கிரிக்கெட்டே, பாழாய்ப் போ!

விளையாட்டு. எது விளையாட்டு? பளிங்குக் குண்டுகளை உருட்டி, கிட்டியை அடித்து, நொண்டியடித்தோடி, கண்ணாமூச்சி ஆடி, கால்பந்தாடி, ஓட்டப்பந்தயம் வைத்து...இப்படித்தான் நான் விளையாடினேன். அது என் குழந்தைப் பருவம். டேய் கிட்டிப்புள்ளுதான் கிரிக்கெட்டுன்னு விளயாடுறானுக அப்படின்னு எட்டாங்கிளாஸ்ல மூனு குச்சிய வச்சு ஆடுற வரைக்கும் இவைகள்தாம் எம் விளையாட்டு. இப்படித்தான் என்னோடு சேர்ந்த எல்லாப் பயல்களும் பொண்ணுகளும் ஆடினார்கள். இதுல பால் வித்தியாசமில்ல. இதுகள்ல சந்தோசம் இருந்துச்சு. கிரிக்கெட் நெய்வேலிக் காட்டாமனிச் செடியும், கருவேலமுள்ளும் மாதிரி எங்க ஊர்லயும் பரவ, கிரிக்கெட் பயித்தியம் எங்களுக்கும் புடிச்சிருச்சு.

இப்ப யோசிக்கிறேன். இந்த மூனு குச்சி ஆட்டம் எந்த வகையில் என்னோட ஊர் விளையாட்டுகளை விட உசத்தி? அதுகள்ல இல்லாத சந்தோசம் இதுல இருக்கா, உடற்பயிற்சி இருக்கா, மூளைக்கும், உடம்புக்கும் ஒவ்வொரு செல்லாப் பாத்து வேலை குடுக்குற திறன் இருக்கா? அது எல்லாத்துலயும் இல்லாத பரிணாம வளர்ச்சி பெற்ற புதுச்சிறப்பு என்ன இருக்கு இந்த கிரிக்கெட்டுல? பயலுக எல்லா விளையாட்டையும் கொன்னு புதைச்ச சவப்பெட்டியான டிவிக்கு முன்னால பழியா கிடக்குறானுக. இந்த கிரிக்கெட்டை விளையாடுறது ஒரு மணி நேரம்னா அதைப் பாக்குறதுக்கு இவன் செலவு பண்ணுறது ஒரு நாள். இது என்ன 'எகானமி'ன்னு தெரியல. கல்லூரில எங்க பாத்தாலும் இதே பேச்சு, பாதிப் பேர் வகுப்புல இருக்க மாட்டான். ஆபீஸ்ல இதே பேச்சு, எவனப் பாத்தாலும் என்ன ஸ்கோரும்பான். இதுக்கு நல்ல பதில் கேள்வி கேட்டது தீப்பொறி ஆறுமுகந்தான் (அவரு கை ரேடியோவில செய்தி கேட்டபடி போக ஒருத்தன் அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்க, "எந்த ஸ்கோரைடா கேக்குற, ங்கொப்பன் ங்கோ...போட்ட ஸ்கோரையா?"). அங்கே பதினோரு முட்டாள்கள் ஆட இங்கே பதினோரு லட்சம் முட்டாள்கள் சூதாடுகிறார்கள். அதுக்கு ஆட்டக்காரனும் உடந்தை.

இத்தனை இகழ்ச்சிகளுக்குமுரிய கிரிக்கெட் கண்றாவியை வளத்தெடுக்க பத்ரி மாதிரி ஆக்க சக்திகள் விரயம். எங்க போய் முட்டிக்க, பத்ரி சார்? அதுவும் பிஞ்சுலேயே கிரிக்கெட் நஞ்சை ஊட்டனும்னு நீங்க குடுக்கற ஐடியாவுக்கும், சங்கர் (சுவடுகள்) சொன்ன தொலைக்காட்சி விளம்பரத்துக்கும் என்ன வித்தியாசம்னு தெரியல. என்னென்னமோ உருப்படியா எழுதுற நீங்க, இப்படி ஒரு முள்ளுச் செடிக்குப் பால் ஊத்தி வளக்குறதப் பார்த்து மனசு பொங்குது. வேதனையா இருக்கு. உங்கள மாதிரியானவர்களோட நல்ல முயற்சிகளையெல்லாம் ஏன் கிராமப்புற விளையாட்டுக்களையும் (அதுகளை மட்டும்னு சொல்லல), ஆதரிப்பதா இருக்கக் கூடாது? கபடி, கால்பந்து, கைப்பந்து, ஓட்டப்பந்தயம், இதுகளுக்கெல்லாம் இங்கிலாந்துலேருந்து மரமும் மட்டையும் வேணாமே. காசே வேணாம், அல்லது ஆளுக்கு ஒரு ரூவா போட்டா நல்ல பந்து வாங்கலாமே. எல்லாரும் அழகா விவேகானந்தர் சொன்ன மாதிரி கால்பந்து விளையாண்டு உள்ளிலும் வெளியிலும் ஆரோக்கியமா இருக்கலாமே. ஒலிம்பிக்குலயும் ஒரு பில்லியனுக்கு ஒரு வெண்கலமுன்னு நாக்கப் புடுங்கிக்காம இருக்கலாமே.

பிள்ளைகள் எல்லா விளையாட்டுக்களையும் விளையாடப் பள்ளிகளிலும், வீடுகளிலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். கிரிக்கெட்டுக்குப் பள்ளிகளிலும், பெற்றோரிடத்திலும், அறிவு ஜீவிகளிடத்திலும் இருக்கும் ஆதரவும், மரியாதையும் ஒழிக்கப்பட அல்லது குறைக்கப்பட வேண்டும். அப்போதுதான் வலிமையான குழந்தைகளை வளர்த்தெடுக்க முடியும்.

0 comments: