Saturday, April 30, 2005

தமிழகத்தில் தராக்கி

ஒரு முக்கியமான பத்திரிகையாளன் கொல்லப் பட்டிருக்கிறான். நானும் தேடித்தேடிப் பார்த்தேன், நம் "வெகுசன" தினமணி, தினமலர், தினத்தந்தி எதுவும் அதைப்பற்றி மூச்சே விடவில்லையே. இந்து வழக்கம் போல் அந்தாளு ப்ளொட் காரனாயிருந்ததாலயும் எதிரிகள் இருந்திருக்கலாம் என்பதாக ஒற்றைக் கோணத்தையும், அதிலே இலங்கை அரசின் உடனடிக் கண்துடைப்பு நாடக வசனங்களையும் எடுத்துப் போட்டிருக்கிறது. அந்த ஆள் ஒரு தொடை நடுங்காப் பத்திரிகையாளன் என்பதையோ அவன் கட்டுரைகளைத் தாம் படித்துக் கற்றோம் என்பதையோ மறந்தும் குறிப்பிட்டு விடவில்லை, ஒரு சிங்களவன் சொல்லிக் கொள்ளுமளவு கூட. இவர்களது சான்றிதழோ அங்கீகாரமோ அவனுக்குத் தேவை என்பதற்காக இதை எழுதவில்லை. உருட்டுக்கட்டையோடு வந்து அலுவலகத்தைத் தாக்கினார்கள், கர்நாடக எல்லையில் காரைச் சோதனை போட்டார்கள் என்றெல்லாம் வரிந்து கட்டிப் பத்திரிகைச் சுதந்திரம் பேசும் நம்மவர்களுக்கு இந்தக் கொலையெல்லாம் கண்ணுக்கே தெரியவில்லையா? கூட்டாகத் திட்டமிடப்பட்ட ஒரு இருட்டடிப்பில் தமிழகம் ஆழ்த்தப் படுவது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.