களுக்கு எனது உண்மையான ஆறுதல். அதே மாதிரி சுஜாதாவின் கருத்துக்களின் மீது விமரிசனங்களை இந்நேரத்தில் வைப்பதும் அவரவரது தேர்வு.

சுஜாதா இன்னும் இறக்கவில்லை. அவரது கதைகளிலும், கருத்துகளிலும், ஒவ்வொரு சொல்லிலும் இன்னும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்!

18 comments:

Anonymous said...

"அதே நேரத்தில் அவர் வாழ்ந்த காலத்தில் எந்தெந்த மக்களை எதிர்த்து எழுதினாரோ, செயல்பட்டாரோ, எந்த மனிதாபிமானமற்ற தன்மைகளுக்குக் கொடி பிடித்தாரோ, அத்தகைய செயல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இப்போது இவ்வளவு அழுகை ஏன் என்று கேட்கிறார்கள்"

இதன் மூலம் நீங்கள் சொல்ல
வருவது என்ன?. அவர் யாருக்கு
எதிராக எழுதியிருக்கிறார், எந்த
மனிதாபிமானற்ற தன்மைகளுக்கு
கொடி பிடித்தார் என்று விளக்குவீர்களா. இன்னும் குறிப்பாக
கேட்கிறேன், அவர் என்றாவது
சிங்கள் பேரினவாதத்தினை
ஆதரித்திருக்கிறாரா. இல்லை
தலித்கள் மீதான தாக்குதல்களை
ஆதரித்தாரா, துணை போனாரா.
நீங்கள் கருத்துத் தெரிவிக்காத,
விரலை அசைக்காத நல்லது,
கெட்டது உலகத்தில் ஆயிரம்
இருக்கும். அதை வைத்து
விட்டு உங்களையும்
இப்படி எடை போடலாமா.

said...

அநாநி, அவரது புனைவுப் பிரதிகளில் காணக்கிடைப்பதும் அவர்தான் என்பதுகூடப் பிரச்சினையில்லை. ஆனால் ஒரு அறிவுஜீவியாக, சமூகத்தின் கருத்தாக்கத்தில் பங்களிக்கும் வல்லமை கொண்ட ஒரு நபராக அவர் செயற்படும் தருணங்களில் தன் குரலை எதன் பொருட்டுப் பயன்படுத்தினார் என்பது விவாதத்துக்குரியது. பார்ப்பன சாதிச்சங்க மாநாட்டு ஆதரவு, தலித்திய விமர்சனங்கள், பார்ப்பனர்-யூதர் முன்வைப்புகள், எள்ளல்கள் முதலியவற்றின் தொடர்ச்சியாகத்தான் அவரைக் காணவியலும். பார்ப்பனீயத்துக்கும் மனுதர்மத்துக்கும் கொடிதூக்குவதை மனிதாபிமானம் என்று என்னால் சொல்ல முடியாது. அவர் கருத்துத் தெரிவிக்காமல் இருப்பது அவரது தனிப்பட்ட சுதந்திரம் என்று விட்டுவிட முடியாது. எங்கு எதனால் எதுகுறித்து அவர் அமைதியாக இருந்தார் என்பதும் கவனத்துக்குரியதே. இது சுஜாதாவுக்கு மட்டுமல்ல, சமூக நிலையில் செயற்படும் எல்லோருக்கும், (ஒரு சிறிய அளவில் உங்களுக்கும் எனக்கும்கூட) இது பொருந்தும்.

சுஜாதா மீதான விமர்சனங்களைக் கண்டித்தவர்களைக் குறித்து எழுதப்பட்டதே இப்பதிவு.

Anonymous said...

சுஜாதா தலித் விரோதியல்ல.யூதர்-பார்பனர் குறித்து சொன்னது அசோகமித்திரன், சுஜாதா அல்ல.
யாழ் நூலக எரிப்பு குறித்து அவர் எழுதியிருக்கிறார்.
அவர் பதவியிலிருந்து ஒய்வு பெறும்
வரை சில கட்டுப்பாடுகள் இருந்தன.அப்போது அவர்
ஒரு அரசு ஊழியர். அரசு ஊழியராக
இல்லாத கருத்து சுதந்திரம் உள்ள
உங்களையும் உள்ளடக்கிய
பல்கலைகழக ஆய்வாளர்கள்,
அறிவுஜீவிகள் எங்கெல்லாம்
எப்படியெல்லாம் ஏகாதிபத்தியத்தையும்,இன்ன பிறவற்றையும் எதிர்க்கிறீர்கள், சொல்லிலும், செயலிலும்
என்பதை தெரிவிப்பீர்களா.
ஏனெனில் எங்கு எதனால் எதுகுறித்து நீங்கள் அமைதியாக இருந்தீர்கள் என்பதும் கவனத்துக்குரியதே என்பதை ஒப்புக்கொள்வீர்கள்தானே.

பொடாவில் நக்கீரன் கோபால் கைதான போது அதை எதிர்த்து
எழுதினார். அவர் என்றைக்கு
மனுதர்மத்திற்கு ஆதரவாக
எழுதினார், இல்லை சாதிய
அடுக்குமுறை சரியானது
என்று வாதிட்டார். சான்று தர முடியுமா.

உலகில் நடக்கும் எல்லா அநியாயங்களுக்கும்
எதிராக நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள், சுஜாதா கொடுக்கவில்லை.புஷ்ஷின் ஈராக்
படையெடுப்பு உட்பட பலவற்றை
நீங்கள் இயக்கங்கள் கட்டி முண்ணனி
வகித்து எதிர்த்தீர்கள், சிறை சென்றீர்கள், வழக்குகளை சந்தீதிர்கள், அவர் எதிர்க்க
வில்லை. சுருக்கமாக்ச் சொன்னால்
நீங்கள் புரட்சி செய்யும் கலககாரர்,
அவர் மனுவாதி. நாங்கள் உங்களைப் போன்ற தேநீர் கோப்பை இணைய
புரட்சிக்காரர்களை தினமும் பார்க்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்து கொண்டு இணையத்தில் அசுரன்களாக
வளையவரும் போலிப் புரட்சி வீரர்களை எங்களுக்கும் தெரியும்.
அந்த புரட்சி எல்லாம் வலைப்பதிவில்
துவங்கி அங்கேயே மரணமடைந்து
விடும். அந்த அற்பபுரட்சியாளர்கள்
சுஜாதாவின் மரணத்தினை கொண்டாடினார்கள்.சுஜாதாவின் சாவினைச் சிலர்
கொண்டாடுகிறார்கள், அதை
ஆதரிக்கிறேன் என்று நேரடியாக
எழுதியிருக்கலாமே, ஐயா அது நேர்மையாக
இருந்திருக்கும்.

சுஜாதாவை விமர்சியுங்கள், அவர்
எழுத்துக்களை விமர்சியுங்கள்.
அதைச் செய்யும் போது புரட்சிக்கார
கலகக்கார முகமூடி அணிந்து
கொள்ளாதீர்கள். holier than
thou என்ற அணுகுமுறையுடன்
செய்யாதீர்கள். ஏனெனில் உங்களையும் அதே அளவுகோல்களுடன்
அதே முறையில் எங்களாலும்
மதிப்பிட முடியும்.

Anonymous said...

//பார்ப்பன சாதிச்சங்க மாநாட்டு ஆதரவு, தலித்திய விமர்சனங்கள், பார்ப்பனர்-யூதர் முன்வைப்புகள், எள்ளல்கள் முதலியவற்றின் தொடர்ச்சியாகத்தான் அவரைக் காணவியலும்//

மேலே உள்ளது வெறும் அவதூறாகத்தான் தெரிகிறது. Making a mountain out of a mole hill என்ற மாதிரிதான் இருக்கிறது.

//அவர் வாழ்ந்த காலத்தில் எந்தெந்த மக்களை எதிர்த்து எழுதினாரோ, செயல்பட்டாரோ, எந்த மனிதாபிமானமற்ற தன்மைகளுக்குக் கொடி பிடித்தாரோ, //

என்ன என்னவென்று பட்டியலிட முடியுமா? ஐம்பத்து மூன்று வருட எழுத்துலக வாழ்க்கையில் தமிழனாக நீங்கள் பெருமையுறும் வகையில் ஒரு சாதனை கூடவா அவர் செய்யவில்லை என்று மனசாட்சியுடன் சொல்ல முடியுமா?

இந்த அவதூறை நீங்கள் உங்கள் சொந்தப் பெயரில் பதிவு செய்கிறீர்கள். அதை கேள்வி கேட்க நான் பெயரிலியாக வர வேண்டியிருக்கிறது. ஏனென்றால் உங்கள் அவதூறின் ஆதாரப் புள்ளியும் அதன் தொடர்ச்சியாக இந்த விவாதம் எங்கு திசை திரும்பும் என்பதும் எமக்குத் தெரியும்.

வாழ்க உமது அரும் தொண்டு!

Anonymous said...

இந்த அவதூறை நீங்கள் உங்கள் சொந்தப் பெயரில் பதிவு செய்கிறீர்கள். அதை கேள்வி கேட்க நான் பெயரிலியாக வர வேண்டியிருக்கிறது. ஏனென்றால் உங்கள் அவதூறின் ஆதாரப் புள்ளியும் அதன் தொடர்ச்சியாக இந்த விவாதம் எங்கு திசை திரும்பும் என்பதும் எமக்குத் தெரியும். //

அதேதான்.

said...

அவரது கற்றதும் பெற்றதும் கட்டுரைகளீல் எத்தனையோ ஈழத்தமிழர்களின் கவிதைகளைத் தந்துள்ளார். அவற்றில் பெரும்பாலான கவிதைகள் போராட்டம், ஆக்கிரமிப்பு பற்றியவை.

said...

அநாநி1,
யூதர்-பார்ப்பனர் ஒப்பீடு சுஜாதாவினது அல்ல, ஒத்துக்கொள்கிறேன்.
சுஜாதாவின் மரணத்தில் நான் மகிழ்ச்சியுற்றிருந்தேன் என்றால் அதை நான் சொல்லிக் கொள்வதில் தயக்கம் காட்டப் போவதில்லை. ஆனால் இங்கே அதுவல்ல பிரச்சினை. அல்லது நான் என்ன புரட்சி செய்கிறேன், என் தகுதி, என் தேநீர், நான் ஹோலி- நீங்க போலியா என்பதுமல்ல பிரச்சினை. ஒரு எழுத்தாளருக்கு மற்ற எழுத்தாளர்களை விட, இலக்கிய வீச்சில் சற்றும் குறையாத எழுத்தாளர்களை விட, ஏன் இவ்வளவு ஒப்பாரி என்பதுதான். இது எதனால் கட்டமைக்கப்படுகிறது. இதனை முன்னெடுப்பது எது? டோண்டுவின் பதிவிலிருந்து சுஜாதாவின் நினைவுக்கூட்டத்தில் யாரோ ஒருவரைத் தவிர ராம்மோகன் என்ற ஸ்டெல்லா புரூசின் பெயரை உச்சரித்த நினைவில்லை. அவருக்கு 1 புள்ளி, இவருக்கு 100 என்று ஒப்பாரிக் கணக்கெல்லாம் போட்டுப் பார்க்க முடியாது. ஆனால் இலக்கியத்தில் பொதுமக்களிடத்தில், வலைப்பதிவுகளில் இருக்கின்ற பொதுவிடத்தை இவ்வளவு ஆக்கிரமிக்கின்ற வகையில் சுஜாதா பற்றிய ஒரு பிம்பம் கட்டியெழுப்பப்படுகிறது. அதை எதிர்த்துக் குரல்கள் கிளம்ப வேண்டியது அவசியம். இதைத்தான் சொல்ல வருகிறேன். இதோ ஞானப்பீடம் செயகாந்தர் சொல்லிவிட்டார், சுஜாதாதான் கணினி என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார் என்று. எல்லாத்தையும் தமிழாக்க முடியாது கம்பூட்டர் கம்பூட்டர்தான்னு அந்தக் காலத்துல ஏன் எதற்கு எப்படியில சுஜாதா எழுதியிருக்காருங்கறாரு ஒருத்தர். இன்னொருத்தர் 70களிலேயே பல்கலைக்கழகங்களில் அவ்வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார். இப்போ எல்லோரும் கணினிங்கற வார்த்தையை சுஜாதாதான் கண்டுபிடிச்சாருன்னு கூவப் போறாங்க. அதுவே கணினி வரலாறாகவும் ஆகிப்போகும். ஒவ்வொரு மரணத்தையும் (அது எந்தப் பக்கம் நிகழ்ந்தாலும்) அரசியலாக்கி, ஆதாயம் காணும் அதிகார மையங்களின் கூப்பாடுதான் அதிகமாகக் கேட்டது, அவரை இழந்த அன்பர்களின் அழுகையைவிட. என்னிடம் போதிய நேரமிருந்தால் சுஜாதா எங்கு எதைப் பற்றி எப்படி எழுதினார் அதிலென்ன தவறு என்பதை எழுதிக் கொண்டிருக்கலாம். அதுவல்ல எனது நோக்கம். நன்றி.

அநாநி2, 3 அல்லது 1/2:
//எமக்குத் தெரியும்// - அப்படியென்றால் ஒரு குழுவாகத்தான் இதை நெடுங்காலமாகச் செய்கிறீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். அதாவது சுஜாதாவின் இறப்புக்கு முன்பிருந்தே. அந்தக் குழுவின் மீதும், அதன் நோக்கங்களின் மீதும் நம்பிக்கையற்றவராக இருக்கிறீர்கள். அந்தக் குழுவின் மீது தீர்க்கப்படாத விவாதங்கள் தொடர்ந்து நடைபெறுவதும் அவற்றிலே நீங்கள் வலு குன்றியிருப்பதால் அவற்றை நீங்கள் விரும்பவில்லை என்பதும் தெரிகிறது. நானும் அதனை இங்கே நிகழ்த்துவதற்கு எனக்குக் காலமில்லை. இருந்தாலும் உங்கள் மறுமொழிக்கு நன்றி! உங்களது பல்டிக்கு ஒரு யோசனை: நான் எப்போதுமே எனக்கு என்பதை எமக்கு, நான் என்பதை நாம் என்றுதான் சொல்லிக்கொள்வோம் என்று சொல்லிவிடுங்கள். பிரச்சினை இருக்காது.

நன்றி வந்தியத்தேவன், அவற்றில் சிலவற்றை நான் படித்திருக்கிறேன். பொதுமக்களிடம் பல கருத்துக்களைப் பரவ விட்டவர் என்ற விதத்தில் சுஜாதா மீது எனக்கு மதிப்புண்டு.

said...

ஆவணப்படுத்தலுக்காக
1
ஜெயபாரதியின் கட்டுரையை நண்பர் நா. கணேசன் ஒரு முறை கண்டு இணைப்பினைத் தந்திருந்தார்
2

Anonymous said...

//அநாநி2, 3 அல்லது 1/2:
//எமக்குத் தெரியும்// - அப்படியென்றால் ஒரு குழுவாகத்தான் இதை நெடுங்காலமாகச் செய்கிறீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். அதாவது சுஜாதாவின் இறப்புக்கு முன்பிருந்தே. அந்தக் குழுவின் மீதும், அதன் நோக்கங்களின் மீதும் நம்பிக்கையற்றவராக இருக்கிறீர்கள். அந்தக் குழுவின் மீது தீர்க்கப்படாத விவாதங்கள் தொடர்ந்து நடைபெறுவதும் அவற்றிலே நீங்கள் வலு குன்றியிருப்பதால் அவற்றை நீங்கள் விரும்பவில்லை என்பதும் தெரிகிறது. நானும் அதனை இங்கே நிகழ்த்துவதற்கு எனக்குக் காலமில்லை. இருந்தாலும் உங்கள் மறுமொழிக்கு நன்றி! உங்களது பல்டிக்கு ஒரு யோசனை: நான் எப்போதுமே எனக்கு என்பதை எமக்கு, நான் என்பதை நாம் என்றுதான் சொல்லிக்கொள்வோம் என்று சொல்லிவிடுங்கள். பிரச்சினை இருக்காது.
//

அனானி2: சத்தியமாக புரியவில்லை. ஒரு வகையில் இப்படிப் பட்ட வாதங்கள் புரியாமல் இருப்பதில் எமக்கு / எனக்கு / என் ஆன்மாவிற்க்கு / என் மனதிற்க்கு / என் உள்ளத்திற்க்கு மகிழ்ச்சியே.

உங்களைப் (மரியாதை நிமித்தமாக... ஒரு குழுவையோ, அமைப்பையோ, இனத்தையோ குறிப்பிடும் முறையில் அல்ல) போல் அவதூறுகளை பட்டியலிட்டு எழுதிவிட்டு பிறகு போகிற போக்கில் 'ஆம். அது அவர் செய்தது அல்ல' என்று ஒரு சிறு குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் சொல்ல முடியாது. அதற்கும் சேர்த்தே மகிழ்ச்சியுறுகிறேன்.

//சுஜாதாவின் நினைவுக்கூட்டத்தில் யாரோ ஒருவரைத் தவிர ராம்மோகன் என்ற ஸ்டெல்லா புரூசின் பெயரை உச்சரித்த நினைவில்லை. அவருக்கு 1 புள்ளி, இவருக்கு 100 என்று ஒப்பாரிக் கணக்கெல்லாம் போட்டுப் பார்க்க முடியாது. //

ஒருவரின் நினைவுக்கூட்டத்தில் இன்னொரு எழுத்தாளரின் மறைவுப் பற்றி இரங்கலை எதிர்பார்ப்பது என்ன அடிப்படையில் என்று புரியவில்லை. ஒப்பாரிக் கணக்கை நீங்கள் போட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தேவை இருப்பது போல் தெரியவில்லை.

//அதை எதிர்த்துக் குரல்கள் கிளம்ப வேண்டியது அவசியம்.//

நல்ல சித்தாந்தம். இப்படிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்கு வடிகால்கள் தேவைதான்.

said...

//மரணித்தவர் ஒவ்வொருவரையும் எப்படிப் பாதித்தாரோ அதே வகையிலேயே அவரது மரணத்தை எதிர்கொள்வதே நேர்மையாக இருக்க முடியும். //


நல்ல வரிகள்..! அதுதான் உண்மையும்கூட.!

said...

///உலகில் நடக்கும் எல்லா அநியாயங்களுக்கும்
எதிராக நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள், சுஜாதா கொடுக்கவில்லை.புஷ்ஷின் ஈராக்
படையெடுப்பு உட்பட பலவற்றை///

இல்லை. சாதமை தூக்கில் இட்ட போது, புஷையும் தூக்கில் இட்டிருக்க வேண்டும் என்று க.பெ வில் எழுதினார்.

அவரை ஒரு பார்பனவாதியாகவோ, bias உள்ள ஒரு மனிதராகவோ பார்க்க முடியவில்லை.

said...

//அவரை ஒரு பார்பனவாதியாகவோ, bias உள்ள ஒரு மனிதராகவோ பார்க்க முடியவில்லை.//

அருமை கே.ஆர்.அதியமான் சார்.

பார்ப்பனர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு “அவர்களை (தமிழர்களை) விட அதிகமாக சாதித்தவன் நான்” என்று மேடையில் முழங்கியவரை பார்ப்பனவாதியாக பார்க்கமுடியாத உங்கள் பார்வை அதிசயிக்க வைக்கிறது.

said...

லக்கி,

சுஜாத்தாவை ஒரு பார்பனவாதி என்று பல ஆண்டுகள் இகழ்ந்து கடுமையாக தனிமனித‌ தாக்குதல் நடத்தியதால், அவர் பார்பனல்லாத தமிழர்க‌ளை 'அவர்கள்' என்று குறிப்பிட்டிருப்பார். (சோ அந்த நிகழ்ச்சிக்கு வந்த அழைப்பை நிராகரித்துவிட்டார்).
சுஜாத்தா எதார்தமாகத்தான் அவ்வாறு பேசியிருப்பதாக நான் நினைக்கிறேன்.
ஒரு வன்னியர் சங்க மாநாட்டிலோ, தேவர், நாடர், கவுண்டர் சங்க மாநாட்டிலோ, கிருஸ்த்துவ, இஸ்லாமிய, மாநாடுகளிலோ பேசப்படும் 'அவர்கள் / நாம்' என்ற சொல்லாடல்களுக்கும் இதற்க்கும் வித்தியாசம் இல்லை. மேலும் அவர் கூறியது உண்மைதான். !! :))

சுஜாத்தா பார்பனியத்தை, இந்துத்வாவை, அல்லது வேறு எந்த அடிப்படைவாதத்தையாவது 'ஆதரித்து' எழுதியதை எடுத்துக்காட்டுங்கள்.
காஸ்மீர் பற்றி, இட ஒதுக்கீடு பற்றி, ஈழப்போர் பற்றி, ஒரு சராசரி பார்பனரின் கண்னோட்டம் அவ‌ருக்கு இல்லை என்ப‌தே என‌து புரித‌ல்.

க‌லைஞ‌ர் முத‌ல் ப‌ல் 'திராவிட‌ த‌மிழ‌ர்க‌ள்' அவ‌ருக்கு நேரில் அஞ்ச‌லி செலுத்திய‌து ஏன் ?

பார்ப‌னீய‌ எதிர்ப்பு என்ப‌து வேறு, பார்ப‌ன‌ர்க‌ளை வெறுத்த‌ல் என்ப‌து வேறு என‌ப‌து ப‌ல‌ருக்கும் புரிய‌வில்லை. ஞாநியயை ஒரு பார்பனராக மட்டும் இப்பொது பார்பது 'பகுத்தறிவு' அல்ல. பல ஆண்டுகள் பார்பனிய இந்துதவத்தை எதிர்வர் அவர்.

Anonymous said...

நாலு நாளைக்கு முன்னாலே ஒரு கமண்ட் போட்டேன். வரலியே?

said...

பிரகாஷ், வரலையே. மறுபடியும் போட முடியுமா?

(சில அனானிகள் 'நல்லாசி' வழங்கிய மறுமொழிகளை மட்டும் விட்டுவிட்டு ஏனையவற்றை வெளியிட்டே வருகிறேன், இதுநாள் வரையில் - ஒரு தகவலுக்காக).

Anonymous said...

நீங்க சென்சார் செய்யக்கூடியவர் இல்லைங்கறது தெரியும்... இருந்தாலும், ஸ்பாமிலே மாட்டிக் கொண்டிருந்தால் தேடி எடுத்து வெளியிட வசதியாக இருக்கும்னுதான் மறுமொழி போட்டேன்..

நோ ப்ராப்ளம்... என்கிட்டே ஒரு பிரதி இருக்கு... அதை இங்கே ஒட்டறேன்.

*********

(உயிர்ப்) பிரிவுபசாரச் சடங்குகளிலே பேசப்படும் மிகைப்படுத்தப் பட்ட விஷயங்களுக்கு, புலம்பல்களுக்கு அத்தனை தூரம் முக்கியத்துவம் தரத் தேவையில்லை என்பது என் கருத்து.

எத்தனை கொடுமைக்காரனாக இருந்தாலும், அவன் இறந்த பிறகு, அவனுடைய புகைப்படத்துக்கு, மாலை
மரியாதை குங்குமம் இட்டு, தெய்வமாக ஆக்கும் - அட்லீஸ்ட் அவனது குடும்பத்தினர் - கலாச்சாரப் பின்னணி கொண்ட தமிழ்ச் சமூகத்திலே, தங்களை, தங்கள் ரசனைகளை மேம்படுத்தியவர் என்று நம்பக் கூடிய ஒருவர் இறக்கும்
தருவாயிலே, அவர் மீது மதிப்பு கொண்டவர்கள் வைக்கும் ஒப்பாரிகளிலே மிகைத்தன்மை இருப்பது புரிந்து கொள்ளத் தக்கதே. இது ஒரு இயல்பான விஷயமாகவே எனக்குப் படுகிறது.

//ஒரு எழுத்தாளருக்கு மற்ற எழுத்தாளர்களை விட, இலக்கிய வீச்சில் சற்றும் குறையாத எழுத்தாளர்களை விட, ஏன் இவ்வளவு ஒப்பாரி என்பதுதான். இது எதனால் கட்டமைக்கப்படுகிறது. இதனை முன்னெடுப்பது எது?//

உங்களைத் தொடர்ந்து வாசிக்கிறவன் என்கிற முறையில் இந்த rhetoric க்கு அர்த்தம் என்ன என்பதை புரிந்து
கொள்ள முடிகிறது. 'ஆனைக்கு அர்ரம், குதிரைக்குக் குர்ரம்' என்ற ரீதியிலான இந்த அணுகுமுறை தவறானது. '

சுஜாதாவின் மறைவுக்கு ஒப்பாரி வைத்தவர்கள் அனைவரும்' என்று பொதுப்படுத்துவதன் மூலம், அத்தனை
பேரையும், ஒரே வட்டத்துக்குள் அடக்க முயல்கிறீர்கள். இப்படிப் பட்ட ஒற்றைப் படையான சிந்தனைகள்,
தலைமுறை தலைமுறையாக, பாமரக்கூட்டம் ஏன் தன்னுடைய ரசனைகளை மாற்றிக் கொள்கிறது,
எப்படிப்பட்டவர்களை, எந்த காரணத்துக்காகப் போற்றிப் புகழ்கிறது , யாரை, எந்தக் காரணத்துக்காக, ரோல்மாடலாகக் கொள்கிறது, அப்படி என்னத்தைத் தந்துவிட்டார் என்பதற்காக, அந்த ஆசாமியின் மேலே ஈஷிக்
கொண்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு செய்ய வேண்டிய சோஷியல் ரிசர்ச்சுக்குத் தடையாக அமையும்.

சுஜாதா இறந்ததிலிருந்து, இன்று வரையிலும், நன்றி சொல்லி, வருத்தம் தெரிவித்து எழுதப்பட்ட ஐநூற்றுச் சொச்சம் இடுகைகள் ( தமிழில் இருநூறு, ஆங்கிலத்தில்
முன்னூறு
) அனைத்துக்கும் காரணம், எல்லோரும் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்பதுதானா? இந்த over simplification உங்களுக்கே அதிகப்படியாகத் தெரியவில்லையா?

சுஜாதா மீது விமர்சனம் வைக்ககூடாது என்பதில்லை. அவருடைய தனிமனித பலவீனங்கள் சார்புகள் அவருடைய
எழுத்தில் பிரதிபலித்தது என்பது உண்மைதான். சுற்றி இருக்கிறவர்கள் ரத்தம் சிந்திக்கொண்டிருந்த போது, அவர் தன் மூட்டு வலியைப் பற்றி லட்சக்கணக்கான வாசகர்களிடம் பிரஸ்தாபம் செய்து கொண்டிருந்தார் என்பது உண்மைதான். ஆனால், அந்த பலவீனங்கள் அவருடைய சில பல அச்சீவ்மெண்ட்டுகளை நிராகரிக்கக் கூடிய அளவுக்கு முக்கியமான காரணியாக இருந்ததா என்பது, ஆராயச்சிக்குரிய விஷயம். அதை முறையாக content analysis செய்து, தரவுகளுடன் நிரூபிப்பதையே எதிர்பார்க்கிறேனே தவிர்த்து, 'பெருக்கித் தள்ளப்படும்' வாசகங்களை அல்ல.

said...

"... நம்மை அவர்கள் தமிழர்கள் அல்லர் என்கிறார்கள், நமக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள். நான் திருக்குறள், சிலப்பதிகாரம் இவைகளுக்கெல்லாம் உரையெழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களைவிட நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன்...."

இது பிராமணர் சாதி சங்க மாநாட்டில் சுஜாதா சொன்னது.

"பார்ப்பனர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு “அவர்களை (தமிழர்களை) விட அதிகமாக சாதித்தவன் நான்” என்று மேடையில் முழங்கியவரை ..."

லக்கி, இது சுஜாதா சொன்னதாக நீங்கள் சொன்னது.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணருமளவில் இருப்பீர்கள் என்றே நம்புகிறேன் (உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன் என்ற அளவில்)

அன்புடன்
முத்துக்குமார்.

said...

பிரகாஷ்,
அவரது படைப்புகள் குறித்த ஆராய்ச்சிகள் நிச்சயம் அவசியமே. அவரது சாதனைகள் பாராட்டப்படக் கூடியவையே. என் கேள்வியெல்லாம் வேறு என்பதை முன்னமேயே சொல்லிவிட்டேன். அதே போல எல்லோருடைய வருத்தத்தையும் ஒரே தளத்திலும் நான் வைத்துப் பார்க்கவில்லை. நன்றி.