Saturday, April 30, 2005

தமிழகத்தில் தராக்கி

ஒரு முக்கியமான பத்திரிகையாளன் கொல்லப் பட்டிருக்கிறான். நானும் தேடித்தேடிப் பார்த்தேன், நம் "வெகுசன" தினமணி, தினமலர், தினத்தந்தி எதுவும் அதைப்பற்றி மூச்சே விடவில்லையே. இந்து வழக்கம் போல் அந்தாளு ப்ளொட் காரனாயிருந்ததாலயும் எதிரிகள் இருந்திருக்கலாம் என்பதாக ஒற்றைக் கோணத்தையும், அதிலே இலங்கை அரசின் உடனடிக் கண்துடைப்பு நாடக வசனங்களையும் எடுத்துப் போட்டிருக்கிறது. அந்த ஆள் ஒரு தொடை நடுங்காப் பத்திரிகையாளன் என்பதையோ அவன் கட்டுரைகளைத் தாம் படித்துக் கற்றோம் என்பதையோ மறந்தும் குறிப்பிட்டு விடவில்லை, ஒரு சிங்களவன் சொல்லிக் கொள்ளுமளவு கூட. இவர்களது சான்றிதழோ அங்கீகாரமோ அவனுக்குத் தேவை என்பதற்காக இதை எழுதவில்லை. உருட்டுக்கட்டையோடு வந்து அலுவலகத்தைத் தாக்கினார்கள், கர்நாடக எல்லையில் காரைச் சோதனை போட்டார்கள் என்றெல்லாம் வரிந்து கட்டிப் பத்திரிகைச் சுதந்திரம் பேசும் நம்மவர்களுக்கு இந்தக் கொலையெல்லாம் கண்ணுக்கே தெரியவில்லையா? கூட்டாகத் திட்டமிடப்பட்ட ஒரு இருட்டடிப்பில் தமிழகம் ஆழ்த்தப் படுவது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.

32 comments:

  1. இப்படியான ஒரு பதிவுக்கு நன்றி, சுந்தரவடிவேல். உங்களைப் போன்ற ஈழத்தமிழரின்பால் அக்கறைகொண்ட பல நண்பர்களின் பரிவாவது இந்தப்பொழுதில் இருப்பது நெகிழ்ச்சி தரக்கூடியது. அப்படித்தான் தமிழகத்திலும், வெகுசன ஊடகங்களால் இருட்டடிப்புக்குள்ளாகும், ஈழத்தமிழர்கள் மீது அக்கறைகொள்ளும் பல நண்பர்கள் இருப்பார்கள் என்பதுவும் புரிகின்றது.

    ReplyDelete
  2. //கூட்டாகத் திட்டமிடப்பட்ட ஒரு இருட்டடிப்பில் தமிழகம் ஆழ்த்தப் படுவது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.//

    இதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பதில் பயனில்லை. அதை தகர்ப்பதர்க்கான வழிகளைத் தேடுவதே சரியாக இருக்கும். ஏன் 'வெகுசனங்களை' தேடுகிறீர்கள்? எத்தனை வலைப் பதிவாளர்கள்(ஈழத்தவர்களை தவிர்த்து) இதனை கண்டித்திருக்கிறார்கள். ஏன் அனைவருமே காவியம் படைக்க சென்று விட்டார்களா? இல்லை "இந்திய"தமிழர்கள் இதில் சறுக்கிவிட்டார்கள் என்று எதாவது காரணம் தேடிக் கொண்டிருக்கிறார்களா?

    ReplyDelete
  3. திராவிட இயக்கத்தின் மிகப் பெரிய தோல்வியானது இந்த விஷயத்தில் தான். அண்ணா சாலையில் வரிசையாக நங்கூரம் பாய்ச்சியிருக்கும் பிராமணக் குடும்ப ஊடகங்களுக்கு இணையாக வலிமையான பிராமணரல்லாதார் ஊடக இயக்கத்தை உருவாக்கத் தவறியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்த குடும்ப ஊடகங்களும்--அது திராவிட இயக்கத்தின் அரசியல்-சமூக வெற்றியின் அடித்தளத்தில் நிறுவப்பட்டிருந்தாலும்--வியாபாரத்தை நோக்கத்தைத் தாண்டி துளிகூட சமூக உணர்வற்றுச் செயல்படுவது கேவலமானது.

    ReplyDelete
  4. நிச்சயமாக வருந்ததக்கதே, தமிழக ஊடகங்களிலே இருட்டடிப்பு செய்யப்பட்டது, நான் கூட இந்த செய்தியை பல இணைய தளங்களில் தேடி தேடி படித்தபோதும் பின்னூட்டம் இடவில்லை என்பது வருந்தமே.

    ReplyDelete
  5. நானும் இன்று காலை எழுந்தவுடன்
    தினமலர் இணையத்தளத்தினை பார்த்தேன்.முக்கிய பகுதிகளில் இச்செய்தியினை காணவில்லை.பின்னர்
    "உலகம்" எனும் பகுதியில் சிறிதாக
    பிரசுரித்திருக்கிறார்கள்.புலிகள் இக்
    கொலையினை செய்திருப்பதாக அரசாங்கம் சொல்லியிருந்தால் இது
    முன் பகுதியில் செய்தியாக வந்திருக்கும்.
    (நான் நினைக்கிறேன் பத்திரிகையில்
    பிரசுரிக்காமல் இனையத்தளத்தில் பிரசுரித்திருக்கிறார்கள் போலிருக்கிறது.)

    வலைபதிபவர்களில் பாதிப்பேர் சந்திரமுகி,சச்சின்,மும்பை எக்ஸ்பிரஸ்
    படங்கள் பார்த்துவிட்டு அது தொடர்பாக
    விமர்சனம் எழுதிய களைப்பில் இருக்கிறார்கள்.
    இந்த நேரத்தில் போய் பத்திரிகையாளர்
    கொலை அது,இது எண்டு கொண்டு.
    சில வேளை மேற்படி படங்களில் தாம்
    பார்த்த கொலை என நினைத்து நாலு
    வரி விமர்சனம் எழுதிவிடுவார்கள்.விட்டு தள்ளுங்கள் பாலு.
    அழுதாலும் தாய் தான் பிள்ளை
    பெறவேண்டும்.

    ReplyDelete
  6. நன்றாக சொன்னீர்கள் சுந்தரமூர்த்தி.

    ReplyDelete
  7. Dear Sundaramoorthy,We(Tamils)are all leaves on a tree, not one similar to the other,and yet all equally important to the whole!

    Regards
    P.V.Sri Rangan

    ReplyDelete
  8. சுந்தரமூர்த்தியின் கருத்து நடைமுறைப்படுத்தச் சிந்திக்கப்படவேண்டியது. தமிழ்நாட்டிலே குறிப்பாக, ஆங்கிலப்பத்திரிகை என்கிறபோது, த இந்து மட்டுமே ஏகபோகமாக வாசகர் வட்டத்தினைக் கொண்டிருந்ததாக நான் வாசித்ததை வைத்து உணர்கிறேன். இப்போது டெக்கான் ஹெரால்ட் வந்திருக்கின்றதாகத் தெரிகின்றது. ஆனாலும், இந்து சொன்னால் அதிலே பொய்யிருக்காது என்ற எண்ணம் (ஆங்கிலம்) படித்தவர்களிலே பெரும்பாலானோரின் (இந்தப்பெரும்பான்மையைப் பிராமணர்கள் என்று மட்டும் கட்டம்போட்டு அடக்கிவிடமுடியாது) கருத்தாக இருந்திருக்கிறது. ஓர் உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டும்; தமிழ்ப்பத்திரிகைகளிலே இல்லாத தொழில்முறைப்பத்திரிகைத்தன்மை (இதை பத்திரிகாதர்மத்துடன் குழப்பிக் கொல்லக்கூடாது ;-)) இந்து போன்ற ஆங்கிலப்பத்திரிகைகளிலே இருக்கின்றது. இதுவே, அதனுடைய செய்திகளினைச் சொல்வதில் உள்ள சாய்வுநிலைப்பாடுகளையுங்கூட (கருத்துப்பக்கத்தினைக் கூறவில்லை] மறைத்துவிடும் தன்மை கொண்டிருக்கின்றது. நேற்றைய செய்திக்கும் இன்றைய கருத்துப்பத்தி எழுத்துக்குமான வித்தியாசத்தைத் தேடினீர்களென்றால், அதிகம் - குறிப்பாக இலங்கை குறித்து - கண்டுகொள்ளமுடியாது.

    தமிழ்நாட்டின் தமிழ்ப்பத்திரிகைகளும் இணையத்திலேயிருக்கும் சில ஈழத்தார்பதிப்புகள்போலவே, ஒன்று ஈழநிலையை அதீதமாக உயர்த்திச்சொல்வனவாகவோ, அல்லது, அதீதமாகத் தாழ்த்திச்சொல்வனவாகவோ இருக்கின்றன. ஆனால், ஈழத்தார் பதிப்புகளுக்கு தம் அரசியல் நிலைப்பாடு காரணமென்றால், தமிழ்நாட்டின் தமிழ்ப்பத்திரிகைகளுக்கு விற்பனைப்பரபரப்பு முக்கியம் (சந்திரமுகி விடுதலைப்புலிகளாலே தடை செய்யப்பட்டது என்பதான செய்திகூட இந்தப்பணப்(பர)பரப்பிலேயே அடங்குமென்று என் கருத்து).

    ஆனால், ஜெ அம்மையாரின் அழுத்தத்திலே இந்துவின் ஆசிரியர்களின் "மவுண்ட் ரோடு"மெக்காவிலிருந்து "பெங்களூர்" மதீனாவரையான ஓட்டத்தின்பின்னான, இணையம் முதற்கொண்டு உலகலாவிய "அராஜகத்துக்கெதிரான கூக்குரல்"களினைக் கேட்டபோது, எத்துணை இரட்டைநிலைப்பாட்டுக்காரர்களாக இவர்கள் இருக்கின்றார்கள் என்பது சிரிக்குமளவுக்கு வெறுப்பேற்றியது. அப்படியாக ஓடுவதற்கு ஒரு நாளுக்கு முன்னர்தான், இந்து ஆசிரியர் கருத்திலே, சந்திரிகா அம்மையாரின் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் மேலும் இறுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி அவருக்கு ஆதரவாக எழுதியிருந்தார்கள். ஓடியபின்னால், ஜெ அம்மையாரின் காலச்சட்டங்களை (தடா/பொடா/கடாமுடா என்பதெல்லாம் உள்ளடக்கம்) வன்மையாகக் கண்டித்திருந்தார்கள். இந்துவின் ஓர் உதவியாசிரியர் (பெயர் மறந்துவிட்டது) கண்ணீருடன் சொல்கிறார், "இப்படியான ஒரு பயங்கரமான, உயிருக்கு ஆபத்தான நிலையும் இருக்குவகையிலே பத்திரிகையாளர்களும் அவர்கள் குடும்பங்களும் தமிழ்நாட்டிலே செயலாற்ற வேண்டியிருக்கின்றது;" எப்படியான பயங்கரமான நிலை? வீட்டிலே இருக்கும் மனைவியும் பிள்ளைகளும் வயோதிபப்பெற்றோரும் அஞ்சி நடுங்கி நிற்கும்விதமாக வீட்டினைப் பொலிஸ் சோதனையிட்ட பயங்கரமான நிலை. அவனவன் உயிர்போகுமென்ற நிலையிலும் நாட்டைவிட்டோடாமல் பத்திரிகையாளனென செய்தியைத் தேடிச்சென்று திறந்து எழுதுகிறான்; இங்கென்னவென்றால், கொழும்பிலே நின்று வவுனியா, மட்டக்கிளப்பு செய்திகளை அரசிடம் சேகரித்து சென்னைக்கு அனுப்பிவிட்டுப் பிரசுரிக்கும் பத்திரிகை ஒன்றின் உதவி ஆசிரியர்கள் பொலீஸ் சோதனைக்குப் பயந்து பெங்களூர் ஓடிவிட்டு, அங்கிருந்து பயங்கரமான நிலையைப் பேசுகின்றார்கள். இதைக் காணக் கோபம் வரமுடியாது; வெறும் சிரிப்புத்தான் வரமுடியும்.

    தமிழ்நாட்டிலே காத்திரமான நல்லதோர் எதிர் ஆங்கிலப்பத்திரிகை இந்துவின் நிலைப்பாடுகளுக்கு எதிராக வெளிவரவேண்டும். அப்போதுதான் இரண்டு பக்க நிலைப்பாடுகளும் தேடிவாசிக்கின்றவர்களுக்குத் தெரியும். இஃது இலங்கைச்செய்திகளுக்காக மட்டுமல்ல (தமிழ்நாட்டிலே வாழ்கின்றவர்களுக்கு இலங்கைநிலைதான் முதன்மையான பிரச்சனையாக இருக்காது; அவனவள் அவனவள் நாளாந்த வாழ்க்கைச்சிக்கலைத்தான் முதலிலே பார்க்கமுடியும்), ஆனால், பொதுவாகவே தமிழ்நாடுசார்ந்தவர்களின் முழுநலத்துக்குமே இது நல்லது.

    /இதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பதில் பயனில்லை. அதை தகர்ப்பதர்க்கான வழிகளைத் தேடுவதே சரியாக இருக்கும்./
    பாலு சொல்வதற்குப் பாதி ஒத்தூதுகிறேன்; பாதி முரண்படுகின்றேன். தகர்ப்பதற்கான வழிகள் தேடவேண்டும்; அதிலே ஒன்றாக, மீண்டும் மீண்டும் நிரூபிப்பதும் அடங்கும்.


    /வலைபதிபவர்களில் பாதிப்பேர் சந்திரமுகி,சச்சின்,மும்பை எக்ஸ்பிரஸ்
    படங்கள் பார்த்துவிட்டு அது தொடர்பாக
    விமர்சனம் எழுதிய களைப்பில் இருக்கிறார்கள்.
    இந்த நேரத்தில் போய் பத்திரிகையாளர்
    கொலை அது,இது எண்டு கொண்டு.
    சில வேளை மேற்படி படங்களில் தாம்
    பார்த்த கொலை என நினைத்து நாலு
    வரி விமர்சனம் எழுதிவிடுவார்கள்./
    ஒவ்வொருவரும் எதைத் தேர்வதென்பதை மற்றவர்கள் தீர்மானிக்கமுடியாதல்லவா? அதனால், சந்ரமுகி, சச்சின், மும்பை எக்ஸ்பிரஸ் குறித்து எழுதுகின்றவர்கள் சிவராம் கொலை பற்றி எழுதவில்லையே என்பதாக நான் குற்றம் சாட்ட விரும்பமாட்டேன். தமிழ்நாட்டின், கீரிப்பட்டி தலித்துக்கு நிகழ்ந்த அநியாயம், தமிழ்நாட்டிலே தலித் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இருக்கும் வேலையிருந்தும் வேலையற்ற நிலை குறித்து எத்தனை ஈழத்தமிழர்கள் கருத்துச் சொல்லியிருக்கின்றோம்? பேச ஈடுபாடில்லாததை நாங்கள் திணிக்கமுடியாது. ஆனால், அடுத்த முறைக்கு இதே பேர்வழிகள் ராஜீவ், IPKF, புலிகள், காந்தீயம், பயங்கரவாதம், வதம் என்ற கோட்டிலே இணையத்திலே குதிரையோட்டவிரும்பின் அதற்கு முன்னாலே, கொஞ்சம் தம்மைச் சுரண்டிப்பார்த்துக்கொண்டு எழுதுவது நல்லதாக இருக்குமென்பதே என் கருத்து.

    ReplyDelete
  9. சுட்டிக்கு மிகவும் நன்றி சரஸ்வதி.

    மதி

    ReplyDelete
  10. நன்றாக அழுத்தமாக ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரமணி!!!

    //"மவுண்ட் ரோடு"மெக்காவிலிருந்து "பெங்களூர்" மதீனாவரையான //

    :P

    ReplyDelete
  11. காலையில் முதலில் படித்தது ராம்வாட்சின் பதிவினைத்தான். அதில் இதை ஒரு முக்கியமான விஷயமாக குறிப்பிட்டிருந்தேன். நீங்களும் எழுதியிருக்கிறீர்கள். பெயரிலியின் கருத்துக்களோடு ஒத்துப் போகும் தருணத்தில், இதனை அப்படியே விட்டுவிட இயலாது. டெக்கான் ஹெரால்டுப் பற்றி தயவு செய்து பேசாதீர்கள். அது சென்னையில் வெளியாகும் இந்திய ஆங்கில பத்திரிக்கை அவ்வளவுதான். இந்தியன் எக்ஸ்பிரஸ் அளவுக்குக் கூட சென்னை செய்திகள் இல்லாத பத்திரிக்கையது. ராம்வாட்சில் என் பின்னூட்டம் பார்க்கவும்.
    http://ramwatch.blogspot.com/2005/04/blog-post.html#111483717738992763

    ReplyDelete
  12. //பேச ஈடுபாடில்லாததை நாங்கள் திணிக்கமுடியாது. ஆனால், அடுத்த முறைக்கு இதே பேர்வழிகள் ராஜீவ், IPKF, புலிகள், காந்தீயம், பயங்கரவாதம், வதம் என்ற கோட்டிலே இணையத்திலே குதிரையோட்டவிரும்பின் அதற்கு முன்னாலே, கொஞ்சம் தம்மைச் சுரண்டிப்பார்த்துக்கொண்டு எழுதுவது நல்லதாக இருக்குமென்பதே என் கருத்து.//

    நல்ல ஆணித்தரமன கருத்து

    ReplyDelete
  13. சிங்கத்தின் குகையில் இருந்து கொண்டுதான் தராக்கி எல்லாவற்றையும் எழுதியிருக்கின்றார். இவர் போன்ற சத்தியம் தவறாத துணிச்சலான ஈழத்து எழுத்தாளரை நீங்கள் குறிப்பிடும் "வெகுசன" பத்திரிகைகள் ஒருபோதும் அடையாளம் காணப்போவதில்லை. இது போன்ற சம்பவம் வேறொரு நாட்டில் நடந்திருந்தால் அதனைக் கட்டாயம் இப்பத்திரிகைகள் பிரசுரிக்கும். வாழ்க இவர்களது நேர்மைத்தனம்.

    ReplyDelete
  14. நன்றிகள் சுந்தர். நான் இரமணியுடன் ஒத்து போகின்றேன். நாம் இதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருப்பது தேவையானது.

    ReplyDelete
  15. கருத்துச் செறிந்த மறுமொழிகளுக்கு நன்றி நண்பர்களே. இப்போதுதான் லங்காஸ்ரீயில் அவரது பேட்டிகளைக் கண்டேன் (சாராவின் சுட்டி). இந்தியப் பெருங்கடற் பிரதேசத்தில் நடக்கும் அரசியல் நாடகங்களையும் அதன் பிண்ணனிகளையும், அவற்றின் கால்களால் நசுக்கப்பட்டுவிடாமல் தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்பதையும் தெளிவாக அறிந்திருக்கிறார். தன்னுயிருக்கு ஆபத்து என்பதைப் பல முறை பேசி வந்திருக்கும் போதும் இப்படியொன்று நடை பெறுகிறது. இத்தனை பதியப்பட்ட ஆவணங்களிருந்தும் இது வெளியுலகிற்குப் பெருமளவில் அம்பலப் படுத்தப் படவில்லை. இங்கு அவரது விசயத்திலேயே அவர் சொல்லும் ஊடக மேலாதிக்கம் ஆளும் வர்க்கத்தோடு சேர்ந்து செயல்படுவதைக் காண முடிகிறது. இதே விசயம் அமெரிக்காவில் ஒரு சாதாராணக் குடிமகனுக்கு நடந்திருந்தால் அது இன்னேரம் ஊடகங்களில் புழுதி கிளப்பியிருக்கும். ஊடக வலிவு முக்கியம், அது இந்துவுக்குத் தெரிந்திருக்கிறது. பிறருக்கும் அது தெரிந்து கொண்டிருக்கிறது. திராவிட (?)க் கூத்தூடகங்களை நம்பிப் பலனில்லை. வேறு ஏதாவதுதான் வர வேண்டும்.

    ReplyDelete
  16. ரமணி சொன்னதுபோன்று இதைப்பற்றி எழுதவேண்டும் என்று எல்லோரையும் வலிந்திழுக்க முடியாது ஆனால் ஒவ்வொருமுறையும் சுத்திச் சுத்தி ராஜீவ்,ராஜனி என்று வரும்போது இதையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டியிருக்கிறது.
    இதே லங்காசிறி தளம்தான் சந்திரமுகியையும் போட்டிருந்தது அதைப் பார்த்துக் குத்தி முறிந்தவர்கள் எத்தனைபேர் இந்த நேர்காணல்களைப் பார்த்திருப்பார்கள்?

    ReplyDelete
  17. சிவராமின் செவ்வியைப் போட்டதற்காக சந்திரமுகியைப் போட்டதை நியாயப்படுத்த முடியாது ஈழநாதன். (நீங்கள் நியாயப்படுத்தவில்லையென்றே நினைக்கிறேன். ஆனால் நியாயப்படுத்துவதாக யாரும் நினைக்காமலிருக்க வேண்டும் பாருங்கள்) அத்தளத்தின் நல்லவற்றைப் பாராட்டுவதோடு தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும்தனே.

    ReplyDelete
  18. மிகவும் நன்றி சுந்தரவடிவேல் அவர்களுக்கு.

    தமிழ்நாட்டின் பத்திரிகை நிலையை எண்ணிப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. நான் அண்மையில் தமிழ்நாட்டு பத்திரிகை ஒன்றை இணையத்தில் படித்தபோது டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தை இலங்கை அமைச்சர் கூறுகிறார் என போட்டிருந்தார்கள். அவர் சிறிலங்கா பாராளுமன்ற நியதிகளின் படி அமைச்சர் தான் என்றாலும் அவரை தமிழ்அமைச்சர் இப்படி கூறுகிறார் என செய்திகளை போடுவதன் மூலம் அடிவருடிகளை வேண்டுமென்றே கதாநாயக தோற்றம் கொடுக்கிறார்கள்.

    ஆனால் டக்ளசின் செய்தியை இலங்கையில் உள்ள எந்த பத்திரிகைகளுமே முக்கியத்துவம் கொடுக்காதபோது இந்திய தமிழ் பத்திரிகைகள் மட்டும் முக்கியத்துவம் கொடுப்பபது ஏன்?

    ஆனால் இங்குள்ள தமிழ்நாட்டு வலைப்பதிபவர்களி;ன் கருத்துகள் ஓரளவு நிம்மதியை தருகிறது.

    ReplyDelete
  19. சுந்தரவடிவேல்,

    இந்தச் செய்தி ஊடகங்கள் மேல் இன்னமுமா நம்பிக்கை வைத்திருக்கின்றீர்கள்? அமெரிக்காவாகட்டும் இந்தியாவாகட்டும், இந்தப் பத்திரிக்கைகள்-அரசு உறவு மிக ஆழமானது. இரண்டின் ஒன்றுக்குள் ஒன்றான ஊடுறவுகள் மிக அதிகம். இங்கே செய்தி ஒரு ஆயுதம். ஆயுதங்களிடம் தர்ம நியாயங்களை எந்தக் காலத்திலும் எதிர்பார்க்க முடியாது.

    அனாதை

    ReplyDelete
  20. அனாதை,
    //பத்திரிக்கைகள்-அரசு உறவு மிக ஆழமானது. இரண்டின் ஒன்றுக்குள் ஒன்றான ஊடுறவுகள் மிக அதிகம்.// தராக்கியின் பேட்டியிலும் இத்தகைய கருத்தைக் காணமுடிந்தது. அமெரிக்க ஊடகங்கள் இதற்கு விதிவிலக்கில்லையென்றாலும் இவ்வளவு அச்சுறுத்தல்கள் குறித்த ஆதாரமெல்லாம் இருக்கும்போது இந்த மாதிரியொரு கொலையைச் சும்மா விட்டுவிடுவார்கள் என்று நினைக்கவில்லை என்பதைத்தான் சொல்ல வந்தேன்.

    ReplyDelete
  21. இன்றைய தினமலரில் (1.5.2005) முழுமையான செய்தியாக வெளிவந்திருக்கிறது. புளாட்டில் உறுப்பினர், பின் புலிகள் ஆதரவாளர், தமிழ்நெட் பத்திரிகையாளர்... புலிகள் ராணுவத்தைக் குற்றம் சாட்டியுள்ளனர், ராணுவம் மறுத்துள்ளது... முழுமையான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது...

    பிற பத்திரிகைகள் பற்றி எனக்குத் தெரியவில்லை.

    ReplyDelete
  22. 'தினகரன்' இணையப் பதிப்பிலும் ('பொது' பகுதியில்) நேற்றும், இன்றும் இச்செய்தி வந்துள்ளது.

    ReplyDelete
  23. தாரக்கியின் கட்டுரைகள் சுடுகின்ற உண்மைகளைச் சொன்னது. அவைகளை ஒத்துக்கொள்வது ரொம்பக்கடினமானதுதான். ஈழப்போராட்டத்தில் இப்போது மறைமுகமாகவும், நேரடியாகவும் ஈடுபடுகிற சர்வதேச சக்திகளை முறையாக இனங்கண்டு அவைகளின் உள்நோக்கங்கள், கட்டுமான அமைப்புகள், சதி வேலைகள், திட்டங்கள் இவைகளை அவர் வரலாற்றின் ஒளியில் எழுதிவந்தார்.

    இன்றைய நிலையில் ஈழப்போராட்டத்தில் நிகழும் தனிநபர் கொலைகள் ஒருவரின் தனித்துவத்தை/ சுதந்திரத்தை/ மாற்றுக்கருத்தை மறுப்பதற்காகவோ, எதிரிகள் என்ற ஒற்றைப்படை சூத்திரத்தின் கீழ் அழித்தொழிப்பதற்காகவோ நிகழவன அல்ல என்பதை சர்வதேச சக்திகளின் தமிழ் தேசியத்துக்கெதிரான முழுவீச்சில் நடைபெறும் முழுமையான நிழல்நடவடிக்கைகளை உணரவும், அறியவும் நேரும் எவரும் அறிந்துகொள்ளலாம்.


    சிவராமின் கட்டுரைகள் இத்தகைய நிழல் நடவடிக்கைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவாறு இருந்தன. அவ்வகையில் தமிழ் தேசியத்துக்கெதிராக நடைபெற்ற நிழல் யுத்தத்திலேயே அவர் அழிக்கப்பட்டிருக்கிறார்.

    ReplyDelete
  24. பத்ரி, சுந்தரமூர்த்தி
    சுடச்சுடப் பெயருக்கு இப்போதாவது வந்ததே!
    தங்கமணி, உன் இரண்டாவது பத்தியைப் பற்றி: வல்லரசவூடகங்கள் இதனை எளிமைப் படுத்தி ஒரு தனி நபர் மீதான நடவடிக்கையாகத் திரிப்பதன் மூலம் நடுநிலை மக்களை ஈழப் போராட்டத்துக்கெதிரான மனோநிலையை எடுக்க வைக்கும் தந்திரம் புரிகிறது, நன்றி.

    ReplyDelete
  25. அன்பில் ரமணி,
    //
    ஒவ்வொருவரும் எதைத் தேர்வதென்பதை மற்றவர்கள் தீர்மானிக்கமுடியாதல்லவா? அதனால், சந்ரமுகி, சச்சின், மும்பை எக்ஸ்பிரஸ் குறித்து எழுதுகின்றவர்கள் சிவராம் கொலை பற்றி எழுதவில்லையே என்பதாக நான் குற்றம் சாட்ட விரும்பமாட்டேன். தமிழ்நாட்டின், கீரிப்பட்டி தலித்துக்கு நிகழ்ந்த அநியாயம், தமிழ்நாட்டிலே தலித் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இருக்கும் வேலையிருந்தும் வேலையற்ற நிலை குறித்து எத்தனை ஈழத்தமிழர்கள் கருத்துச் சொல்லியிருக்கின்றோம் ? பேச ஈடுபாடில்லாததை நாங்கள் திணிக்கமுடியாது.
    //
    தங்களின் நிதானமான மறுமொழியை படித்தவுடன் தான், உண்மையிலேயே உறுத்தலும், குற்ற உணர்வும் ஏற்படுகிறது. இந்த அநியாய படுகொலைக்கு (குறைந்த பட்சம்) கண்டனம் தெரிவிக்க வேண்டியது வலை பதியும் தமிழர்களின் தார்மீக கடமை என்பது புரிகிறது. இம்மாதிரி தருணங்களில் நம்மிடையே ஒருங்கிணைப்பு (solidarity) அவசியம். நன்றி.

    //வலைபதிபவர்களில் பாதிப்பேர் சந்திரமுகி,சச்சின்,மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள் பார்த்துவிட்டு அது தொடர்பாக விமர்சனம் எழுதிய களைப்பில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் போய் பத்திரிகையாளர்கொலை அது,இது எண்டு கொண்டு.
    //
    கரிகாலன் வருத்தப்படுவதில் நியாயம் இருப்பதாகவே உணர்கிறேன். தமிழ் சகோதரத்துவம் இன்னும் வலுவாக இருத்தல் வேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே அவர் கூறியதை எடுத்துக் கொள்கிறேன்.

    என்றென்றும் அன்புடன்
    பாலா

    ReplyDelete
  26. //http://www.sankathi.com//


    மாமனிதர் சிவராமின் படுகொலையைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்


    மாமனிதர் சிவராமின் படுகொலையைக் கண்டித்து சென்னையில் ஆர்பாட்டமொன்று எதிர்வரும் வியாழனன்று இடம்பெறவுள்ளது. தமிழ் நாட்டின் மனித உரிமை பாதுகாப்பு அமைப்புக்கள்ää ஜனநாயக அமைப்புக்கள்ää யாழ்.குடா நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள்ää ஆகியோர் இணைந்து இவ்வார்ப்பாட்டத்தினை நடாத்துகின்றனர். தழிழகத்தினைச் சேர்ந்த சிNர்ட ஊடகவியலாளர்கள் டி.என்.கோபாலன்ää எஸ்.எஸ் மணிää இந்திய கம்யூனிட்ஸ் கட்சியைச் சேர்ந்த நல்லகண்ணு ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

    ReplyDelete
  27. //இம்மாதிரி தருணங்களில் நம்மிடையே ஒருங்கிணைப்பு (solidarity) அவசியம்.//
    நன்றி பாலா.

    சுரதா, செய்திக்கு நன்றி.

    ReplyDelete
  28. சு.வ.
    நன்றி. அரசு விட்டுவைத்த எச்சம்தான் ஜனநாயகம் என்று தெரிய வரும் தருணங்கள் இவை.இதை உணமை ஜனநாயகமாய் நினைத்துக்கொண்டு நாம் வாழ்கிறோமா? என்று நம்மையே கேட்டுக்கொள்ளவேண்டியதுதான்.

    ReplyDelete
  29. அடப்பாவிகளா! இதுக்கு கூட '-' ஒட்டு போடுவீர்களா? (2 - ? :-))

    ReplyDelete
  30. கார்த்திக்கண்ணே, எங்கேயோ போட வேண்டியத இங்க போட்டுட்டீங்களா? பொட்டியப் பாத்துத் தட்டுங்கண்ணே:))

    ReplyDelete