வலைத்தமிழ் இணையத்தில் இது குறித்த எனது கட்டுரை.
http://www.valaitamil.com/thirumular-writings-by-dr-pa-sundaravadivel_16582.html
காட்சியும், கனவும், எழுத்தும்
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
Labels: Birds, Deepavali, Purananuru, Tamil
Posted by சுந்தரவடிவேல் at 12 comments
இது ஒரு இசைக் குறுவட்டு. பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் (பநிதச) வெளியீடு.
திருக்குறளில் காமத்துப்பாலில் இருக்கும் சில அதிகாரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 22 குறட்பாக்கள். அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மேலும் அக்குறட்பாக்களின் தமிழ் விளக்கக் கவிதை. தமிழில் தமிழர்களும், ஆங்கிலத்தில் அமெரிக்கர்களும் பாடியிருக்கிறோம். இது ஒரு அமெரிக்கத் தயாரிப்பு.
அக்டோபர் 2, 2012இல் இது தென்கரோலின மருத்துவப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவொன்றில் வெளியிடப்பட்டது. அவ்விழாவை நான் பார்த்த விதமும், மேலும் சில தகவல்களும்.
மைக்கைப் பிடித்துப் பெரியவர்கள் பேசிக்கொண்டே இருந்தோம். குழந்தைகள் ஓடிக்கொண்டே இருந்தார்கள். டிஃப்னி என்றொரு பெண்மணி வந்தார். எங்கள் இசைக் கோப்பில் புல்லாங்குழல் இசைத்தவர். அவர் குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். குழந்தைகள் அப்படியே நின்றார்கள். வாசித்து முடிக்கும்வரை அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். டிஃபனி தனது குழலுடன் மருத்துவமனைகளுக்குச் செல்கிறார். நோயாளிகளுக்காக வாசிக்கிறார். யோக நிலையங்களிலும் வாசிப்பார்.
கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு இந்நிகழ்ச்சி முழுவதுமாகப் புரிந்தது. ஏனென்றால் முழுவதும் ஆங்கிலத்திலேயே இருந்ததாலும், அமெரிக்க முகங்கள், பாடகர்கள், இசைஞர்கள் தமிழ் இலக்கியத்தின், மொழியின் பெருமைகளைப் பற்றிப் பேசியதாலும். அக்குழந்தைகளுக்கு இது தமிழைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை அளிக்கும்.
டலஸ் ஒருசில வரிகளைப் பாடினார். கணீரென்ற குரல். அத்தனை நெளிவு சுழிவுகளையும் குரலில் காட்டி அவர் பாடும் அழகை எல்லாப் பாடல்களிலும் காணலாம். ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பைப் பார்த்தவுடனேயே இந்த இசை முயற்சியில் ஈடுபடப் பெரிதும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய சுயவிபரக் குறிப்பில் "ஒரு துளி காமத்துப்பால்" ஒரு முக்கிய திருப்பம் என்றார். அவர்தான் அமெரிக்க தேசிய கீதத்தையும் அன்றைய நிகழ்வில் பாடினார். அவரும் டேனும் இணைந்து வேறு பல ஆங்கிலப் பாடல்களை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் பாடியிருக்கும் ஒரு பாடல்:
போங்கோ ஒரு ஆப்பிரிக்கத் தமிழர். நாங்கள் எல்லோரும் முழுக்கால் சட்டையும், முழுக்கை சட்டையுமாகச் சென்றிருந்தபோது வேட்டியில் வந்து எங்களை மகிழ்வித்தவர். அத்தனை இசையையும், குரலையும் தன் இரவு, பகல் பாராத உழைப்பால் உருக்கி வார்த்து உருவமைத்தவர். உலகமெங்கும் ஒழிந்துவரும் கலைகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் கண்டு மனம் வெதும்புபவர். இந்த அக்கறைதான் அவருக்கு எங்கள் மேல் மதிப்பையும், இந்த முயற்சியில் ஈடுபடவும் வைத்தது. இக்கோப்பில் ஆண் குரலில் வரும் ஆங்கிலப்பாடல்களைப் பாடியவர் இவரே. இவருக்கு உறுதுணை மாண்டி என்ற மேளா. அவரும் அருமையான குரல்வளம் கொண்டவர். எங்கள் ஒலிப்பதிவின்போது ஊரில் இல்லாததால் அவரால் பாடமுடியவில்லை. எனவே முன்னுரையில் மேளாவின் குரல் ஒலிக்கிறது. அடுத்த ஒலிக்கோப்பில் அவரும் இருப்பார். போங்கோ மற்றும் அவரது மற்ற இசை வெளியீடுகளைப் பற்றி இங்கே:
டேன் இதில் கித்தார் வாசிக்கிறார். அருமையான சித்தார் கலைஞனும்கூட. அவரைக் கண்ட முதல்நாள், இந்த நரம்புகள் சரியில்லை, ஒருநாள் திருத்திக் கட்டவேண்டும் என்று சொல்லிக்கொண்டே சித்தாரை வாசித்தார். அருமையாக இருந்தது என்று மட்டும்தான் என்னால் சொல்லமுடியும். டேனுக்கு இந்த வெளியீடு சிறப்பாக வந்ததில் மகிழ்ச்சி. பெரிய வரவேற்பு இருக்கும் என்றார்.
அரிநாத் எப்போதும் நிறைய பேசுவார். அன்றும் பேசினார். முன்பொருநாள் திருக்குறள் கலந்தாய்வுக் கூட்டத்தில் முப்பாலில் இன்பமான இப்பாலையே முன்னதாக வைக்கவேண்டுமென யுவராஜ் முழங்கியதில் ஆரம்பித்து நிறைய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். இக்கோப்பினை உருவாக்க வேண்டும் என்று முன்னின்று தூண்டியவர் இவரே, அல்லது இவருக்குள்ளிருந்த காதலே! டிஃபனியின் குழலிசையோடு அடிக்குரலில் பாடியிருக்கும் சாயலும் நாணும், மற்றும் துள்ளலுடன் யான் நோக்குங்காலை பாடியிருப்பதும் அரிதான். அரிதான் அன்றைய உணவுப் பட்டியலின் பொறுப்பாளர். ஒவ்வொருவரையும் அழைத்து இன்னதுதான் நீங்கள் செய்துகொண்டு வரவேண்டியது என்று இயற்கை உணவுகளைக் கொண்டுவரச் செய்திருந்தார். அண்மைக்காலமாக இயற்கை உண்டியைப் பற்றி அவர் பேசியும், செய்தும் வருகிறார். அதைப் பற்றி அவரது முகநூலில் காணலாம்.
ஜானகி இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார். நானொரு பாடகியே அல்ல, எனக்குப் பாடத்தெரியாது என்றுதான் ஆரம்பித்தார். ஊழிற் பெருவலி யாவுள?! என் இல்லத்தரசி என்பதால் மட்டுமல்ல, இவரது குரலின்மீது எனக்கொரு மயக்கமுண்டு. அதில் மிரண்டுபோவதும் உண்டு! இவர் பாடிய "வாளற்று" எனக்குப் பிடித்த பாடல். அழகான இசை, இழந்தாடும் குரல்கள். பின்னணியில் சந்தியா பாடியிருக்கிறார். பிரிவின் துயரை நெஞ்சிலறையும் வரிகள்.
யுவராஜ். எங்கள் இசைக் கனவுகளுக்கு உருவம் கொடுப்பவன். எந்தக் குரலிலிருந்தும் இனிமையைக் கொண்டுவந்துவிடுவான். யாரையும் பாட வைத்துவிடுவான். இன்ன இடத்தில் இது வரவேண்டும், இங்கு இப்படி இழுக்காதீர்கள், இதைத் தூக்கி அங்கே போடுங்கள் என்று பார்த்துப் பார்த்துச் செய்தவன். இவனது கவிதைகளையும், தனது கீபோர்டில் போட்டுக்கொண்டு வந்த முதல் பாடலையும் கேட்டபிறகுதான் எனக்கு இந்த முயற்சியில் ஆர்வம் ஓங்கியது. யுவாவின் குரலுக்கு மயங்கிக் கிடப்போர் பலர். என் சிந்தையும், வாயும் அவன் பாடலையே அவ்வப்போது ஒலித்துக்கொண்டிருக்கும். இந்த ஒலிக்கோப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடலென்றால் "பிரிவுரைக்கும் வன்கண்ணர்" தான். யுவாவின் குரலும், டலஸின் குரலும், மற்றும் இயந்தொலிக்கும் இசைகளும் அற்புதம்! வாழ்க யுவா! உன்னால் தமிழிசைக்கு ஆகவேண்டியது இன்னும் எவ்வளவோ! (யுவாவைப் பற்றி எழுதினால் நீண்டுகொண்டே போகும். அவரைப் பற்றிப் பிறிதொரு நாளில்!)
நானும் பாடியிருக்கிறேன். என்னைப் பற்றி நானே சொல்லிக்கொள்வது நல்லதில்லை. எனவே ஒரு குறுந்தகட்டை வாங்கி, கேட்டுவிட்டு, என் குரல்வளத்தை நீங்கள் வறுத்தெடுக்கலாம் :)
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் முனைவர் தண்டபானி வந்திருந்தார். எங்களது தமிழ்ப் பணிகளுக்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் இருப்பவர். இதுபோன்ற இசை முயற்சிகள் பெருக வேண்டும் என்று வாழ்த்தினார்.அன்றைய நிகழ்ச்சிகளை அருமையான ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கியவர் நமது பனைநிலத்துக் கவலையற்ற காளையருள் ஒருவரான பூபாலன். அவரே இத்திட்டத்தினை அடுத்த கட்டத்துக்கு (அதாவது விற்பனை!) எடுத்துச் செல்லவிருக்கும் எங்கள் வினையூக்கி!
வந்திருந்த அனைவரும் இயற்கையான நல்லுணவுண்டோம். அடுத்து செய்யவேண்டிய இசை முயற்சிகளைப் பற்றி அளவளாவினோம். அனைவரையும் குறுந்தகடுகளை வாங்குமாறு வேண்டுகிறோம்.
iTunes:
Amazon:
or contact us!
அனைத்துலக நாடுகளில் விற்பனை முகவர்கள் தேவை. எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
Posted by சுந்தரவடிவேல் at 3 comments
Labels: A drop of love from Thirukkural, Charleston, Kaamathupaal, Kamathupal, Love Songs, New music album, Oru Thuli Kaamathupaal, panainilam, PaNiTaSa, pnts, Tamil music, Thirukkural

அடுத்த சில மாதங்களில் மயிலின் படம் வெளிவரும். யானையின் படத்தை இப்போது வெளியிடாமல் குதிரையின் படத்தை வெளியிட்டமை சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இருப்பினும் பாகனைச் சுமந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட ஒரு யானையைவிடத் தன்வயமாய்த் திரியும் குதிரை கண்ணுக்குக் குளுமையாய்த் தெரிகிறது.
Posted by சுந்தரவடிவேல் at 1 comments
Labels: குதிரை
செங்கொடினு கூப்பிட்டாதான் அவளுக்கு பிடிக்கும். சரஸ்வதிங்கிற தன் பேரையே அவ மறந்துட்டா.
ரொம்ப சூட்டிகையான பொண்ணு. அதே நேரத்துல நிறைய கேள்விகள் கேட்டுகிட்டே இருப்பா. எல்லாமே அறிவியல் தொடர்பா இருக்கும்.
எங்க கூடவே நாங்க கிராமங்கள்ல பிரச்சாரம் பண்ண போறப்ப வருவா.
செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பா. எங்களுக்கே அதை பார்க்க ஆச்சரியமா இருக்கும்.
கலை மூலமா பிரச்சாரம் செய்யறது அவளுக்கு பிடிக்கும். அதனால மனமுவந்து அவ இதை செய்வா. ‘சென்னை சங்கமம்’ல அவளோட நிகழ்ச்சி நடந்திருக்கு.
புழல், வேலூர்னு செங்கொடி பார்க்காத சிறை இல்ல.
பாரதிதாசன் பாடல்கள அவ்வளவு அழகா, உணர்வோட பாடுவா.
- படங்கள், குறிப்புகள்: வினவு.
"தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.
இப்படிக்கு
தோழர் செங்கொடி"
Posted by சுந்தரவடிவேல் at 2 comments
Labels: செங்கொடி
"நான் மரணத்திற்கு பயப்படவில்லை ஆனால் நான் நிரபராதி என நிரூபிக்கத்தான் போராடுகிறேன்,நீதி தவறிவிட்டது எனது வழக்கில் என்று நிரூபிக்க போராடுகிறேன்,சாவை விட பல கொடுமைகளை இந்த 21 ஆண்டுகள் சிறைவாழ்க்கையில் அனுபவித்துவிட்டேன்.எனது மரணம் நீதியின் மரணம் மட்டும் அல்ல,தளராது வயதிலும் எனது விடுதலைக்கு போராடும் என் அன்னை ஏமாற்றப்படுவார்கள் என்பதே எனது கவலை" - பேரறிவாளன்
கையொப்பமிடும் சுட்டி:
http://www.change.org/petitions/plea-to-cancel-the-death-sentence-wrongly-given-to-innocent-perarivalan
ராஜீவ் கொலை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனைக் கைதியாக இருபத்தோரு ஆண்டுகள் நீதிக்காக காத்திருக்கும் திரு.பேரறிவாளனின் கருணைமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரின் தாய் அற்புதம் அம்மா அவர்களுடன் ஒரு சந்திப்பு-
http://www.youtube.com/watch?v=A7Hbdt6vWDw
Posted by சுந்தரவடிவேல் at 3 comments
Labels: அற்புதம் அம்மா, தூக்கு தண்டனை, பேரறிவாளன்
கடந்த சில ஆண்டுகளாக, பேரவையின் சார்பில் காலங்காட்டி (Calendar என்பதற்கு காலங்காட்டி என்பது பொருத்தமாகப்படுகிறது) வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் அடுத்த ஜூலை வரை, ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பக்கமென இது வடிவமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் தமிழர்களின் பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க தலங்கள் என ஒரு ஆண்டும், தமிழர்களின் தொழில்கள் என ஒரு ஆண்டும் ஒவ்வொரு விதமாகப் படங்களும் செய்திகளும் இக்காலங்காட்டிகளை அலங்கரித்தன. இவ்வாண்டு "தமிழ்நிலப் பறவைகள்" என்ற தலைப்பில் படங்களையும், உள்ளீட்டு விவரங்களையும் தொகுத்திருக்கிறோம்.
சங்க இலக்கியங்களிலிருந்து பறவைகளைப் பற்றிய மேற்கோள்களைத் திரட்டுவது மற்றும் படங்களை எடுப்பது ஆகிய பணிகளை தங்கமணி மேற்கொண்டான். நாட்களைப் பற்றிய விபரங்களையும், என்னென்ன நாட்கள் குறிப்பிடத் தகுந்தன என்ற செய்திகளையும் சிவானந்தம் சேகரித்துத் தந்தார். இவர் கடந்த ஆண்டுகளிலும் காலங்காட்டிகளைத் திறம்பட வெளியிடுவதில் பங்காற்றியவர். ஆனந்தி-சந்தோஷ் இணையர் அச்சகத்தை அணுகுவதையும், வடிவமைப்பதில் திரு ராஜகோபால் அவர்களோடு பணியாற்றுவதையும் மேற்கொண்டனர். இடைவிடாத தேடுதலின் பின் பராசக்தி பதிப்பகத்தின் திரு சண்முகக்கனி அவர்களது அன்பான ஒத்துழைப்பைப் பெற்றார்கள். இவர்களோடு சேர்ந்து ராதாகிருஷ்ணன் அய்யாவும் ஓடியாடியதும் குறிப்பிடப்படவேண்டியது. கிட்டத்தட்ட ஓரிரு வாரங்களே விழாவுக்கு இருந்த நிலையில்தான் எல்லாம் கூடி வந்தன. எனவே பெருமளவு நேரம் செலவிட இயலவில்லை என்றபோதிலும் காலங்காட்டி மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது. அழகான படங்கள், செறிவான பாடல்களும், விளக்கங்களும் என மேற்புறத்திலும், கீழ்ப்புறத்தில் நாட்களும் அவற்றைப் பற்றிய குறிப்புக்களும் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பிட்ட நேரத்தில் அச்சகத்தினர் அருமையாக அச்சிட்டுத் தர சக்தி குழுவினரின் ஒத்துழைப்புடன் அமெரிக்காவிற்கு வந்திறங்கியது காலங்காட்டி.
இதற்காக தங்கமணி எழுதியிருக்கும் முன்னுரை பளிச்சென இருக்கிறது. இயற்கை எப்படி நம்மோடு நாமாக இருந்தது ஒரு காலத்தில் என்று சொல்வதோடு மீண்டும் நம்மை இயற்கையோடு ஒட்டிக் கொள்ள ஒரு உந்துதலையும் தருகிறது. அம்முன்னுரை கீழே:
"அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் எந்த நாட்டவருக்கும் ஒரு பண்பாட்டு அதிர்ச்சி ஏற்படுவது உண்டு. பண்பாட்டு அதிர்ச்சி என்று இங்கு குறிப்பிடப்படுவது சமூக பழக்கங்கள், உணவு உடை சார்ந்த வேறுபாடுகளால் விழைவதை அல்ல. இவற்றுக்கெல்லாம் வேராக இருக்கக் கூடிய மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவில், அடையாளப் படுத்திக் கொள்ளலில் உள்ள வித்தியாசத்தால் விளைவதையே. கீழை நாடுகளின் பண்பாடு என்பது நீண்ட தொடர்ச்சி கொண்டது. அது இன்றும் பழங்குடிகளின் கூறுகள் பலவற்றை தன்னுடன் கொண்டது. தனது பழங்குடிக் கூறுகளை அறியாமையானது என்றோ அறிவுக்கு எதிரானது என்றோ அது தீர்மானமாகக் கொள்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் கீழைப் பண்பாட்டை பல பழங்குடிக் கூறுகளை, நம்பிக்கைகளை, அறிதல்களை அழிக்காவண்னம் உன்னதப்படுத்தப்பட்ட ஒரு தொகுப்பு எனக் கூறலாம்.
கீழைப் பண்பாடுகள் இயற்கையை முழுமுதலாகக் கடவுளின் வடிவாகக் கொண்டால் அதில் மனிதன் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுவது உண்மைதான். ஆனால் அவ்விடம் அவனது தன்னை அறியும் தகைமை கருதியே அவனுக்கு அளிக்கப்படுகிறதே அல்லாமல் எவ்வகையிலும் மற்ற உயிரினங்களைவிட மேலானதாகவோ உரிமை கோருவதாகவோ அமைக்கப்பட்டிருக்கவில்லை. இந்த பிரபஞ்சத் தொகுதியில் அவனும் ஒரு துளி. தன்னை அறியும் திறன் கொண்டதால் மேலும் பொறுப்பதிகமுள்ள ஒரு உயிர். மாறாக மேலை பண்பாடுகள் மனிதனை இந்த பிரபஞ்சத்தின் மையப் புள்ளியாக நிறுத்துகின்றன. இந்த பிரபஞ்சமும் அதன் உயிர்த் தொகுதிகளும் அவனது வாழ்வின் வளங்கருதியும் அவனது மகிழ்வு கருதியும் அவனுக்காகப் படைக்கப்பட்டனவாகக் காட்டுகின்றன. இந்தப் பண்பாட்டு வேறுபாடு மிக ஆழமானதாகவும், இன்றைய மனித வாழ்வியல் நோக்கத்தின் அடிப்படையைத் தீர்மானிப்பதாகவும் இருக்கிறது. கலை, பொருளாதாரம், அறிவியல், மனித வாழ்வின் வெற்றி இப்படி மிகப்பெரிய மனிதச் செயல்பாடுகளின் திசையையும் போக்கையும் தீர்மானிப்பவையாக இந்தப் பண்பாட்டுக் கூறுகளே உள்ளன. மனிதனை ஒரு படைப்பாளனாக உருவாக்கும் கல்விமுறையை வழக்கொழித்து வெறும் உற்பத்தியில் இயந்திரங்களுக்கு நிகரான ஒரு பங்காளியாகவும், தீவிர நுகர்வோனாகவும் மட்டும் சமைக்கும் கல்வி முறை உருவாக்கத்திலும் மேலைப் பண்பாட்டுக் கூறுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.
கிழக்கில் குறிப்பாக தமிழ்ப் பண்பாட்டில் இயற்கையின் மாபெரும் கட்டமைப்பில் மனிதன் என்பவன் ஒரு குறிப்பிடத்தக்க, பொறுப்பான இடத்தைப் பெற்றவன். இயற்கையின் சமநிலையைக் குலைக்காவண்ணம் வாழ உரிமையளிக்கப்பட்டவன். தமிழ்ப் பண்பாடு பிரபஞ்சத்தைக் கூர்ந்து கவனித்து அதன் எல்லையற்ற பேராற்றலில் தன்னையும் ஒரு துளியாக உணர்ந்து ஒரு சமநிலையை அடைவதையே விடுதலை என்று அழைக்கிறது. மனித அகவுணர்வுகளை வெளிப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் புற உலகின் அத்தனை சாத்தியங்களையும் தமிழ்ப்பண்பாடு பயன்படுத்திக் கொண்டிருப்பதை நமது இலக்கியங்களைப் படிக்கும்போது உணரலாம். இந்த வகையில் இந்த நாட்காட்டியை சில தமிழ்நிலப் பறவைகளும் சங்கத் தமிழும் அழகு செய்கின்றன."
இந்த காலங்காட்டியின் பி.டி.எப் கோப்பு விரைவில் பேரவையின் இணைய தளத்தினூடாக தரவிறக்கக் கிடைக்கும். பார்த்து மகிழுங்கள்.
ஜூலை 2011 பக்கத்தில் ஒரு அழகிய தூக்கணாங்குருவி அதன் கூட்டினருகில் உட்கார்ந்திருக்கும் படமும், கீழ்க்காணும் பாடலும் அதன் விளக்கமும் அமைந்திருக்கிறது:
எந்தையும் யாயும் உணரக்காட்டி
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்
மலைக்கெழு வெற்பன் தலைவந் திரப்ப
நன்றுபுரி கொள்கையின் ஒன்றாகின்றே
முடங்கல் இறைய தூக்கணங்குரீஇ
நீடிரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மைய லூரே
இதன் பொருள்: (காதலை) என் தந்தைக்கும் தாய்க்கும் சொல்லி, ஒளிந்திருந்த செய்தி வெளியே வந்த பிறகு, மலைநாட்டின் தலைவன் முன்வந்து கேட்டபிறகு எல்லோரும் (திருமணத்துக்கு) ஒருமனதாக ஒத்துக்கொண்டனர். ஆனால் அதுவரைக்கும் ஊரார் பேசிய வம்பானது, வளைந்த இறகையுடைய தூக்கணாங்குருவி நெடிய பனைமரத்திலே கட்டிய கூட்டைவிடச் சிக்கலானதாக இருந்தது.
ஆங்கிலத்தில் (மொழிபெயர்ப்பு: Robert Butler)- I explained it to mother and father so that they understood; then, once it was out in the open, our Lord of the mountain country came and asked them himself, and they were agreeable - so that now this stupid town, whose opinions are as confused as the nests that the weaver birds, with their curved wings, weave in the tall, dark palmyra palms, is finally at one with us.
இது ஒரு அழகான பாடல். ஒரு பெண் பாடுவதாய் அமைந்திருக்கிறது. இரு காதலர்களைப் பற்றி ஊர் பேசும் வம்பு எத்தகையது என்பதை நளினமாகச் சொல்லும் கவிதை. உறையூர் பல்காயனார் என்பவர் குறுந்தொகையில் எழுதியிருப்பது (374வது பாடல்). ஒவ்வொரு மாதமும் இருக்கும் பாடலை மனனம் செய்வதை பொழுதுபோக்காக ஒவ்வொரு குடும்பமும் கொள்ளலாம்! மேற்கண்ட பாடலை நான் ஓரளவுக்கு மனப்பாடம் செய்துவிட்டேன் :)) இதற்கான மெட்டும் கூடி வருகிறது!
Posted by சுந்தரவடிவேல் at 1 comments
Labels: fetna, fetna calendar, monthly calendar, காலங்காட்டி, நாட்காட்டி, பேரவை, மாதங்காட்டி
நிறுவப்படாத குற்றமொன்றுக்காய்
சிறைச் சுவர்களுள்ளேயே
வலிசுமந்து திணறிப்பிரசவித்து
பாலருந்தும் மகவைப் பிரிந்து
ஆண்டிருபதாகியும் மூச்சுத் திணறி
இருட்டறையில் கிடப்பவள்
பொம்பளை இல்லை
யோனிகளுக்குள் செருகிய
துப்பாக்கியை வெடிக்கப் போகிறானக்கா
நீங்களும் அப்பாவும் காப்பாற்றுங்களக்கா
என்று அலறியவர்களில் யாரும்
பொம்பளையா எனத் தெரியவில்லை
சட்டங்களுக்கு முன்னும் பின்னும்
அரசின் ஆசியோடு வன்புணரப்பட்டும்
தெருக்களில் அம்மணமாய் விரட்டப்பட்டும்
என்கவுண்ட்டர்களில் கொல்லப்பட்டும்
நித்தம் சீரழியும் எவளும்
அடித்துச் சொல்வேன்
பொம்பளையே இல்லை.
நா பொம்பளை.
ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாய்
என்று பாரதியை நான் ஒப்பித்தபோது
நீ கைதட்டியிருந்தால்
அதற்கு நான் பொறுப்பல்ல.
அது நேற்று.
நான் எந்தையின் நாவினடியில்
மூழ்கித் திளைத்துப் பாடம் பயின்றவள்
என்நாவிலும் எந்தையே நடமிடுகிறான்
எனவே இன்று சொல்கிறேன்
நா பொம்பளை
சட்டமே நீதியே என்னைக் காப்பாற்று!
நீதி தவறியபோது
பொம்பளையொருத்தியின்
கற்பின் வலிமையால்
எரிந்தது மதுரை
சொன்னது என் தமிழ்.
எச்சரிக்கிறேன்!
நீதி தவறாதே
இன்னொரு பொம்பளையின்
கற்பினால் எரிந்தது
இன்னொரு தலைநகரென்று
வரலாற்றைச்
சொல்ல வைத்திடாதே!
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
Labels: அரசியல், ஊழல், கவிதை, பெண் விடுதலை
அறுபதாண்டுகளுக்கும் மேலாக ஈழத்தில் நடந்துவரும் தமிழ் உரிமைப் போர் கடும் சவால்களை எதிர்நோக்கியிருக்கிறது. இப்போரில் நிகழ்ந்த படுகொலைகளும், இன்றும் இலங்கையின் திரைமறைவில் தொடரும் சுமார் 12000 போராளிகளின் சிறைவைப்பு, அவர்கள் மீதான வன்கொடுமைகள், மக்களின் நிலங்களை அரசு பறித்தல், சிங்களப் பேரினவாத அரசியல் ஆகியன உலகின் உணர்வுள்ள தமிழர்களின் மனங்களைச் சொல்லொணாத வேதனையில் ஆழ்த்தி வருவதைக் காண்கிறோம். இந்த வேதனைக்கு மருந்திட வேண்டிய உலகம் மௌனத்தில் ஆழ்ந்திருக்க, ஒரு விளையாட்டு நிறுவனம் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதுபோன்ற செயலொன்றைச் செய்திருக்கிறது.
பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு உலகின் 21 நாடுகளில் கிளைகளைக் கொண்டு இயங்கிவரும் யுபிசாஃப்ட் (UbiSoft) என்ற நிறுவனம், வரும் 2010 நவம்பர் மாதத்தில் தான் அறிமுகப்படுத்தவிருக்கும் Ghost Recon 4 / "Ghost Recon: Predator" என்ற ஒரு கணினி விளையாட்டில் ஈழத்தைப் போர்க்களமாகக் காட்டி, அதில் ஸ்ரீலங்கா ராணுவத்தைக் கதாநாயகர்களாகவும், தமிழ்ப் போராளிகளைத் தீவிரவாதிகளாகவும் காட்டுகிறது (பார்க்க!). இந்த நிறுவனம், அங்கு நடந்த இனவழிப்போ அல்லது தொடரும் மனிதவுரிமை மீறலோ குறித்து அறியாமலும் இதைச் செய்திருக்கலாம். அல்லது அறிந்தே இதனைச் செய்யலாம். எப்படி இருந்தாலும், இவ்விளையாட்டை வெளியிட வேண்டாம் என்று அந்த நிறுவனத்துக்கு நாம் ஒவ்வொருவரும் தெரிவிப்பது அவசியம். அவர்களுக்குத் தொலைநகல் அனுப்பலாம், தொலைபேசியில் அழைத்துப் பேசலாம். மின்னஞ்சலைக் காணவில்லை (கண்டுபிடிப்பவர்கள் சொல்லலாம்!). சிங்களப் பேரினவாதிகள் ஏற்கெனவே இந்த விளையாட்டுக்காகத் தங்கள் ஏகபோக ஆதரவை ஆரவாரமாக காட்டத் தொடங்கிவிட்டார்கள். இந்நிலையில் நாம் செயல்படவேண்டியது அவசியம். இவ்விளையாட்டினைக் குறித்த இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ Youtube இணைப்பில் போர்க்குற்ற ஆதாரங்களின் சுட்டிகளோடு உங்கள் கருத்துக்களை வெளியிடுங்கள். அவர்களது கருத்துக் களத்திலும் சென்று நமது கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
இதற்கு முன் இஸ்ரேல்-பாலஸ்தீனம் அல்லது இங்கிலாந்து-வடக்கு அயர்லாந்து குறித்த கணினி விளையாட்டுக்கள் வெளிவரும் முன் எழுந்த சர்ச்சைகளால் அவ்விளையாட்டு நிறுவனங்கள் பின்வாங்கிக் கொண்டன. அவற்றைப் போலவே இந்த விளையாட்டும் வெளியிடப்படக் கூடாது. ஒரு இனத்தின் வாழ்வாதாரப் போராட்டம் இன்னொருவரின் பொழுதுபோக்கு விளையாட்டாக மாறக்கூடாது. இச்செய்தியை அனைத்து நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள், உங்கள் நாட்டில் இருக்கும் UbiSoft நிறுவனத்தின் கிளைக்கோ அல்லது பிரான்சில் இருக்கும் தலைமையகத்துக்கோ உங்கள் கண்டனங்களை அனுப்புங்கள். இலங்கை அரசு ஒரு இனவழிப்பு அரசு என்றும், இவ்விளையாட்டு இனவழிப்பை நியாயப்படுத்தும் அநாகரிகச்செயல் என்றும், இவ்வகையான விளையாட்டுக்கள் இனங்களுக்கிடையேயான உறவுகளை மேலும் மோசமடையச் செய்யும் என்பதையும் அவர்களுக்குப் புரியவைப்போம். இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகப்போகும் இந்த விளையாட்டை வெளிவராமல் முடக்குவோம்! விரைந்து செயல்படுவோம்!
உலகின் பலநாடுகளிலும் கிளைவிட்டிருக்கும் இந்நிறுவனத்தின் நீங்கள் வசிக்கும் நாட்டிற்கான முகவரியை இந்த இணைப்பில் சென்று தேடிக்கொள்ளலாம். அந்தந்த நாடுகளில் உள்ள கிளைகளுக்கு உங்கள் கடிதங்களை அனுப்பலாம். இந்தியாவில் புனேயிலும், சிங்கப்பூர், கனடா, ஜெர்மனி முதலான 21 நாடுகளில் இந்நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. அனைத்துலகப் பதிவர்கள் உடனடியாகச் செயல்படவேண்டும்!
கீழேயிருப்பது அமெரிக்காவுக்கான முகவரி:
UbiSoft Business office
625 Third Street
San Francisco - CA 94107
Tel: +1 (415) 547 4000
Fax: +1 (415) 547 4001
Ubisoft Red Storm Entertainment
2000 Centre Green Way
Suite 300
Cary, NC 27513
Tel: +1 (919) 460 1776
Posted by சுந்தரவடிவேல் at 9 comments
இப்போதெல்லாம் ஒரு வெள்ளைத் தாளையோ அல்லது கணினித் திரையில் வெண்மையாய்ப் பரந்து திறக்கும் ஒரு புதிய கோப்பினையோ கண்டால் என்னுள் எதுவும் பீறிட்டெழுவதில்லை. பொறுக்கியெடுத்துக் கோர்த்துக் கவிதையெனக் காட்டுவதற்கும் பாதைவழிகளில் எதனையும் சேகரித்துக் கொள்ளும் உற்சாகமில்லை. அவ்வப்போது திரளும் வார்த்தைகள் வெண்புகையாய்க் கலைந்து பறந்து போகின்றன. தந்தையைப் பறிகொடுத்த நண்பனுக்காகவோ, பத்தாண்டுகளாய்க் கூடிவாழ்ந்தவளுக்காகவோ எதையும் எழுதவில்லை. சிற்சில நாட்களில் சிற்சிலவற்றின் பின் ஓடிப் பார்க்கிறேன். ஒரு குறுகியகாலப் பரபரப்பின் பிறகு அவை என்னை முன்னிலும் தனிமையில் விட்டுப் போய்விடுகின்றன. எப்போதாவது எழுந்துவிடலாம் என்றுதான் வறண்ட கிணற்றிலிருந்து வெளியே பார்க்கிறேன். கிணற்றின் சுவர்களைக் கெள்ளிக் கெள்ளி மறுபுறத்திலே படிகளை அமைக்கத்தான் உள்ளுகின்றேன். அல்லது என்றேனும் மழைவந்து கிணறு நிரம்ப மேலேறிவிடத்தான் வானை நோக்கியிருக்கிறேன். செய்வதறியேன். சுடுபட்டவர்களைக் காக்கவியலாத, புறங்கைகள் கட்டப்பட்டுச் சுடுகொட்டடியில் நாட்களை எண்ணி நிற்பவர்களை விடுவிக்கவியலாத சொற்களால் வேறு எப்பயனுமில்லை என்று நினைக்கும்போது சொல்ல எதுவுமிருப்பதில்லை. அழுது பொறுக்காது அயர்ந்து கிடந்தாரை அப்புறப்படுத்தி இல்லையேல் அவர்களின் மேலாகவே ஊர்வலத்துக்காகப் பாதையமைக்கப்படுகிறது. அசோகனின் சக்கரங்கள் நிணச் சேற்றில் உருள வெற்றித் தேர் நகர்கிறது. நம்பிக்கை என்று காதில் விழும் வார்த்தை என்னுள் அச்சத்தைத் தோற்றுவிப்பதைப் பார்க்கிறேன். இருப்பினும் இது இப்படியே இருந்துவிடப் போவதில்லை.
Posted by சுந்தரவடிவேல் at 3 comments
Labels: அசோகச் சக்கரம், ஈழம், கையறுநிலை
சாதி வாரிக் கணக்கெடுப்பின் அவசியம், அவசியமின்மையை வலியுறுத்தி குறிப்பிடும்படியான விவாதங்கள் தமிழ்ச் சூழலில் நடைபெறவில்லை. அதற்குள் முந்திக்கொண்டு ‘ஜாதிப்பேய்’ என இந்தக் கணக்கெடுப்பை வர்ணித்து கவர் ஸ்டோரி வெளியிடுகிறது இந்தியா டுடே. ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெற்றால் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும்’ என்பது இந்தியா டுடேவின் கவலை. இந்த ஒரு காரணத்தினாலேயே நாம் இந்தக் கணக்கெடுப்பை முதல் ஆளாக ஆதரிக்க வேண்டியிருக்கிறது. சாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது ‘எந்த சாதி பெரிய சாதி’ என எண்ணிப் பார்க்கும் வேலை இல்லை. நம் சமூகத்தில் அனைத்து வகையான அடக்குமுறைகளும் சாதியின் பெயரால்தான் நடக்கின்றன எனில் அதற்கான தீர்வுகளும் அதே ரீதியில்தானே இருக்க முடியும்?
வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முழுமையாக அமுல்படுத்தத் தடையாக இருப்பதே சாதி வாரியான கணக்கெடுப்பில் முழுமை இல்லை என்பதுதான். கடைசியாக 1931-ல் எடுக்கப்பட்டதுதான் சாதிவாரிக் கணக்கு. 80 வருடங்களுக்கு முந்தைய கணக்கு இப்போது செல்லுபடியாகாது என உச்சநீதிமன்றம் பல வழக்குகளை தள்ளுபடி செய்திருக்கிறது. தவிரவும் மண்டல் கமிஷனில் சொல்லப்பட்டிருப்பது போன்று ‘இத்தனை வருட இட ஒதுக்கீட்டால் முன்னேறிய சாதிகளை பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டும்’ என்பதை செய்வதற்கும் இந்த கணக்கெடுப்பு அவசியமாகிறது.
அதேநேரம் கணக்கெடுப்பின் இறுதியில் சிறு குழுக்களாக இருக்கும் சிறிய சாதியினர் மேலும் ஒடுக்கப்படுவதற்கான அபாயங்கள் இருப்பதாகவும், ஆகப்பெரிய சாதி எது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அதன் ஆதிக்கம் மேலும் கூடுதலாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவை அனைத்தையுமே நாம் பேச வேண்டும். இடஒதுக்கீடு என்பது சாதி ஆதிக்கத்தை ஒழிப்பதற்கான ஏற்பாடுகளில் ஒன்றா? ஆம் என்றால் இத்தனை வருட இட ஒதுக்கீட்டால் சாதியின் பாத்திரம் சமூகத்தில் எந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது, இனிமேற்கொண்டும் தொடரப்போகும் இட ஒதுக்கீட்டின் வடிவம் மற்றும் உள்ளடக்கத்தில் மாற்றம் தேவையா என அனைத்தையும் நாம் பேசுவோம்.
இதை ஒட்டி கீற்று இணையதளத்தின் சார்பாக ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தேதி: ஜூன் 1, 2010. செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை 6 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை
வரவேற்புரை:
பத்திரிக்கையாளர் பாரதி தம்பி
கருத்துரை:
எழுத்தாளர் லிவிங் ஸ்மைல் வித்யா
வழக்கறிஞர் சுந்தர்ராஜன்
பெண்ணியலாளர் ஓவியா
‘தலித் முரசு’ புனித பாண்டியன்
ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி
கொளத்தூர் மணி, பெரியார் திராவிடர் கழகம்
கேள்வி நேரம்:
விவாத அரங்கத்தின் இறுதியில் பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும்விதமாக கேள்வி நேரம் இடம்பெறும். பார்வையாளர்கள் எழுதிக் கொடுக்கும் கேள்விகளுக்கு கருத்துரையாளர்கள் பதிலளிப்பர்.
நன்றியுரை:
பாஸ்கர், கீற்று.காம்
அனைவரும் வருக!Posted by சுந்தரவடிவேல் at 2 comments
Labels: caste, census, Indian census, சாதி, சென்சஸ், மக்கட்தொகை, மக்கள் தொகை, மண்டல்
போர்க் குற்றங்களை விசாரிக்கச் சொல்லிக் கேளுங்கள்! Urge the United Nations to investigate war crimes.
Sri Lankans endured nearly 30 terrifying years of bloody civil war and then - its bitter aftermath. During the final stage of the conflict, both the Sri Lankan security forces and the Tamil Tigers committed horrific human rights abuses against civilians. The survivors deserve justice, reparations and the opportunity to rebuild their shattered communities. Yet one year after the conflict ended, hope for justice is fading. Instead of investigating suspected war crimes, the Sri Lankan government jails critics and clamps down on debate. The government's failure to act has compounded the victims' devastation. One thing is clear - there will be no justice without international action. And this September, when Amnesty representatives meet with top United Nations (UN) officials, we plan on communicating that message clearly. If that message is echoed by more than 50,000 of our supporters, then the UN will be hard-pressed to finally ensure an investigation into these war crimes. | ![]() |
Help us send at least 50,000 signatures to our meeting with UN officials this September. Urge the UN to investigate war crimes in Sri Lanka. Toward the end of the war, atrocities against civilians and enemy combatants were fueled by a sense thatthere would be no real consequences for violating the law. Violations of human rights and humanitarian law peaked in the final months of conflict, when some 300,000 displaced civilians were trapped between the warring parties. Some 80,000 people remain in camps and funds for their support are running out. To this day, the government denies access to the area where the crimes were committed. The International Committee of the Red Cross continues to be denied access to places of detention in the north. And even Amnesty International has been denied access to Sri Lanka since 2006. Despite UN Secretary General Ban Ki-moon's repeated calls for accountability, the UN has essentially punted responsibility for ensuring justice to the Sri Lankan government. There is no immediate prospect of a referral to the International Criminal Court or consideration of other international justice options through the Security Council. If Sri Lanka is left to go it alone, impunity will continue and victims will be denied justice. More disturbingly, it will set an international precedent that the UN will not act when serious crimes are committed under the veil of "combating terrorism". The UN must set up an independent investigation into massive human rights violations committed by both government and Liberation Tigers of Tamil Eelam forces. Those responsible for war crimes must be prosecuted before competent, impartial and independent criminal courts. For lasting peace in Sri Lanka, there must be accountability. Justice rests with us, the global human rights community. Please sign our petition to the UN today. In Solidarity, Chistoph, Jim, Scott, Juliette and the rest of the Crisis Response Team Amnesty International USA | |
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
Labels: genocide in Sri Lanka, Rajapakse, war crimes, இலங்கை, ஐ.நா, போர்க்குற்றம், மனிதவுரிமை
நேற்று நான் பேருந்திலிருந்து இறங்கி கடைவரைக்கும் நடக்க வேண்டியிருந்தது. இரண்டுக்குமிடையே சுமார் 1 கிலோ மீட்டர். முழுவதும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வாழும் குடியிருப்புப் பகுதியைக் கடந்து செல்ல வேண்டும். அமெரிக்காவில் ஆ.அ மக்களைக் கண்டாலே நிறைய பேருக்கு ஒரு பயம், விலக்கம் என்பன இருக்கும். புதிதாக ஊருக்கு யாரேனும் வந்தால், இன்ன தெருவைத் தாண்டி வடக்கே போகாதீர்கள், இன்ன இடத்தில் வாடகைக்கு வீடெடுக்காதீர்கள் என்பன போன்ற அறிவுறுத்தல்கள் நிகழும். பல ஆண்டுகளாகவே இது குறித்த போராட்டம் எனக்குள் உண்டு. ஒரு முறை அவர்களது முடிதிருத்தக் கடைக்குச் சென்றிருந்தேன். முற்றிலுமாய் அவர்களே. எல்லாருக்குமாய் பிட்சா கொண்டுவரச் சொன்னார் கடைக்காரர். எல்லோரும் எடுத்துக் கொண்டனர். பெப்பரோனி, மற்ற இறைச்சிகள் இருந்ததனால் நான் சற்றே தயங்கியபடி இருந்தேன். "நீங்கள் எங்களுடையதையெல்லாம் சாப்பிடமாட்டீர்கள்" என்று யாரோ கேட்டார்கள். அப்படி இல்லை என்று மறுதலிப்பதற்காகவே ஒரு துண்டை எடுத்துக் கொண்டேன். அவர்களிடம் இருக்கும் சகோதர உணர்வும், எளிமையும், வெள்ளை மனதோடு பழகும் வழக்கமும் என்னைக் கவர்ந்தவை. ஆனால் குற்றம் புரிவதாகக் கண்டுபிடிக்கப்படுபவர்கள் பலரும் அவர்களாகவே இருப்பதனாலும், அவர்களது பகுதிகளில் குற்றங்கள் அதிகமாக நிகழ்வதனாலும் அச்சமூகத்தின் ஒட்டுமொத்தத்தின் மேலும் ஒரு முத்திரை குத்தப்பட்டிருப்பதை நீங்களும் அறிந்திருக்கலாம். ஒரு நாள் தெருவைக் கூட்டிக்கொண்டிருந்த ஒரு ஆ.அ ஐயா, அவ்வழியே சென்றுகொண்டிருந்த ஒரு நங்கையிடம் (வெள்ளையர்) அமெரிக்காவின் அதிபர் யார் தெரியுமா என்று கேட்டார். அது ஒபாமா அதிபரான புதுசில். ஒபாமா அவர்களுக்கு ஒரு சக்தியளிக்கும் சின்னம் என்று உணரமுடிந்தது. நிற்க. இத்தகைய தெருவில் நடந்துகொண்டிருந்தேன். இவர்களும் நாமும் ஒன்றாகத்தான் பரிணமித்தோம். ஆப்பிரிக்காவிலோ குமரிக்கண்டத்திலோ இவர்களோடுதான் நாம் அனைத்தையும் கற்றிருந்திருப்போம். இவர்களைப் போலவே பலரை நம்மூர்களில் காணலாம். அந்தமானிலும், ஆஸ்திரேலியாவிலும், பசுமை வேட்டை நடக்கும் வட இந்திய மலைக்காடுகளிலும், இந்தோனேசியாவிலும் இவர்களைக் காணலாம். ஏழு தீவுகளாய் உலகின் நிலப்பகுதி உடைந்தபோது நாம் பிரிந்து போயிருக்கலாம். இவர்களை ஏன் அச்சத்தோடு பார்க்க வேண்டும். இதோ என்னைப் பார்த்துத் தலையசைக்கிறார்கள், கை காட்டுகிறார்கள். யாரேனும் தாக்க வந்தால், இதோ பார்த்தாயா நானும் உன் சகோதரன் தான் என்று சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைப்பு ஓடுகிறது. வீடுகள் தெருச்சாலைக்கு அண்மித்தபடி இருக்கின்றன. பெரிதாய், தள்ளி இருந்து, உயர்ந்து, பெரிய கதவுகளைப் பூட்டியபடி, ஆளரவமற்று இவ்வீடுகள் நம்மைப் பயமுறுத்துவதில்லை. நம்மூர்ப்பகுதிகளில் இருப்பதைப் போலவே இருக்கின்றன. முன்புறங்களில் மனிதர்கள் திரிகிறார்கள். குடும்பத்தோடு அமர்ந்திருக்கிறார்கள். பேசிச் சிரித்திருக்கிறார்கள். குழந்தைகள் வண்டியுருட்டி விளையாடுகின்றனர். . ஐந்தாறு பையன்கள் விடலைப் பையன்கள் சைக்கிளில் அமர்ந்தும், சாலையில் நின்றும் பேசிக்கொண்டிருந்தனர். நான் அவ்வழியே சென்றபோது "no bomb buddy" (குண்டு எதுவும் இல்லையே நண்பா என்பதாக) என்றான் ஒரு பையன். நான் சிரித்தபடியே no bomb for buddies என்றேன். சிரித்தார்கள். கடந்தேன். எதிரே வருபவர்கள் தமது வேலையைக் கவனித்துச் செல்கிறார்கள். அல்லது ஒரு புன்முறுவலோடு தலையசைக்கிறார்கள். என்னைத் தவிர ஒரேயொரு வேற்றினத்துக் காரரைக் கண்டேன். அது ஒரு வெள்ளைக்காரப் பிள்ளை, தன் ஆ.அ நண்பியோடு காரின் மேல் உட்கார்ந்திருந்தது. இவர்களது பகுதிகள் நம் நாட்டின் சேரிகளைப் போலத் தனியே கிடக்கின்றன. இவர்களோடு கலப்பார் வெகு குறைவு. ஏழ்மை, கல்வியின்மை, பாகுபாடு முதலிய காரணங்களால் இவர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு இப்படியேதான் இருப்பார்களா என்று பலவிதமான யோசனைகளோடு கடைக்கு வந்து சேர்ந்தேன்.
Posted by சுந்தரவடிவேல் at 1 comments
Labels: discrimination, kumari, lemuria, safe zone, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்
நமக்கு அரிச்சுவடியிலிருந்தே கற்பிக்கப்படுவது என்னவென்றால் ஸ்ரீ என்பது வடமொழி எழுத்தென்றுதான். ஆனால் ஒருநாள் திருமந்திரத்தின் சக்கரம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த ஸ்ரீ என்ற எழுத்து சி மற்றும் றீ என்ற எழுத்துக்களின் கூட்டுவடிவமே என்று புலப்பட்டது. இது ச என்ற எழுத்தின் ஒரு பகுதியையும், றீ என்ற எழுத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தைப் பாருங்கள். இவ்வடிவம் காலம் செல்லச் செல்லச் சிறிது சிறிதாக
உருமாறித் தற்போதைய ஸ்ரீ என்ற வடிவை அடைந்திருக்கிறது. இதுகுறித்து யாரேனும் முன்னமே எழுதியிருக்கிறார்களா என்று தெரியாது. தகவலிருந்தால் குறிப்பிடவும். இன்றும் ஈழத்தமிழர்கள் சிறீதரன், சிறீநிவாசன் என்று எழுதுவதைக் காண்கிறோம். ஆக, ஸ்ரீ என்பது தமிழ் எழுத்தே, அது வடமொழி எழுத்தல்ல என்றே தோன்றுகிறது. எக்காரணங்களால் ஸ்ரீ வடமொழி எழுத்து என்று பெயர்பெற்றது என்பதையறிய ஆவலுண்டாகிறது. மேலும் திருமந்திரத்தில் ம் என்ற உச்சரிப்பைக் குறிக்கச் சிறிய வட்டத்தையும் பயன்படுத்தியிருக்கிறார். உதாரணமாக ரீம் என்பதை "ரீ"க்குப் பக்கத்தில் ஒரு சிறிய வட்டத்தைப் போடுகிறார். இது ஐரோப்பிய எழுத்துக்களில் உதாரணமாக ஆங்க்ஸ்ட்ராம் என்பதன் குறியீடாக A என்ற எழுத்துக்கு மேலே போடுவோமே ஒரு வட்டம் அதனைப் போன்றதே. ஆனால் "ரீம்" இல் இவ்வட்டம் "ரீ"க்கு வலது பக்கத்தில் போடப்பட்டிருக்கும். இத்தகைய குறியீடுகளும் தற்காலத் தமிழில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமா என்ற கேள்வியை மொழியறிஞர்களிடமே விட்டுவிடுவோம்!
Posted by சுந்தரவடிவேல் at 1 comments
Labels: genesis of Sri, ligated Tamil letters, எழுத்துப் புணர்ச்சி, வடமொழி, ஸ்ரீ
ஏய் மாத்திப்புடுவேன்
அன்னக்கி வாங்குன மாத்து பத்தாதா?
மாத்துடா அவனை...
இவையெல்லாம் மதுரைப் பக்கத்தில் 'அடி' என்பதற்கு 'மாத்து' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதைக் காட்டும் சில சொற்றொடர்கள். உங்களுக்கே தெரியும், மாத்து என்ற வார்த்தையின் தூய வடிவம் 'மாற்று'. எப்படி 'காத்து' என்பது 'காற்று' என்பதைக் குறிக்கிறதோ அதைப்போலத்தான் இதுவும் மாத்து=மாற்று. இந்த மாற்று என்ற வார்த்தை மாறு என்ற வார்த்தையிலிருந்து பிறந்திருக்கக் கூடும். மாறு என்பதற்கு பிறம்பு, மிலாறு என்ற பொருட்கள் உண்டு. இவை நாணல் வகை. தடித்தவற்றைத் தடியாகக் கொள்ளலாம். பிறம்புத் தடி. மெலிந்த நாணலை ஒன்று சேர்த்துக் கட்டுவது விளக்கு-மாறு. மிலாறு என்றும் சொல்லப்படுவதுண்டு. அடிப்பதற்குப் பயன்படுவது பிறம்பு. மேய்ப்பர்கள், காவலர்கள், வேட்டைக்காரர்களிடமிருந்தது பிறம்பு. அதையே அடிப்பதற்கும் பயன்படுத்தினார்கள். "மாற்றை"க் கொண்டு அடிப்பதனால் அது மாற்று என்றாகிப் பிறகு மாத்து என்று திரிந்தது. (இந்தியில் அடிப்பதற்கு "மார்" என்றுதான் சொல்லப்படுகிறது. இந்த வார்த்தை தமிழிலிருந்து போயிற்றா என்பதை ஆராய்வதல்ல என் நோக்கம். மாறாக, மாறு என்பதைச் சுற்றியமைந்திருக்கும் வேறு சில தமிழ்ச் சொற்கள் எப்படித் தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன என்ற வியப்பே இவ்விடுகையின் நோக்கம்!).
பழம்பாண்டி மண்டலத்தில் மாறை என்றொரு நாடு இருந்திருக்கிறது (மண்டலம் என்பது பெரும்பகுதி, நாடுகள் என்பவை மண்டலத்தின் உட்பகுதிகள்). அக்காலத்தில் நிலத்தின் பண்புகளைக் கொண்டே பெரும்பாலும் ஊர்களின் பெயர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாறு நிறைய வளர்ந்திருந்த இடம் மாறை என்பதாக இருந்திருக்கலாம். மாறோகம், மாறோக்கம் என்பனவும் கொற்கையைச் சூழ்ந்த பகுதிகள் (பழம்பாண்டி நாடு). இப்பகுதியை ஆண்டவர்கள் (ஆண்ட மன்னர்கள்) பாண்டியர்கள். இவர்களில் பலருக்கு மாறன் என்ற பெயர் உண்டு. நெடுமாறன், இளமாறன் போன்றவை. பிறம்பு என்பது தடி மட்டும் அல்ல. அதுவே கோலும் கூட. கோலைக்கொண்டு நல்லது செய்பவன் செங்கோலன். அல்லது செய்தவன் வெங்கோலன். கோலைக்கொண்டு (மாறைக் கொண்டு) ஆட்சி செய்தவன் என்பதால் அவன் மாறன் என்றும் அறியப்பட்டிருக்கலாம்.
வார்த்தைகளின் பின்னே சுழன்று சுழன்று ஓடுவது ஒருவித மயக்கத்தையும் கிளுகிளுப்பையும் தருகிறது. எதையோ கண்டுகொண்டது மாதிரியான நிறைவையும் தருகிறது. அறிதோறும் அறியாமை காண்பது அறிவு என்ற விழிப்பையும் தருகிறது. விழித்துத் தோண்டத் தோண்டச் சுரந்து தருவதற்கு எந்தாய்த் தமிழிருக்கிறது!
உசாத்துணை: செந்தமிழ் அகராதி, தொகுப்பாசிரியர் - ந.சி.கந்தையா, 1987. EVS Enterprises, Singapore.
இது எந்தப் பாடலின் கடைசி அடியென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
பலரும் இதன் பொருளைப் புரிந்துகொண்டதாக நான் நினைப்பது - இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் எனக்குத் தா என்பதாகவே. ஆனால், சங்க காலத் தமிழ் நூல்களில், முக்கியமாக, முதல் மற்றும் இடைச்சங்க நூல்கள் பெரும் கடற்கோள்களினால் அழிந்துபட்டன என்பதைப் பல இலக்கியச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. முக்கியமாகப் பலரால் கையாளப்படுவது "பஃறுளி ஆற்றோடு பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்பது சிலப்பதிகாரம். இத்தகைய கடற்கோள்களினால் முதலிரு சங்கத்து நூல்களுள் பெரும்பாலானவையும், தமிழர்களின் சொற்களும், வாழ்வும், கலையும் பெருவாரியான அழிவுக்குள்ளாயின. முதல் இரு சங்கங்கள் முறையே மதுரை, கபாடபுரம் ஆகிய இடங்களில் இருந்ததாக ஆய்வர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்நிலையிலேயே மூன்றாவது சங்கம் வடமதுரையில் (தற்போதைய மதுரையில்) அமைக்கப்பட்டது. கடற்கோள்களில் தப்பிப் பிழைத்த பலநூல்களும் சரி, கடைச்சங்க காலத்து நூல்களும் சரி, பிற்காலத்தில் மூண்ட அரசியல், சமூகப் பிணக்குகளின்போது அழிக்கப்பட்டமையும் நிகழ்ந்திருக்கிறது. இந்த மூன்று சங்கத்து நூல்களும் தமிழர்களின் வரலாற்றைப் பெரிதும் புரிந்துகொள்ள உதவக்கூடியன. பெரும் அறிவுக் களஞ்சியங்களாவன. ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் மாளாத மாண்புடையன. இவற்றைக் கற்பதற்கான நெடுவாழ்வு சாதாரண மாந்தர்க்கில்லை. கல்வி கரையில, கற்பவர் நாள்சில என்றதனை இங்கு நினைவுகூர்க. எனவேதான் மெய்யறிவினாலே, ஓதாக்கல்வியாலே இம்முச்சங்கங்களின் தமிழையும், இலக்கியங்களையும் உணர்ந்து சுவைத்து இன்புற ஏங்கித் தவித்த மனதாக, "பாலும் தெளிதேனும்" என்ற பாடலைப் பாடிய இந்த ஔவையார் (பல ஔவையார்களில் இவர் பிற்காலத்தியவராக இருக்கக்கூடும்) "சங்கத் தமிழ் மூன்றும் தா", அதாவது இந்த மூன்று சங்கத்துள் வளர்ந்த தமிழையும் எனக்குத் தா என்று இறைஞ்சுகிறார் என்பதாகவும் பொருள் கொள்ளத் தோன்றுகிறது.
இப்பாடலை இன்னும் சிறிது நோக்கினால், "கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே" என்பது யாரை அல்லது எதனைக் குறித்தென்று ஒரு கேள்வி எழுகிறது. இதன் பரவலான விளக்கம் பிள்ளையார் என்பது. ஆனால் மணி என்பதைப் பலரும் பலவிதமாகப் பொருள் கொள்கின்றனர். மணி என்பதை நம் உள்ளத்தே உறைகின்ற ஞானத்தின் குவிய இடத்தைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். ஞான மணியே, நன்மணியே, பொன்மணியே, நடராஜ மணியே என்பார் வள்ளலார். இந்த ஞானத்தையே "தூமணி" என்பதாகக் கொள்ள இடமிருக்கிறது. துங்கக் கரிமுகம், கண்களை மூடிக்கொண்டு புருவ மத்தியைப் பார்த்தால் தோன்றும் கோலம். தோன்றி மறைந்து விளையாடும் ஒரு காட்சி. ஒளியும் இருளுமாய்க் கலந்து காட்டும் கோலம். அதுவே ஞானத்தின் இருப்பிடமாகப் பலராலும் காட்டப்படுவது. திருமூலரிலிருந்து பல சித்தர்களும் சிந்தையைச் செலுத்துவது இவ்விடத்துக்கே. இக்காலத்து யோகாசன வியாபாரிகளுக்கும், மத வியாபாரிகளுக்கும்கூடப் புரிந்தோ புரியாமலோ இவ்விடத்தின்மீது ஒரு மயக்கமுண்டு. ஆக, அங்கே இருக்கின்ற ஞானத்தால் பலவற்றையும் உணர முடியும். மெய்யுணர்தல். மெய்யறிவு. மெய்ஞானம். இது ஓதாமலேயே வாய்க்கக்கூடியது என்பதாகப் புரிந்துகொள்ள முடியும். இந்தத் தூமணியிடமே ஔவையார் முச்சங்கத் தமிழையும் தரச்சொல்லி வேண்டுகிறார். சரி, முதல் வரியில் வரும் சாப்பாட்டுச் சரக்குகள் என்னத்துக்கு? "பால், தெளிதேன், பாகு, பருப்பு" என்ற நான்கும் மனிதர்கள் உயிரைக் கட்டிக் காத்துக்கொள்ளப் போதுமான அத்தனைச் சத்துக்களையும் கொண்டுள்ளன. இவற்றை மட்டுமே உண்டுகொண்டு வேறு உண்டியைத் தேடாது உயிர்வாழ்ந்துவிட முடியும். சாதகருக்கும் உண்டி தேவை. காற்றைக் குடித்து உயிர்வாழ எல்லோருக்கும் முடிந்துவிடுவதில்லை. அதே நேரத்தில் ஆடம்பரமான பெருவுணவுக்கும் நேரம் கூடுவதில்லை. எனவேதான் இந்த அடிப்படை உணவுப்பொருட்களை மட்டுமே கொண்டு உன்னைப் பேணிக்கொண்டிருக்கிறேன், எனக்கு வேண்டியதைக் கொடு என்கிறார்.
மதங்கள் எதனை வேண்டுமானாலும் மக்களிடமிருந்தும், அவர்தம் மூதாதையரிடமிருந்தும் எடுத்துக் கொள்ளலாம். அவற்றையே இன்னொருவிதமாக மக்களிடம் பரப்பலாம். மக்களிடம் தம் ஆளுமையைத் தக்கவைத்துக் கொள்ள எத்தனைக் கோலங்களையும் புனையலாம். ஆனால் மெய்தேடும் மக்கள் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று கண்ணால் காண்பதையும், காதால் கேட்பதையும் மெய்யென்று எண்ணலாகாது. தீர விசாரிப்பதைச் செய்துகொண்டேயிருக்க வேண்டும். மெய்யை அடையும் வரை தேட வேண்டும். தேடினால் கண்டடையலாம்.
Posted by சுந்தரவடிவேல் at 11 comments
Labels: Bell, Ganesh, Three Sangams, Wisdom, ஔவை, சங்கத் தமிழ், மணி, மெய்ஞானம், விநாயகர் அகவல்

வயலிலே இருக்கின்ற பயிர்களிலே ஒவ்வொன்றுக்கும் நீர் தேவை. வாய்க்காலில் ஓடி வரும் தண்ணீர் வாய்மடையை அடைந்து வயலுக்குள் நுழைகிறது. பயிர் ஒவ்வொன்றையும் நனைக்கிறது. தண்ணீரைக் காணாத பயிர் வாடும். அதனைப் போலத்தான் நம்முடலின் செல்களும். ஒவ்வொன்றுக்கும் உயிர்வாயு (ஆக்சிஜன்) தேவையாயிருக்கிறது. காற்றில்லாத இடம் மரணிக்கிறது. ஒவ்வொரு செல்லுக்கும் காற்றைக் கொண்டுபோகத்தான் நாளங்களும், நுண்குழல்களுமிருக்கின்றன. அவை காற்றைச் சரிவர ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டுபோகும் வழிமுறைகள்தான் யோகாசனங்களும், மூச்சுப் பயிற்சிகளும். சில யோகாசனங்களைச் செய்யும்போது, வளையாத இடங்களை வளைத்துப் பிடிக்கும்போது அங்கே இரத்தம் பாய்வதை உணரமுடியும். இரத்தம் பாய்வது புதிய காற்றைத் தரவும், பழைய கசடுகளை அடித்துக் கொண்டுபோய் வெளியேற்றவும். உடலை வளைக்காது ஒரே வேலையை வருடம் முழுக்கச் செய்யும் இன்றைய சாமானியர் ஒவ்வொருவருக்கும் தேவையானது இத்தகைய இரத்த ஓட்டம். இதனைச் செய்யும் ஒரு முறைதான் ஓம் என்ற உச்சரிப்பு. மூச்சை நன்றாய் இழுத்து ஓ.....ம்........என்று சொல்லிப் பாருங்கள். ம்....என்று குறைந்துகொண்டே போய்க் கடைசியில் ஓசையும் வராத ஓரிடம் வரை செல்லுங்கள். அப்போது உங்கள் செல்கள் காற்றைக் கேட்டுக் கெஞ்சுவதைக் காணலாம். பசிக்கின்ற வயிற்றைப் போல் அது ஏங்கும். காற்றுக் குறைந்த இந்நிலையை hypoxia என்பார்கள். இந்நிலையில் செல்கள் தமது பாதுகாப்புச் செயற்பாட்டை முடுக்கிவிடுகிறன்றன. சாவிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளைக் கையாளுகின்றன. இதுவரை சாவென்றால் என்னவென்றே அறியாத, கஷ்டமென்றால் என்னவென்றே அறியாத செல்கள் ஏதோ ஆபத்து என்று தம்முடைய வாழும் திறத்தையெல்லாம் உசுப்பிவிடுகின்றன. இப்போது மீண்டும் காற்றை இழுத்துக் கொள்ளுங்கள். Reoxygenation என்பது இந்நிலை. அது எல்லா செல்களுக்கும் மீண்டும் காற்றை அனுப்புகிறது. இதைப் போலத் திருப்பித் திருப்பிச் செய்வது செல்களின் உயிர்ப்புத்தன்மையைக் கூட்டும். இது செல்களைப் பெரும் ஆபத்துக்களிலிருந்து (severe hypoxia) தப்பிக்க வைக்குமளவுக்கு முன்கூட்டியே தயார்நிலையில் வைத்திருக்கிறது (preconditioning).
ஓம் என்பது ஒரு உச்சரிப்பு. ஒற்றைச்சொல் மறை. மறையென்பது மந்திரம். இவ்வுச்சரிப்பிலிருந்தே அண்டம் பிறந்ததென்பர், மந்திரங்கள் பிறந்ததென்பர், யாவும் இதனுள்ளே அடக்கமென்பர். இவ்வோசையின் பிறப்பையோ, இதிலிருந்து பிறக்கின்றவற்றையோ குறித்து எழுதும் கல்வி எனக்குக் கிடையாது. ஆனால் இவ்வுச்சரிப்பையே பண்டைய தமிழர்கள் தம் உடலை வலிமையாக வைத்திருப்பதற்குப் பயன்படுத்தினர். திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் பலவிடங்களில் இந்த ஒற்றைச் சொல்லின் மகிமையைப் பேசுகிறார். வளியெங்கும் நிறைந்திருக்கும் காற்றை மட்டும் அள்ளிப் பருகியே உயிர் வாழலாமென்கிறார். இன்றைய ஆராய்ச்சிகளில் மூலச்செல் (stem cell) பற்றிய அறிவு வளர்ந்துகொண்டே வருகிறது. மனிதவுடலில் எல்லா வயதிலும் இந்த மூலச் செல்கள் இருப்பதாக இன்றைய அறிவியல் கூறுகிறது. கருவிலே குழந்தையாயிருந்தபோது இருந்த செல்களின் ஒரு தொகுதி இன்னமும் அழியாமல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அங்கிருந்துதான் உடலின் மற்ற இடங்களுக்கு மூலச்செல்கள் நகர்ந்து சென்று மாறுபாடடைந்து வெவ்வேறு வகையான வேலைகளைச் செய்யக்கூடும் என்கிறது இன்றைய அறிவியல். இந்த மூலச்செல் டெப்போவைத்தான் திருமூலர் "மூலாதாரம்" என்கிறாரா? "மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்து" என்கிறது விநாயகர் அகவல். கால் என்பதற்கு காற்று என்றும் ஒரு பொருள் உண்டு. இந்த மூலாதாரத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான வழிமுறைகள்தான் ஓம் என்ற உச்சரிப்பின் வழியான மூச்சுப் பயிற்சியும், மற்றபிற யோகாசனங்களும் என்று தோன்றுகிறது. இதனைக் குறித்த முறையான அறிவியல் ஆய்வுகள் பெரிதும் இல்லை. பண்டைத் தமிழர்கள் கைக்கொண்டிருந்தவைதாம் இந்த முறைகளெல்லாம். சித்தர்களும், மொழியறிஞர்களும் தம் மாணாக்கர்களுக்குக் கற்பித்தவைதாம். ஆனால் இன்றைய நிலையில் இப்பயிற்சிகள் மதங்களுக்குள் சென்று பிணைந்துகொண்டதால், மதம்சாரா தமிழர்கள் விலகியே நிற்கிறார்கள். நாம் நம்மைக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்குட்பட்ட, அரசியல் நிலைகளால் திசைதிருப்பப்படுகின்ற சமூகமாக உணராமல், அதற்கும் முற்பட்ட செல்வ, இலக்கிய, வாழ்வியல் செழிப்புற்ற சமூகமாக உணரவேண்டும். யோகாசனம், மூச்சுப் பயிற்சி முதலான இத்தகைய பயிற்சிகளை நம்முடையன என்ற உரிமையோடு மீண்டும் கைக்கொள்ள வேண்டும். வலிமையான வாழ்வினை நாமும் வாழ வேண்டும். அழகிய, வலிய உடலை நாமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும். பதினெட்டுச் சித்தர்களும் நம்முடையவர்கள் என்ற உரிமை நமக்கு வேண்டும். அவர்கள் போதித்த மருத்துவமும், ஆன்மீகமும் தமிழரதுதான் என்ற விழிப்பு வேண்டும்.
Posted by சுந்தரவடிவேல் at 6 comments
Labels: om, Sidha, stem cell, Tamil Om, Thirumoolar, ஓம், சித்தர்கள், தமிழ், மூலச்செல்
பன்மொழி மற்றும் பல்கலாச்சாரம் ஆகியவற்றைக் கொண்டாடும் நோக்கில் உலகெங்குமுள்ள ஐ.நா. அலுவலகங்களில், ஐ.நா.வின் ஆறு ஆட்சி மொழிகளுக்குமான விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும். இந்த ஆறு மொழிகளும் "வரலாற்று முக்கியத்துவமும், அடையாள முக்கியத்துவமும்" வாய்ந்தவை என்று ஐ.நா. தனது உலகத் தாய்மொழி தினத்தன்று வெளியிட்ட அறிக்கையில் கூறுகிறது.
இந்நாட்களாவன:
அரபு மொழி தினம் - டிசம்பர் 8. (ஏனென்றால் 1973 டிசம்பர் 8ஆம் நாளன்றுதான் ஐ.நா. அரபு மொழியைத் தனது ஆறாவது ஆட்சிமொழியாக அறிவித்தது)
ஆங்கில மொழி தினம் - ஏப்ரல் 23 (வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த நாள்; பிறந்தது 1564 வாக்கில்)
பிரெஞ்சு மொழி தினம் - மார்ச் 20 (1970, மார்ச் 20ல் ஆரம்பிக்கப்பட்ட, பிரெஞ்சு மொழியைப் பேசும் மக்களைக் கொண்ட நாடுகளுக்கான, ஒரு கூட்டமைப்பு).
ரஷிய மொழி தினம் - ஜூன் 6 (அலெக்ஸாண்டர் புஷ்கின் என்ற கவிஞர் 1799 ஜூன் 6 ஆம் தேதி பிறந்தார்)
ஸ்பானிஷ் மொழி தினம் - அக்டோபர் 12 (1492ஆம் ஆண்டு அக்டோபர் 12இல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். இந்நாள் உலகெங்கும் ஸ்பானிய மொழி பேசும் மக்களால் கலாச்சார நாளாகவும், கொலம்பஸ் நாள் என்றும் கொண்டாடப் படுகிறது)
சீன மொழி தினம் - இதற்கும் விழா உண்டு. ஆனால் இன்னமும் தேதி அறிவிக்கப்படவில்லை.
இப்போது நமது கேள்விகளுக்கு வருவோம்:
1. உலகத் தாய்மொழிகள் தினம் என்ற ஒன்றை பிப்ரவரி 21ஆம் தேதி கொண்டாடும்போதே எல்லா மொழிகளையும் கொண்டாடுவதாக ஆகாதா? அல்லது அம்மையப்பனைச் சுற்றினால் உலகத்தைச் சுற்றியது போல, இந்த அறுபடை மொழிகளைக் கொண்டாடினால் உலக மொழிகளையெல்லாம் கொண்டாடியதாக அர்த்தம் என்று ஐ.நா. சொல்கிறதா?
2. "அடையாள மற்றும் வரலாற்று முக்கியத்துவம்" ("symbolic or historic significance") என்று சொல்லிவிட்டு இந்த ஆறு மொழிகளை முன்னிறுத்தும்போது மற்ற மொழிகளுக்கு இந்த முக்கியத்துவம் குறைவு என்று மறைமுக அர்த்தம் கற்பிக்கிறதா ஐ.நா.?
3. இவ்விழாக்களுக்காக நிச்சயமாக ஆண்டுதோறும் பணம் வாரி இறைக்கப்படும். இவ்விதம் இந்த ஆறு மொழிகளும் ஆடம்பர விழாக்களோடு கொண்டாடப்படும்போது மற்ற மொழிக்காரர்கள் ஏழைக் குழந்தைகளைப் போல விரல் சூப்பிக்கொண்டு தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா அல்லது எல்லாமே நம் மொழிதான் என்று பரந்த மனதுடன் அள்ளி இறைக்கப்படும் பன்னாட்டு மிட்டாய்களைப் பொறுக்கிக் கொள்ள வேண்டுமா? இப்படிப் பொறுக்கித் தின்னும்போது "பார், உன் தாய்மொழியைப் படிப்பதை விட இந்த மாதிரி ஏதாவது படித்தாலாவது இப்படிப் பொறுக்கித் தின்னலாமே" என்று நாலு புத்திசாலிகள் யோசனை சொல்லும்போது அப்படித்தானோ என்ற எண்ணம் பிறக்குமா?
உங்களுக்குக் கண்டனம் இருந்தால் அல்லது பாராட்ட விரும்பினால் மேற்கண்ட செய்தியில் இருக்கும் தொடர்பு மின்னஞ்சலில் இருப்பவருக்குத் தெரிவியுங்கள்.
Posted by சுந்தரவடிவேல் at 2 comments
Labels: hexalingualism, Language day, Mother Language Day, UN disparity, தாய்மொழி தினம், மொழிகளின் தினம்

தமிழ்மணத்துல ஓட்டுப் போடலைன்னா இப்பவே போட்டு நல்ல எழுத்தை ஊக்குவிங்க!
சுட்டி
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
Labels: blog awards, Tamil blogger award, tamil blogging, Tamil blogs, tamilmanam awards 2009