தொடர் நினைவு

வாழ்க்கையெனும் ஓடத்தில் நான் போன இடங்களில் டில்லியும் ஒன்னு. ஓடத்துல போகலை. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ். ரெண்டு ரா, ஒரு பகல். ரயில்ல உட்கார்ந்து எழுதப் பிடிக்கும். படிக்கலாம். நல்லா நீட்டிப் படுத்துத் தூங்கலாம். கதவுக்கிட்ட நின்னு சூரிய உதயம், மறைவு, போற ஆறு, மலை, நிலத்தையெல்லாம் பார்த்துக் கரையலாம். ரயில்லேருந்து தாஜ்மகால் தெரியுமா, யமுனை தெரியுமா, மதுராபுரி தெரியுமா? ம்ஹூம். காட்டுக்குள்ள ரயில் போறப்ப அந்த அடர் பச்சையுள் யாரையோ தேடுவேன். புல்லரிக்கும் சில நேரம்.

ஆரவாரமாய் ஓடிய ரயில், ஒரு ஆளில்லா வெளியில் அமைதியாய்ச் சமிக்ஞை விளக்குக்கு நின்றிருக்கும் வேளைகளில் கால்களின் கீழ்க் கருங்கற்கள் சரக் சரக்கென்று நெரிபடக் கையில் கடப்பாறையோ என்னவோவுடன் ஒரு ரயில்வேத் தொழிலாளி
நடந்து கொண்டிருப்பார். அவரின் தனிமையின் பின்னாடியே மனசு போகும். சமிக்ஞை கிடைத்து ரயில் போகும்.

சில நேரங்களில் கதை பேசவும், உட்கார்ந்து விளையாடவும் சின்னப் பிள்ளைகள் வாய்ப்பதுண்டு.

ஒவ்வொரு முறை பயணிக்கும்போதும் ஒரு கதை சொல்லலாம் போல் நிறைய நடக்கும். ஒன்று மட்டும். நாக்பூரோ எங்கேயோ, ஒரு நிலையத்தில் ரயில் நின்றிருந்தது. திடீரென்று ஹே கரம்பக்குடி என்று சத்தம். என்னை இப்படியும் சில நண்பர்கள் அழைப்பதுண்டு என்று முன்பொருமுறை சொல்லியிருக்கிறேன். யாரடா இந்த ஊரிலே என்னைக் கூப்பிடுவது என்று திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒருத்தர் தட்டில் ஏதோ பலகாரத்தை வைத்துக் கொண்டுதான் இப்படிக் கூப்பாடு போட்டார். பார்த்தால் அது சூடான பக்கோடா. (கரம்னா சூடு, பக்கோடாவை பக்கோடி என்று ஹிந்திக்காரர்கள் சொல்வார்கள்.) கூவி விற்கும் ராகத்தில் குடி, கொடி, கோடி எல்லாம் ஐக்கியம். கதையை டில்லியில் சொன்னபோது என் ஊர்ப்பெயர் இன்னும் நன்றாய்ப் பதிந்து போனது அவர்களுக்கு!

0 comments: