சாதிகள் உண்டென்று சொல்வோம்

வீட்டுக்காரம்மா ஊருக்குப் போயிட்டா நம்ம மேல அனுதாபம் கூடிப் போயிருது. நமக்கும் மத்தவங்களுக்கும். சாப்பிட எங்க வீட்டுக்கு வா அப்படின்னு அப்பப்ப அழைப்பு. நேத்து போனது ஒரு நண்பன் வீட்டுக்கு. பிரெஞ்சுக்காரன். மனைவியோடிருக்கிறான். கொஞ்சம் சோமப்பால். சொல்லமுது. அரட்டை நகர்ந்து முதற்பேர், கடைசிப்பேர், காசியண்ணா எழுதின அக்கப்போருக்குப் போனது. முன்பே சொல்லிருக்கேன். மறுபடியும் சொன்னேன். கடைசிப்பேர்லேர்ந்து இன்னுங்கொஞ்சம் நகர்ந்து சாதிப்பேருக்குள்ள போச்சு பேச்சு. இது தெரியாத ஆளில்லையவன். படிச்சிருக்கான். எல்லாருக்கும் புத்தக வாசத்தை விட அனுபவிச்சவ வாய் வாசகம் வேணும். சொன்னேன்.

நாலு இருக்குடா. அவனவன் வேலையை அவனவந்தான் செய்யணும். அதான் தருமம். குல தருமம். பிறப்பறுத்து உய்ய வழின்னு சொல்லிருக்காங்க. இத யாரு கண்டுபுடிச்சதுன்னு வெறியாய்க் கேட்டது தம்பதி. அடங்குங்க. நாங்க அடங்கலயா. அடக்கலயா. மனுவையும் தாண்டி சுயம்பா வந்ததெல்லாம் வேற கதை. இப்பவுமா அப்படியே இருக்கு? அப்படியே இல்ல. ஆனா வேற மாதிரி இருக்கு. இதோ இந்த வலைப்பூக்கள்ல கூட மினுமினுக்கும் பாருங்க. நாளாகும். மாற ரொம்ப நாளாகும்.

நேத்துத் தின்ன பிரெஞ்சுச் சோறு செரிச்சிருச்சுப் போச்சு. அந்த நினைப்பும் பேச்சும் கழியலை. நம்ம என்ன செய்யனும்னு நான் நினைக்கிறேன்னா, சொல்லுங்க. பாக்குற வேத்து நாட்டுக்காரன்/காரிகிட்ட சொல்லுங்க, எங்க ஊர்ல சாதி இருக்கு, எங்க ஊர்ல வயல் வேலை செய்யுற பறக் கருப்பனை வீட்டுக்குள்ள கூப்பிட்டுச் சாப்பாடு போடமாட்டோம். எங்க ஊர்ல கோயிலுக்கு உள்ள போகச் சாதி வேணும். சாமியத் தொடச் சாதி வேணும். உடம்பை வருத்தி வேலை செய்றவனைத் தொட்டாத் தீட்டு. பாத்தா தோஷம். கேட்டா அதான் மதம். மத தர்மம். குலப் பெருமை. இன்னும் உங்களுக்கு அனுபவமே இல்லாமயா இருக்கும். யோசிச்சுப் பாருங்க. அதையும் சொல்லுங்க. நாட்டுக்குத் தலைக்குனிவுதான். வெக்கந்தான். ஆனாலும் சொல்லுங்க. இதுக்கும் இனவெறிக்கும் பெருசா வேற்றுமை இல்லன்னு ஊரு ஒலகமெல்லாம் தெரிஞ்சுக்கட்டும். இந்திராநகர், இரண்டாம் வீதி, 18ம் நம்பர் வீட்ல பொறந்ததால நீங்க கீழ்ச்சாதின்னு சொல்லுங்க. நாளைக்கு உங்களைப்பாத்தா அவனுக்கு சாதீன்னு நினைப்பு வரணும், அந்த அளவுக்குச் சொல்லுங்க. சொல்லாம இருக்கதுதான் தப்பு. அவமானம்.

இது என்ன ஒலகத்துக்குத் தெரியாதான்னு கேக்காதீங்க. நாஞ்சொல்றேன், தெரியாது. முத்துகிட்ட கேட்டுப் பாருங்க, உங்க ஊர்ல குடை இருக்கா, மழை இருக்கான்னு ஜெர்மனில கேக்குறாங்க. பொதுஜனமில்ல, படிச்சவங்க, பெரிய படிப்பு படிக்கிறவங்க. அப்படின்னா படிக்காதவங்களுக்கெல்லாம் என்னன்னு தெரியும்? யாரு சொல்லுவா? புத்தகம் சொல்லாது. இருக்கதை அப்புடியே சொல்லாது. நீங்க சொல்லுங்க. நான் சொல்றேன். சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் சொல்றேன். நல்லாயிருக்குன்னு பூசி மழுப்புறதை விட இப்படிச் சொல்றதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. அப்பதான் நடக்குறவனாட்டம் இருக்கு. நாமெல்லாம் நடக்கனும். இங்கேயே ரொம்ப காலம் நிக்க முடியாது.

0 comments: