பிள்ளைத் தமிழ்

மாசிலனுக்கு ஒன்னே முக்கா வயசு. தெரியாததில்லை, மழலைச் சொல்லினிது. இந்த வயசுலதான் மொழித்திறன் கிடுகிடுன்னு வளருமாம். பாக்குறோம். நாம சொல்லிக் குடுக்காததையெல்லாம் பேசுறான். கவனிச்சுக்கிட்டே இருக்கான். பெரும்பாலும் தமிழ்லதான் பேசுறோம். தமிழ்ப் புத்தகங்கள் படிக்கிறான். தமிழ் இணையப் பல்கலைக் கழகக் கதைகள், பாட்டுக்கள் அவனுக்குப் பிடிக்கும். இசையில் கொஞ்சம் ஆர்வம். நாம சின்னஞ்சிறு கிளியேன்னா கண்ணம்மாஆஆன்னு இழுப்பார். அறம் செயன்னு சொன்னா விம்பு அப்படிம்பார். முந்தி ஒரு காலத்துல முருகமலைக் காட்டுக்குள்ள தந்திரம்மிகுந்த நரின்னு சொன்னா அவர் வாந்துவந்த அப்படின்னு முடிப்பார். இட்டிலித்தட்டின் ஓரத்திலிருக்கும் மூன்று ஓட்டைகளைக் காட்டி அஃகன்னாவாம். அன்றைக்கு அப்படித்தான் ஆரஞ்சு நிறத்தைப் பார்த்துச் செம்மஞ்சள் அப்படின்னான். எங்களுக்கு ஆச்சரியம். எங்களுக்கே தெரியாத வார்த்தை அது. எப்படி. புரியலை. சில தமிழ்ப் புத்தகங்கள்கூட ஆரஞ்சு என்றே எழுதுகின்றன. அகராதியில் பார்த்தபோதுதான் தெரிந்தது செம்மஞ்சள் என்பதே சரியான மொழியாக்கமென்று. இப்படியாய் இவன் எங்களை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறான். அவன் ஆட்டம் தனிக்கதை.

கணிணியிலும் அச்சிலும் கல்விப் பொருட்களைக் கிடைக்கச் செய்பவர்களுக்கு நம் நன்றி. இன்னும் நிறைய வேண்டும். நல்ல கடின அட்டையில் அழகான படங்களோடு புத்தகங்கள் வெளிவந்தால் நன்றாக இருக்கும். பாட்டுக்களோடு/இசையோடு புத்தகங்கள் வருதலும் அவசியம். எங்கேனும் கிடைக்கின்றனவா?

0 comments: