Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

இருளை அகற்றிய ஒளி



யாதும் ஊரே பாடலை நினைக்கும்போதெல்லாம் அதனை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றும். அதன் முதல் வரியைப் பல கோணங்களில் யுவாவுடன் பேசிப்பார்ப்பதுண்டு. எல்லாம் உன் ஊர்தான், எல்லா ஊர்களும் உன்னுடைய ஊரைப் போலவே சிறப்புடையவைதாம் என்பன சில உதாரணங்கள். இதனை இன்னொரு மாதிரி நேற்று புரிந்துகொண்டேன். அதுதான் இக்குறிப்பு: 

நேற்று மாலை ஒரு சிறிய நடைப் பயணம். நாங்கள் முன் குடியிருந்த பகுதியில் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடந்தேன். சற்றே இருட்டிக்கொண்டு வரும் நேரம். சாலைக்கருகே ஒரு வாய்க்கால். மரங்களிலிருந்து சுவர்க்கோழிகள் கத்தத் துவங்கியிருந்தன. சட்டென்று வாய்க்காலுக்குள்ளிருந்து நான்கைந்து பறவைகள் எழுந்து பறந்து சென்றன. இவை இப்போது நாங்கள் வசிக்கும் பகுதியிலிருக்கும் பறவைகளைப் போலவே இருந்தன. இது வெஸ்ட் ஆஷ்லே பறவையா, அல்லது மௌண்ட் ப்ளசண்ட் பறவையா, எல்லா இடங்களிலும் அது பறவைதான், அதற்கேது ஊரும் நாடும் என்று நினைத்துச் சிரித்தேன். அப்போதுதான் தங்கமணியின் ஒரு பறவைப் படமும் அதன் குறிப்பும் நினைவுக்கு வந்தன. அப்பறவை எங்கோ வேறு தேசத்திலிருந்து வருமாம், இங்கே குஞ்சு பொறிக்குமாம், பிறகு திரும்பிவிடுமாம். இங்கு குஞ்சு பொறிப்பதால், அது இந்த ஊரா, அல்லது அங்கு பறந்து திரிவதால் அது அந்த ஊரா? இரண்டும் அதன் ஊர்தான். செல்லுமிடமெல்லாம் அதன் ஊர்தான். இந்தியாவில் பிறந்ததால் இந்தியரா, அமெரிக்காவில் வாழ்வதால் அமெரிக்கரா? அப்படியெல்லாம் இல்லை. நீ எங்கு இருக்கிறாயோ அதுதான் ஊர். எங்கெங்கெல்லாம் போகிறாயோ அதுவெல்லாம் ஊர். யாதானும் நாடாமால் ஊராமால் என்ற குறள் நினைவுக்கு வருகிறது. உன்னால் போக முடிகிறதெல்லாம் ஊர்தான். ஒரு பறவையைப் போல. உனக்கெனச் "சொந்தமான" ஊர் என்றோ, நீ இந்த மண்ணுக்கு உரியவன் என்ற கட்டிப்பிணைப்போ எதுவுமில்லை. யாதும் ஊரே என்ற இப்பதம் கட்டற்ற நிலையின் உச்சம். பிணைப்புக்களிலிருந்து விடுபடவைக்கும் மந்திரம். 
யாவரும் கேளிர்: பகைமையின் எதிர்ப்பதம் கேண்மை (பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்). பகைமை கொண்டிருப்பவர் பகைவர், கேண்மை கொண்டிருப்பவர் கேளிர். பறவைகள் பல்வேறு விதமான நிறங்கள், இயல்புகள் என்பவற்றோடு இருந்தாலும் (உணவுத் தேவையைத் தவிர, அல்லது பொதுவாக) ஒன்றோடொன்று அடித்துக் கொண்டே இருப்பதில்லை. பகைமை பாராட்டுவதில்லை. அருகருகே அமர்ந்து பறந்து அதன் பாட்டிலேயே அதனதன் வேலையைப் பார்த்துத் திரிகின்றன. இதைப்போலவே இரு. 
தீதும் நன்றும் பிறர் தர வாரா: உனக்கு நிகழும் எல்லாவற்றுக்கும் நீதான் காரணம், வேறு யாருமல்ல. 
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன: உனக்கு வரும் நோய்க்கும் நீதான் காரணம், அது தணிந்து விலகுவதற்கும் நீதான் காரணம். (நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம், நோய் செய்யார் நோயின்மை வேண்டுபவர்!). நாம் நன்றாக உடம்பைப் பேணினால் நோய் வராது. நாம் மருந்தை ஒழுங்காக உட்கொண்டால் நோய் தணியும். எல்லாப் பொறுப்பும் நமக்கே. உன் நோய்க்குக் கோக், பெப்சி, பியர், பிட்சாவைக் குறை சொல்லாதே. ஒழுங்காக தினமும் யோகப் பயிற்சி செய் :)
சாதலும் புதுவதன்றே: சாவது புதுமையில்லை. தினமும் செத்துச் செத்துப் பிழைக்கிறோம் உறங்குவது போலும் சாக்காடு. நாளது ஒன்றுபோல் காட்டி உயிர் ஈறும் வாள். தினமும் மரணத்தை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறோம். அதைப் புதுமை என்று நினைத்து பயப்படாதே.
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின் இன்னாதென்றலும் இலமே: வாழ்க்கையை நிதானமாகப் பார். இது இன்பமும் இல்லை. துன்பமும் இல்லை. இவை இரண்டு நிலைகளும் மனதின் பார்வைகளே, வாழ்வின் உண்மை இயல்பு அதுவல்ல. இன்பத்துள் இன்பத்தைத் தேடாதவர் துன்பத்துள் துன்பமடைவதில்லை. தாமரை இலைத் தண்ணீரைப் போல. முதல் வரியான யாதும் ஊரேயில் சொன்ன பிணைப்பற்ற நிலையில் இருப்பவருக்கு இன்பமும் துன்பமும் ஒருசேரவே தோற்றமளிக்கும். 

மின்னொடு வானம்..மல்லல் பேர்யாற்று: 
இது அமைதியான காட்சியில்லை. யோசித்துப் பாருங்கள். வானம் இருள, மின்னல் வெட்ட, கடுஞ்சத்தத்துடன் மழை பொழிகிறது. அப்படிப் பொழிந்த மழையால் பெருக்கும் ஆறானது பாறைகளில் மோதி அதிரோசையை ஏற்படுத்துகிறது. இந்த வரிகளில் முகத்தில் நீர் அறைகிறது. ஒரு வேகம். காட்டாற்றின் சீற்றம் தெறிக்கிறது. வாழ்க்கை இப்படியும் இருக்கலாம். சில நேரங்களில் இப்படியும் வன்மம் தோன்றலாம். பயமென்ற இருள் மேகம் சூழலாம். துன்பமெனும் மின்னல் வெட்டிப் பொசுக்கலாம். துக்கமென்னும் ஆறு நமை இழுத்துப் போகலாம். 

நீர்வழிப் படூஉம் புனைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம்: 
எந்த ஆறும் மேற்கண்ட சீற்றத்துடனேயே பாய்வதில்லை. எல்லாம் முறைப்படும். அமைதியாகும். நிரந்து பாயும், புனைகளைச் சுமந்து மெதுவாகச் செல்லும் அமைதியை அடையும். அதுவே ஆற்றின் முறை. வழி. இயல்பு. அப்படியாகவே வாழ்வும் சீற்றம் தணிந்து அமைதியாகும். ஆறு என்பதே முறையாகச் செல்வதுதான். ஆற்றுப்படுத்தல் என்பது முறைப்படுத்தல். வாழ்க்கை எவ்விதமாகத் தாறுமாறானதாக, இரைச்சலும், இருளும், சீற்றமும் நிறைந்ததாகக் காணப்பட்டாலும், அது மாறக் கூடியது. இடம் மாறும், காலம் மாறும். அப்போது அங்கு ஓடங்கள் மிதக்கும். மாற்றங்கள் ஏற்படுவதற்கான கால, இட அவகாசத்தைக் கொடுக்க, காத்திருக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார் போல. 

மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே 
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. 

பெரியோர் என்பதும் சிறியோர் என்பதும் ஆற்றினதைப் போலவே தோற்றங்களே. அவற்றுக்கென்று அவற்றைப் புகழவும் இகழவும் வேண்டியதில்லை. 

"நீ உன் பாட்டுக்கு இரு. அது அது பாட்டுக்கு இருக்கட்டும்" என்று அம்மா அப்பா சொல்வது காதில் விழுகிறதா :) 

இது ஒரு அடைதற்கரிய பெரு நிலை. இதைத்தான் பண்டைச் சமூகம் வலியுறுத்தியது. பெரும் கோயில்களையும், அணைகளையும், ஆறு, வாய்க்கால், குளம், வயலைக் கட்டியவர்கள் 6 பெட்ரூம் வீடுகளைக் கட்டிக் கொண்டு அதற்குள் இருந்ததில்லை. வெடியுப்பை மருந்துக்குப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்குத் துப்பாக்கியைக் கண்டுபிடிக்கத் தெரியாமலில்லை. வகை வகையாகச் சாப்பிடத் தெரிந்த அவர்கள்தாம் உண்பது நாழி என்றும், அழகிய ஆடைகளை நெய்தவர்கள்தாம் உடுப்பது நான்கு முழம் என்றும் அளவினை அறிந்தார்கள். எத்தனை இருந்தாலும் நிலைப்பது புகழொன்றே என்ற நிலையை அடைந்தார்கள். அதனால்தான் எந்த அழகும் அழகல்ல, நெஞ்சத்துள் நல்லம் யாம் என்னும் கல்வி அழகால் பெற்ற அழகையே அழகு என்றார்கள். நிலையற்ற செல்வத்தின் பின்னே செல்வதை விட நிலையான செல்வத்தைத் தேடுதலே சிறந்தது என்றார்கள். 

இப்படித்தான் என்னுள் ஏதோ துலக்கமாகிறது. இதற்குப் பெயர்தான் தீபாவளியாக இருக்கலாம் :)





Poem from Purananuru - Song Number 192
Written by Kaniyan Poongundranaar (around 500 B.C.E)

(Modified by Sundar Balasubramanian from translations of Vaidehi Herbert and G.U.Pope) 2/28/15

Version date: 10/29/16

We live everywhere
Everyone is a kin
Adversity and goodness are not caused by others
So are the pain and relief
Death is nothing new
We do not rejoice saying life is sweet 
Nor do we say life is awful when we suffer
Through the vision of those enlightened we are clear
that the precious life will take shape -
Like a raft making its way through huge raucous river,
that roars tussling with the rocks nonstop
fed by cold rain with bolts of lightning.
So, we do not marvel at the greatness of the great

Much less, we do not ridicule the commoners.

எனதருமை இந்தியாவே, உன்னை ஆளப்போவது யார்?


//bombing of civilian areas cannot be contemplated by any civilised society.// - N. Ram, The Hindu.

மக்கள் வாழும் பகுதிகள் மீது குண்டு வீசுவதை நாகரீகமுள்ள எந்தச் சமூகமும் எண்ணிப் பார்க்கவியலாது - இந்து என். ராம்

இந்துப் பத்திரிகை மீதும், அதன் ஆசிரியர் திரு என். ராம் அவர்கள் மீதும் பல பழிச் சொற்கள் வீசப்படுகின்றன. நேற்று வந்திருக்கும் அவரது தலையங்கத்தைப் படிப்பவர்களுக்கு அவரது மனிதாபிமானமும், சமாதானத்தின் மேலும், துயரப்படும் மக்கள் மற்றும் போராளிகள் மீது அவருக்குள்ள அன்பும் விளங்கும். இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கமும் வன்முறையும் வளர்ந்து வருகிறது என்பது நாமறிந்தது. சத்திஸ்கரில் வைத்து இந்திய இராணுவ உலங்குவானூர்தி மீது நக்சலைட்டுகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலையடுத்து, இதனைப் போன்ற தாக்குதல் இனி நடந்தால் "தற்காப்புக்காக" எதிர்த் தாக்குதலை நடத்தலாமா என்று கேட்டது வான்படை. இதற்குப் பதிலளிக்கும்விதத்தில் பேசிய ப.சிதம்பரம், அந்த அனுமதி இருக்கிறதா இல்லையா என்பதற்குப் பதில், வான்படை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று கூறிவிட்டார். (அப்போது, நக்சலைட்டுகளும் ஏழைகளுக்காகத்தான் பாடுபடுகிறீர்கள், அரசாங்கமும் ஏழைகளுக்காகத்தான் பாடுபடுகிறது, வாருங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பாடுபடுவோம் என்று சொல்லியிருப்பது தனி நகைச்சுவை!). நிற்க. இந்த நிலையில்தான் வெளிவந்திருக்கிறது இந்து ராமின் தலையங்கம். அதில் நக்சலைட்டுகளுடன் கடினப் போக்கைக் கடைபிடிக்கக் கூடாதென்றும், அவர்களுடைய சமூகத் தேவைகளை நிவர்த்திப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது, அவர்களது வன்முறைக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை அரசாங்கம் களைவது போன்ற முயற்சிகளில்தான் ஈடுபடவேண்டுமே தவிர, அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. அதிலும் குறிப்பாக வான் தாக்குதல் என்பது நாகரீகமுடைய சமூகத்தின் செயலன்று (bombing of civilian areas cannot be contemplated by any civilised society.) என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் ஈழத்தில் நிகழ்ந்த இனப்போராட்டத்துக்கும் இதே அளவுகோலைக் கொண்டுவருவாரா? கண்ணை மூடிக்கொண்டு இலங்கையரசாங்கம் வீசிய குண்டுகளெல்லாம் எங்கே வீழ்ந்து வெடித்தன என்பதை இவர் காணவில்லையா? தமிழர்களின் மீது ஏவப்பட்ட வான் தாக்குதல்களும், அரச வன்முறைகளும் நியாயமாகத் தெரிகின்ற இவருக்கு, நக்சலைட்டுகளின் மீது இரக்கம் கொப்பளிக்கக் காரணம் என்ன என்று யோசிக்கிறீர்களா?

செஞ்சீனத்தின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தியானென்மென் சதுக்கத்துக்கு அழைக்கப்பட்ட பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர். மற்ற பத்திரிகைகள் சீனாவின் மனித உரிமைகளைக் கண்டித்தும், திபெத் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், மாசேதுங்கின் ஆட்சியின்போது கொல்லப்பட்ட பல இலட்சக் கணக்கான மக்களைக் குறித்தும் எழுதிக் கொண்டிருக்க, இந்து ராம் அவர்கள் செஞ்சீனத்தின் அருமைபெருமைகளை எழுதிக் குவித்தார். நக்சலைட்டுகளுக்கும் மாசேதுங்-சீனாவுக்குமிருக்கும் தொடர்புகள் வெள்ளிடைமலை. அதேபோல இலங்கைக்கும், சீனாவுக்கும் இருக்கும் உறவும் நமக்குத் தெரியும். இலங்கையரசாங்கம் அய்யா இராமுக்குத் தரும் ராஜாங்க மரியாதையும், விருதுகளும் நமக்குத் தெரியும். ஆக, அய்யா அவர்கள் செஞ்சீனத்தின் ஒரு சிறப்புப் பிரதிநிதியாக இந்தப் பிராந்தியத்திலே வலம் வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ளக் கடினமாகவா இருக்கிறது? அப்படியென்றால், இந்தியாவுக்குச் சீனாவினால் நிகழ்ந்துவரும் நெருக்கடிகள் (string of pearls முதலானவை) ராமுக்குத் தெரியாமல் இருக்குமா? இந்தியாவில் சீனாவின் முதலீடுகள் உட்பட, இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் பரவுதல் வரை எல்லா வகைகளிலும் இந்தியாவானது சீனாவுக்கு மண்டியிடவேண்டிய நிலை வரப்போகிறது என்பது பலரின் கவலையாக இருக்கிறது. இதெல்லாம் ராமுக்குத் தெரியாதா? அப்படித் தெரிந்திருந்தும் இந்தியாவின் நலன்களை சீனாவுக்கு முன்னர் பலியிடத் திட்டமிட்டிருக்கிறாரா? இந்தியர்கள் யோசிக்க வேண்டும். ஈழப் போரினால் பாகிஸ்தானும், சீனாவும் அதிகாரமிக்கவர்களாக ஆகியிருக்கிறார்களே தவிர, இந்தியா தனது மதிப்பை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இழந்திருக்கிறது. இலங்கையே இந்தியாவை மதிப்பதில்லையே. இந்த வெளியுறவுக் குளறுபடிக்கு யார் யாரெல்லாம் காரணமென்று பட்டியலிட்டால் அதில் இந்து ராம் இருப்பாரா மாட்டாரா?

இன்னொருபுறமாகப் பார்த்தால், அண்மையில் அமெரிக்காவின் சில நகர்வுகள் சீனாவுடன் இணக்கப்பாட்டினைக் கடைபிடிக்க விரும்புவதாகத் தெரிகிறது. நியூயார்க்கின் Empire State Building கோபுரமானது சீனாவின் 60வது விழாவுக்கு சிவப்பும், தங்க நிறங்களாலுமான விளக்குகளால் சொலித்தது. இது அமெரிக்காவுக்குப் புதியது. வெளியே திபெத் ஆதரவாளர்கள் போராடினார்கள். நேற்று வானொலியில், மனித உரிமை என்பது அமெரிக்காவுக்கு, பொருளாதாரத்துக்கு அடுத்துதான் என்ற கருத்து உருவாகிவருகிறது என்று ஒருவர் பேசினார். அதனால்தான் சீனாவுடன் கைகோர்க்கத் துணிகிறது அமெரிக்கா. சீனாவின் வளர்ந்துவரும் பொருளாதார பலத்துக்கு முன் அமெரிக்கா மோதலில் இறங்கத் துணியவில்லை என்பது உண்மை. ஆக, சீன-அமெரிக்கக் கூட்டுறவு எந்தெந்த வகைகளிலெல்லாம் தமிழர்களை அணுகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கூட்டணிக்கிடையில் இந்து ராம் போன்றவர்கள் என்ன செய்வார்கள், இலங்கை என்ன செய்யும் என்பதையும் யோசிக்க வேண்டும். இந்தக் குழப்பத்தில் இந்தியாவின் நலன்களை யார் யாரெல்லாம் சூறையாடுவார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும். சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் தன்னைத் திறந்துவிட்டுவிட்டு, நாட்டின் சிறிய விகித மக்களை உயர்த்தி, ஏனையோரை நசுக்கியழிக்குமா என்பதும் கவலைக்குரியது. அப்போது அமெரிக்காவின் மக்களாட்சித் தத்துவங்கள் இந்தியாவுக்குள் மாயமாகிப்போய், சீனாவின் போலி சோசலிசத்தின் முகமூடிகளையணிந்துகொண்டு இங்கே ஆட்சி செய்யப் போவது எது என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டுமா?

வாரீர் ! நாளை அட்லாண்டா மாநகரில் பேரணி !

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்திலுள்ள அட்லாண்டா தமிழ்ச் சங்கம் ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருக்கிறது. அருகாமையில் வசிக்கும் அனைவரும் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

இடம்: சி.என்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்பு
நாள், நேரம்: பிப்ரவரி 7ம் தேதி, சனிக்கிழமை, காலை சரியாக 11 முதல் 1 மணி வரை

நன்றி!

தமிழ்ச் சங்கத்தின் செய்தி:
Greater Atlanta Tamil Sangamʼs (GATS) unanimous resolution on February 3rd/2009 condemns the genocide on the Tamil civilians by Sri Lankan army.

GATS unequivocally condemn mounting civilian casualty in Sri Lanka due to intensified fighting by the Sri Lankan government forces. The humanitarian condition for over 250,000 Tamil people has reached crisis level.

GATS urges the International community to join the governments of Britain and Germany in seeking an immediate ceasefire so the humanitarian condition can be addressed.

GATS has formed an ad hoc committee to analyze the situation and bring recommendations to the EC and BOD how GATS can help acting strictly within the by-laws.

Tamil community volunteers Subathra, Keetha Mohan and Ilangovan are organizing a rally in support of Tamils

Date: Feb 7th, Saturday 2009

Time: 11am - 1pm

Place: Opposite to CNN, Atlanta

Please note that preferred dress code is Black

GATS encourages members and all community to participate in this rally and show our support to Tamils.

அனைத்துலகத் தொண்டு நிறுவனங்களின் மீது தாக்குதல்


எண்ணிலாத போர்க்குற்றங்களைச் செய்துவரும் இலங்கை அரச படையினர், இதுவரை கணக்கிலடங்காத தொண்டுநிறுவனங்களின் மேல் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதன் இன்னொரு சேர்க்கையாக நேற்றும் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் மேல் எறிகணைகளை வீசியிருக்கிறார்கள். இவற்றை மனிதாபிமானமுள்ள எவரும் கண்டிப்பார்கள். 

செய்தி: 
சிறிலங்கா அரசாங்கத்தால் "மக்கள் பாதுகாப்பு வலயம்" என அறிவிக்கப்பட்ட பகுதியான உடையார்கட்டில் அமைந்திருந்த அனைத்துலக தொண்டர் நிறுவனங்களான வன்னி மறைக்கோட்டம், கியூடெக், கரித்தாஸ் ஆகிய நிறுவனங்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் அவை முற்றாக அழிந்துள்ளன.

இவற்றின் மீது நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். 48 மணி நேரக் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனைத்தான் இந்தியா சிறிலங்காவின் யுத்த நிறுத்த அறிவிப்பு என்று கூறிவருகின்றது.

இதேவேளை, படையினரின் இந்தத் தாக்குதலில் கியூடெக், கரித்தாஸ் நிறுவனங்களின் ஆவணங்கள், வன்னிமறைக்கோட்ட ஆவணங்கள் யாவும் முற்றாக அழிந்துள்ளதுடன் அங்கிருந்த சகல கட்டடங்களும் ஊர்திகளும் அழிந்துள்ளன.

மேலும் சிறிலங்கா படையினரின் தாக்குதலால் கியூடெக் நிறுவனம், வன்னிமறைக் கோட்டம் என்பன இயங்கிய தூய யூதா கோவிலும் சேதங்களுக்குள்ளாகியது. கியூடெக், கரித்தாஸ், வன்னிமறைக் கோட்டத்தின் சகல ஆவணங்கள் உடமைகளும் இதில் எரிந்து அழிந்துள்ளன. மூன்று நாட்களுக்கு முன்னர் இதன் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. நேற்று இதனை அழிக்கும் தாக்குதல் தீவிரமாக சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டுள்ளது.