கொலம்பியாவின் விருந்தோம்பல்

2005ல சீன அதிபர் ஹு ஜிண்ட்டாவோ, யேல் (Yale) பல்கலைக்கு வந்தார். சீனாவோட மனிதவுரிமை வரலாறு, திபெத்தைப் பிடித்து வைத்திருப்பது, வியாபாரத் தந்திரங்கள் எல்லாமே அமெரிக்காவில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகித்தான் இருக்கிறது, இருந்தது. பலூன் காங் அமைப்பின் ஆட்கள் கூட்டங்கூட்டமாக அதிபருக்கெதிராகக் கொடிபிடித்தும், குரலெழுப்பியும் அலைந்தார்கள். ஒரு கம்யூனிச நாட்டின் அதிபரைப் பேசக் கூப்பிட்டிருப்பதற்காகக் கண்டனங்களும் எழத்தான் செய்தன. அத்தனை எதிர்ப்பு, ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகும் நடந்தது என்ன? ஹூ ஜிண்டாவோ எதிர்ப்பு, வரவேற்புக் கொடிகளுக்கு மத்தியிலேயே வந்தார். அவரைப் பல்கலைக்கழகத் தலைவர் மரியாதையாக வரவேற்றார், நாலு நல்ல வார்த்தைகளைப் பேசினார், எவ்வளவோ எதிர்மறைச் செய்திகள் இருந்தபோதும் சீனாவுக்கும் யேலுக்குமிடையே கல்வி ரீதியிலான தொடர்புகளைப் பேசி அறிமுகப்படுத்தி உரையாற்ற அழைத்தார். ஒரு கல்விக் கூடத்தின் மரியாதையான நடைமுறைகளுக்கு ஏற்றதுமாதிரி அந்த நிகழ்ச்சி இருந்தது.

ஆனால் நேற்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன? அமெரிக்காவுக்கும், யூதர்களுக்கும் 'எதிரான' ஆளாகச் சித்தரிக்கப்படும் ஈரானிய அதிபரை வரவழைத்து, ஒரு விருந்தினரான அவரை மேடையில் வைத்து அவமதிக்கும் விதத்தில், அந்தப் பல்கலைக்கழகத்தின் அதிபர் பேசியதும், நடத்தியதும் ரசிக்கத் தக்கதாயில்லை. அதற்காக ஈரானிய அதிபரின் சொல்லும் செயலும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதென்றும், சரியானதென்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் யூதர்களை, அமெரிக்கர்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் பெரும் அரங்குகளில் சிறுமைப் படுத்தப்படும் நிலை இருக்கிறது என்பதுதான் இங்கு நோக்கப்படவேண்டியது. வந்திருப்பவர் யாராயினும் (அவர் தானே வரவில்லை, கொலம்பியாவால் வரவேற்கப்பட்டவர்) அவை நாகரீகம், விருந்தோம்பல் என்பவற்றைச் சரிவரக் கடைபிடிக்காதது ஒரு பல்கலைக்கழகத்துக்கும் அதன் அதிபருக்கும் அழகன்று.

சரி, அப்படியே அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் எல்லா மனிதவுரிமையழிப்பு அரசாங்கங்களின் அதிபர்களையும் அழைத்து வைத்து மன்றில் நிறுத்திக் கேள்வி கேட்குமா என்று பார்த்தால் அதுவும் அப்படியில்லை. உதாரணமாக மோசமான இனப் படுகொலைகளைப் புரிந்து, கடந்த சுமார் அரை நூற்றாண்டு காலமாக ஒரு இனவொழிப்பைமேற்கொண்டிருக்கும் இலங்கையரசின் அதிபர்கள் அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களாலும், மற்ற அமைப்புக்களாலும் மரியாதையுடன் வரவேற்கப்பட்டு வருவதையும் காண முடிகிறது. ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திற்கு வரவேற்கப்பட்டதையும், சந்திரிகா குமாரதுங்க ஆசியா மையம் போன்ற அமைப்புகளுக்கு வரவேற்கப்பட்டதையும் (சந்திரிகா பல்கலைக் கழகங்களுக்கும் அழைக்கப்பட்டிருப்பதாகவே நினைவு) நினைவு கூறலாம். ஆக, அமெரிக்க அரசுக்கு இணக்கமாகவோ அல்லது, அரசியல் ரீதியாக எதிரியாக நினைக்கப் படாததாகவோ, அல்லது வளரும் வல்லரசு என்ற கோதாவிலோ இருக்கும் ஒரு அரசின் தலைவர்களும், அலுவலர்களும் மரியாதையாகவே நடத்தப்படுவர். மாற்றாக, அமெரிக்காவுக்கோ, அதன் அரசியலில் உள்ளோடிய யூதர்களுக்கோ எதிரான குரல்களை எழுப்பும் தலைவர்கள் இப்படித்தான் அவமதிக்கப்படுவார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

மெய்லீ

கழுத்தில் ஒரு கறுப்புக் கயிறு அதில் தொங்கும் ஒரு சின்னப் படிகம். ஏதப்பா என்றேன் மெய்லி கொடுத்தது என்றார். தினமும் பள்ளி முடித்து மெய்லியோடு விளையாடிவிட்டுத்தான் வீட்டுக்குத் திரும்புகின்றார். அன்றைக்குப் பள்ளியில் கொண்டுபோய் விடும்போது மெய்லியின் காரைப் பார்த்துவிட்டுச் சிரித்தபடி மெய்லீ என்று கையசைத்து நின்றார். ஒரு நாள் பள்ளி முடிந்து நான் அழைக்கப் போனபோது "மெய்லி, this is my dad" என்றார். அப்பாவை அறிமுகப்படுத்துமளவுக்கு வளர்ந்துவிட்டதை அப்போது அறிந்தேன். நேற்றைக்குப் பள்ளிக்கூடத்தில் வகுப்பறைப் படம் எடுத்தார்களாம். படத்தில் மெய்லியும் இவரும் அருகருகே நின்றிருந்தார்கள். ஏதோ மகிழ்ச்சியாக இருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைப் பருவத்தில் மாற்றுப் பால் குழந்தைகளோடு விளையாடுவதும் நட்பாக இருப்பதும் வளர்ந்த பருவத்தில் ஆரோக்கியமான உறவுகளை அமைத்துக்கொள்ள உதவும். மகிழ்வாய் மகனே!

பொறுக்கிப் போடுதலும் முறுக்கிப் போடுதலும்

செய்திகள், குறிப்பாக ஈழச் செய்திகளுக்கு எத்தனை முகங்கள் என்று பார்த்தால் வியப்பாக இருக்கும். அதிலும் அச்செய்திகள் இந்தியாவுக்குள் வரும்போது நடந்த கதையே மாறிப் போனதுபோலத் தெரியும். உதாரணமாக, இன்றைக்குப் பாருங்கள், ஒரு செய்தி வருகிறது, அதாவது, இலங்கையரசின் குண்டு வீச்சில் தமிழர் புனர்வாழ்வுக் கழக அலுவலகமும், ஒரு வீடு உள்ளிட்ட பல குடிமக்களின் இடங்களும் சேதமடைந்ததாக தமிழ்நெட் பட ஆதாரங்களோடு கூறுகிறது. இதனையே பிபிசி "தமிழ்ப் புலிகளின் கிடங்கின்மீது வான் தாக்குதல்" என்று சிங்கள இராணுவம் கூறுவதாகக் கூறிவிட்டு உள்ளே தமிழ்நெட் தரப்புச் செய்தியையும் கோடிட்டுக் காட்டுகிறது. 'Tamil Tiger Depot' என்பதை மேற்கோள்களுக்குள் சொல்வதன் மூலம் அது தன் சொல்லாடல் இல்லை எனக் காட்டியபோதும் தலைப்புச் செய்தியில் இராணுவத்தின் செய்தியையே வெளியிடுகிறது. இந்து நாளிதழும் இதே செய்தியை இராணுவத்தின் மொழியிலேயே "கிடங்கின் மீது தாக்குதல்"என்றே வெளியிடுகிறது. உள்ளே தமிழ்நெட்டின் சாரம் இருந்தபோதிலும், தலைப்பை இராணுவச் சார்பு செய்தியினைப் போலக் காட்டுவதன் மூலம் தமிழ்நெட் தரப்பின் செய்தியின் நம்பகத் தன்மையைக் குறைத்துக் காட்டும் உத்தி இது. இதனை இந்து போன்ற நாளிதழ்கள் தொடர்ந்து செய்து வருவதைப் பலரும் அறிவோம்.

இத்தகைய செய்தித் தாள்கள் வெளியிடும் செய்திகளை எடுத்துப் போடுவதிலும், மொழி பெயர்த்துப் போடுவதிலும் சில சிக்கல்கள் நிகழ்ந்து வருவதைப் பார்க்கிறோம். இத்தகைய சிக்கல்கள் எங்கு நிகழ்கின்றன, ஏன் நிகழ்கின்றன என்று யோசிக்கிறேன். இப்போது, செய்திகள் பரவும் விதத்தைப் பார்த்தால், 1. ஒரு சம்பவம் நடப்பது, 2. அது முதன்முதலாகச் செய்தி வடிவம் பெறுதல் (இங்கே வெவ்வேறு செய்தி நிறுவனங்கள் வெவ்வேறு வகையாக உண்மைச் செய்தியை மாற்றி வெளியிடுவது நடக்கும்), 3. செய்தி நிறுவனங்களிடமிருந்து அச் செய்தியை வாங்கிப் பத்திரிகைகள்/மிடையங்கள் தங்களது 'பாணி'யில் வெளியிடுதல் 4. அவற்றைப் படித்து வலைப்பதிவர்கள்/மற்ற பத்திரிகைகள் மேலும் பரப்புதல் மற்றும் மனிதர்களுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றங்கள். இவ்வாறுதான் பொதுவாகச் செய்திகள் பரவுகின்றன. வெளிவரும் செய்திகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்குப் பிடித்திருக்கலாம் அல்லது மற்றவர்கள் இதனைப் படித்தால் நல்லது என்று அவருக்குத் தோன்றலாம். இத்தகைய எண்ணம் அல்லது தேர்வு ஒருவருடைய அழகுணர்ச்சி, சமூக அக்கறை, வளர்ந்த பின்புலம், அரசியல் நிலைப்பாடு, இதனை இன்னார் இன்னதுக்காகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்து அமையும். இப்போது மாலன் புலிகளிடையே பிளவு என்றோ அல்லது பாஸ்டன் பாலா புலிகள் கஞ்சா வளர்க்கிறார்கள் என்று வெட்டி ஒட்டினாலோ அங்கு கவனிக்கப்பட வேண்டியது யார் என்ன விதமான செய்திகளைப் பரப்புதலில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதே. பாஸ்டன் பாலாவையாவது விட்டுவிடலாம், அவர் ஈழ விசயத்தில் Jaffna என்றால் யாழ்ப்பாணமா என்று கேட்குமளவுக்கு விபரமறியாத ஓரு பதிவர். ஆனால் ஒரு பத்திரிகையாளரான மாலன், தான் எதை எங்கிருந்து எடுத்துப் போடுகிறோம், அதனை எழுதியது யார், அந்தப் பத்திரிகையின் ஈழம் குறித்த நிலைப்பாடு என்ன, இதற்கு முன் அது என்னென்ன விதமான பொய்ச்செய்திகளைப் பரப்பியது என்றெல்லாம் தெரிந்துகொண்டு அதற்குப் பிறகு அப்பரப்புரையைச் செய்திருக்கலாம். அல்லது, ஒரு செய்தியைப் பரப்புவதற்கு முன் மாற்று ஊடகங்கள்/களத்திலிருந்து இயங்கும் வலைப்பதிவர்கள்/களநிலை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் என்று யாரையேனும் அணுகி விபரங்களை அல்லது செய்திகளின் குறைந்தபட்ச நம்பகத் தன்மையையாவது உறுதிப் படுத்திக் கொண்டு வெளியிடலாம். அவற்றை விடுத்து எடுத்தோம், கவிழ்த்தோம் என்று ஜால்ரா தட்டிக் கூச்சலைக் கிளப்புவதென்பது பொறுப்புடைய செயலாகாது.

உண்மைச் செய்திகளை மறைத்து, திரித்து வெளியிடும் சிங்கள அரச பயங்கரவாதத்தின் கைக்கூலிகளாகச் செயல்படும் சில இந்தியப் பத்திரிகைகள் வெளியிடும் செய்திகளை வேண்டுமென்றே வெளியிட்டுச் சுகம் காணும் மனோநிலையானது நாசிகளின் இனவொழிப்பு மனோநிலையை ஒத்தது. அத்தகைய ஒலிபெருக்கித்தனமானது இலங்கையரசின் நாசித்தனமான இனவொழிப்பை, மனிதவுரிமைக் கொலையை ஆதரிப்பது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.