Monday, December 01, 2008
தெஹல்காவில் வெளியாகவிருக்கும் ஹேமந்த் கார்கரேயின் செவ்வி
Monday, November 24, 2008
ஈழத்தின் வரலாற்றைக் குழப்புகிறாரா கலைஞர்?!
Thursday, November 13, 2008
தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்
Thursday, November 06, 2008
ஈழத்தில் கிடைத்த கீதை
Tuesday, September 23, 2008
பேரறிவாளனின் கடிதம்
Monday, September 08, 2008
அமெரிக்காவில் பிள்ளையாரைக் கரைக்க முடியுமா?
Wednesday, August 06, 2008
பேருந்துக் குறிப்புகள்
கடவுச் சீட்டைப் புதுப்பிக்க வேண்டும். அதைப் புரட்டிப் பார்த்தேன். அதன் ஏடுகளுக்குள் என் 10 வருடங்களை விறுவிறுவென யார்யாரோ எழுதி முடித்துவிட்டார்கள். முச்சந்தியில் ஒரு நீரூற்றை வைத்திருக்கிறார்கள். அது எப்போதும் உயரமும் குட்டையுமாய்க் கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது. நான் அவளோடு ஒரு உரையாடலில் ஈடுபட்டிருந்தேன். ஓங்கியும் தாழ்ந்தும் கொப்பளித்து விழும் தண்ணீரின் நிறம் மாறிக்கொண்டே இருப்பதை இரவுகளில் பார்க்கமுடியும்.
ஒருநாள் முடிந்தமட்டும் களைந்துவிட்டு நீச்சல் குளத்துக்குள் முங்கினேன். மூச்சை அச்சாகப் பிடித்துச் சுழன்றது நினைவு. மூச்சு விட்டுக் கொண்டிருக்கும்வரை நான் மூச்சைப் பற்றி நினைப்பதில்லை. தொலைக்கும்போது தவிக்கிறது மனம். தொலைந்து போகின்ற பொழுதுகளில்தான் அனுபவிக்கும் ஆவல் கிளர்ந்தெழுகிறது. இருக்கும் என நினைப்பது ஆறுதல். ஆறுதலாக இருக்கும்போது மனம் அனுபவிக்க அவாவுவது இல்லை. தொலைந்து போகும் என்ற தவிப்பே அனுபவிக்கும் ஆவலைத் தூண்டுகிறதோ? தவிப்பு துயரம். உய்த்தல் இன்பம். தவிப்பு பசி. தவிப்பு தாகம். உய்த்தல் உணவு. உய்த்தல் விடாய் தீருதல். தவிப்புக்கும் இன்பத்துக்குமான நாளாந்தத் துள்ளல் அணுக்களினுள்ளே மின் துகள்களின் (எலக்ட்ரான், புரோட்டான்) துள்ளலைப் போலிருக்கிறது என்று சொல்லலாமா. வேகமாய்த் துள்ளும் அணுக்கள், உலோகங்கள், வேகமாய் வினைபுரிகின்றன. நிலைமாறிப் போகின்றன. துள்ளலின்றி, வினைகளின்றி நிலைத்த உலோகங்களை noble metals என்கிறோம். inert என்கிறோம். வினை புரியாதவை, காலத்தால் சடுதியில் மாறாதவை எல்லாம் nobleஆகுமா? ஆறுதல் நிலைத் தன்மையைத் தருகிறது. ஆறுதலும் அமைதியும் ஒருபுறம். தவிப்பும் தேடலும் ஒரு புறம். அமைதி மாற்றமின்மையிலும் செயலின்மையில் இழுத்துக் கொண்டுபோய் விட்டுவிடும். இருப்பவற்றின் மதிப்புகளை உணராமலடித்துவிடும். தேடல் அமைதியைக் குலைக்கிறது. இன்பத்தை வேண்டி நிற்கிறது.
சிலர் பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். கல்லூரிச் சாலையில் பெண் பிள்ளைகள் நடந்து போகிறார்கள். சக்கரங்கள் சுழல்கின்றன. எனது நிறுத்தம் அடுத்தது.
Thursday, July 31, 2008
Saturday, July 26, 2008
வாஷிங்டனில் நாங்கள் கண்ட கறுப்பு ஜூலை பேரணி
தூங்கி வழிந்து அதற்கு நடுவில் காலைச் சாப்பாடும் சாப்பிட்டு ஒரு வழியாய் முழித்த போது கிட்டத்தட்ட பத்து மணியாகியிருந்தது, பேருந்தும் வாஷிங்டனில் இருந்தது. குழந்தைகள் அவர்களுக்கான தோழமைகளை விரைவிலேயே கண்டுகொள்கிறார்கள். அவர்கள் ஆடித் திரிந்தார்கள். பேரணியை ஒழுங்கு செய்திருப்பது PEARL என்ற இளைஞரமைப்பு. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருக்கும் பிள்ளைகளால் ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்றாண்டுகளாக
இயங்குவது இது. இவ்வமைப்பின் முக்கிய நோக்கம், ஆட்சியாளர்களுக்கு, ஈழத்தில் மக்கள் படும் அவலங்களைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருத்தல், அதற்காக அமெரிக்க மக்களைத் திரட்டுதல். இவ்வாண்டு பேரணியில் பர்மாவின் விடுதலைப் போராட்டத்தினரும் இணைந்து கொண்டனர். 8.8.88 அன்று நடைபெற்ற எழுச்சியில் 3000 பர்மியர்கள் கொல்லப்பட்டதை அவர்களும் நினைவு கூர்ந்தார்கள். இந்த இரண்டு நாடுகளிலும் சீனாவின் பங்கு முக்கியமானது. சூடானுக்கு மட்டுமல்லாது இலங்கைக்கும் பர்மாவுக்கும் ஆயுதங்களையும், நிதியையும் வழங்கி, அங்கு ஒரு பெரிய போரைத் திணிப்பதில் சீனாவின் கை இருக்கிறது. எனவே சீனாவை இதை நிறுத்துமாறு கோருவதும் இப்பேரணியின் நோக்கம்.
வெள்ளை மாளிகையை ஒட்டிய செனட் மாளிகையின் வெளியில் இப்பேரணி நடந்தது. ஒரு அம்மா ஒலிபெருக்கியின் மூலம் குரல் எழுப்ப, பேரணிக்கு வந்திருந்தோர் வலமாக வந்து அவருடன் இணைந்து ஒலித்தோம். இவரைப் பின்புதான் Dr. Ellyn Shander என்று அறிந்தேன். சுனாமிக்குப் பின் பணிக்கு ஈழத்திற்குச் சென்று வந்ததன் பின்னர் அமெரிக்காவில் போராட்டங்களுக்குத் தனது ஆதரவினைத் தெரிவித்து வருகிறார். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னர் petitiononlineஇல் இவரது மனு ஒன்றை வாசித்த நினைவு இருக்கிறது. மகனும் நானும் கைகளைக் கோர்த்துக் கொண்டு குரலெழுப்பிக் கொண்டு போனது எனக்கு உணர்வு பூர்வமாக இருந்தது. மனமெங்கும் மக்களின் அவலத்துக்கு ஒரு முடிவு வராதா என்ற ஏக்கம் நிரம்பியிருந்தது. மகனின் ஓங்கிய குரல் என்னுள் நம்பிக்கையையும் எழுச்சியையும் பொங்க வைத்துக் கொண்டிருந்தது. அவரது கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன். வலத்தின் முடிவில் கூட்டம் ஆரம்பமானது. கொளுத்தும் வெய்யிலுக்குச் சிலர் மர நிழலில் அண்டிக் கொண்டார்கள். இரு செனட் உறுப்பினர்களின் உரைகள் வாசிக்கப்பட்டன. ஒரு மக்களவை உறுப்பினர் வந்து பேசினார். அவர்களின் உரைகள், தற்போதுதான் தாம் இந்நிகழ்வுகளைப் பற்றி அறிவதாகவும், இதுபோன்ற அறிவுறுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்து நிகழ வேண்டும் என்பதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தாம் துணை நிற்போம் என்பதாகவும் அமைந்திருந்தது.
பர்மிய அமைப்பினர், இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் அமைப்பினர், ஊடக சுதந்திரத்திற்கான அமைப்பினர் எனப் பலரும் வந்திருந்து தம் ஆதரவினைத் தெரிவித்தது மனதுக்குத் தெம்பை அளித்தது. 1983 கலவரத்தில் தப்பிப் பிழைத்த சிலரின் அனுபவங்கள் சொல்லப்பட்டன. இறுதியில் சிலர் பாடல்களைப் பாடினார்கள். இரு அம்மையார்கள் தமிழில் பாடினார்கள். Ellyn Shander மார்டின் லூதர் கிங்கின் ஒரு பாடலைப் பாடியபோது அவருடன் எல்லோரும் இணைந்து பாடினோம். PEARL இளைஞர்களும் இரு பாடல்களைப் பாடினர். கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு மலர்வணக்கம் செய்யப்பட்டது. சுமார் 5 மணிக்கு நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.ஒரு போராட்டத்துக்குப் பல முகங்களுண்டு. ஒவ்வொரு முகத்திலும் நிற்பவரின் வேலைகளும் வெவ்வேறு மாதிரியானவை. எல்லாமும் சேர்ந்தால்தான் போராட்டம் வெற்ரியடைகிறது. ஈழத்தில் போர்க்களத்திலும், பாராளுமன்றத்திலும், வீதிகளிலும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வெளி நாடுகளிலே இருப்பவர்கள் அப் போராட்டத்திற்கு என்ன செய்ய முடியும்? மனித உரிமைகள் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அங்கே தொடர்ந்தும் மீறப்பட்டு வருகிறது. அரசாங்கம், மக்களைக் காப்பதற்குப் பதிலாகக் கொடிய அடக்கு முறையை ஏவியபடி இருக்கிறது. மற்ற நாட்டினர் தத்தமது காரியங்களிலே கண்ணாயிருக்கிறார்கள். இந்நிலையில், நாம் நம் தரப்பின் நியாயங்களை எல்லோருக்கும் சொல்வது அவசியமாகிறது. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், தமிழ் என்றொரு மொழி இருப்பதையும், இலங்கை என்றொரு நாடு இருப்பதையும் அறியாதவர்கள் அதிகம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் அடங்குவர். எனவே அமெரிக்கர்களிடம் ஈழத்தைக் குறித்த புரிதல் ஏற்படுத்தப்பட வேண்டும், அங்கு நிகழும் மனிதவுரிமை மீறல்கள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டதுதான் PEARL. இது மக்களின் கருத்துரிமையின் வழியே சென்று ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபடும் இது ஒரு சட்டபூர்வமான அமெரிக்க அமைப்பு. வெளிநாடுகளில் இருக்கும் நாம் செய்ய வேண்டியதெல்லாம், PEARL போல அந்தந்த நாடுகளில் இருக்கும் அமைப்புகள் நடத்தும் இது போன்ற நிகழ்வுகளுக்கு ஆதரவளித்தல்.

பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது மகன் கேட்டார், "China China, Shame on You" என்று ஏன் கத்தினோம் என்று. தம்பி, இது உன்னுடைய சீன நண்பர்களுக்கோ, சீன மக்களுக்கோ எதிரானதில்லை. அவர்களுடைய அரசாங்கத்தின் குறிப்பிட்ட ஒரு செயலுக்கு மட்டுமே எதிரானது என்று விளக்கினேன். குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். இப்பேரணியில் கலந்து கொண்டதும், மகனோடு சென்று வந்ததும் மிகுந்த நிறைவையளித்தன. ஈழத்தில் உரிமையோடான வாழ்வொன்று மலரும் என்ற நம்பிக்கை ஓங்குகிறது. பேரணியை ஒழுங்கு செய்த PEARL இளையோர்களுக்கும், பயணத்தில் உதவிய வட கரோலின நண்பர்களுக்கும் எனது நன்றி!
Wednesday, July 02, 2008
தமிழ் அறிஞர்களா, யார் அவர்கள்?
Tuesday, July 01, 2008
ஷோபாசக்தி போன்றவர்களெல்லாம் பைத்தியங்கள் - தியாகு
"...சாதி ஒழிப்பு குறித்து தனியான சிந்தனையோ, வேலைத்திட்டமோ சி.பி.எம்மிடம் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை நிலப்பிரபுத்துவ சமூகத்தின் மிச்சசொச்சம் தான் சாதி. வர்க்கப் போராட்டம் நடந்து முடியும்போது சாதி தானாக ஒழிந்து விடும் என்பது தான் அவர்களது கருத்து. இதனால் தான் இடஒதுக்கீட்டில் அவர்களுக்கு ஆர்வம் கிடையாது. இட ஒதுக்கீடு தொழிலாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்தி, முதலாளித்துவ ஒழிப்பு ஐக்கியத்தை அழித்து விடும் என்பது அவர்கள் கருத்து..."
"...52ல் தி.மு.க. தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த அதிகாரத்தின் மூலம் திராவிட நாடு சாத்தியமில்லை என்பதால் அவர்கள் போட்டியிடவில்லை. அதே தி.மு.க.தான் 57ல் போட்டியிடுகிறது. இப்போது வரை அது நீடிக்கிறது. இடையில் கட்சிக்குப் புதிதாக வந்தவர்கள் ஆசை காட்டினார்கள்; இவர்கள் பலியானார்கள். தேர்தலில் போட்டியிட்ட போது பதவிகளின் மீது மோகம் வந்தது. அந்தப் பதவிகள் தங்கள் நோக்கங்களுக்கு உதவுமா என்று பார்க்கத் தவறி விட்டார்கள். அப்படியே தங்களது குறிக்கோளையும் இழந்து விட்டார்கள். இலக்கை கைவிட்டு அமைப்பைப் பாதுகாத்தார்கள்..."
"...நக்சலைட்டுகள் இப்போதும் யாரையாவது திட்டுவது, சொன்னதையே சொல்வது என்றுதான் இருக்கிறார்கள். இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவே இல்லை. இன்றுவரை எந்த ஆயுதப் போராட்டமும், புரட்சியும் நடந்து விடவில்லை. அதற்காக அவர்களை நான் குறைகூறவில்லை. நிஜ வாழ்க்கை அதை அங்கீகரிக்காதபோது அதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி. சமூகத்தின் உணர்வுநிலையில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டிருக்கும்போது, அந்த மாற்றத்தை செயல்படுத்த அரசு எந்திரம் தடையாக இருக்கும்போது ஆயுதம் உதவும். ஆனால் சமூகத்தின் உணர்வு நிலையையே மாற்றுவதற்கு ஆயுதம் உதவாது..."
"...சாதி குறித்து தெளிவான பார்வை இருந்தால் அதை ஒரே நாளில் சட்டம் போட்டு தடுத்துவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அதிகாரத்தை கைப்பற்றிய பின்பு, சாதி ஒழிப்பில் முக்கிய கவனம் செலுத்திய பின்னாலும் அது பண்பாட்டுத் தளத்தில் வெகுகாலம் நீடிக்கும். புலிகள் சாதிமறுப்பை தீவிரமாக கடைப்பிடிக்கிறார்கள். சொந்த சாதிக்குள் திருமணம் செய்வதை அமைப்புக்குள் தடை செய்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஷோபாசக்தி போன்றவர்களெல்லாம் பைத்தியங்கள். அவர்கள் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. புலிகளுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு செய்பவர்கள் அரசின் கைக்கூலிகளாக கூட இருக்கலாம்..."
"...சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கம் என்பதே பார்ப்பன எதிர்ப்பும், இந்தி எதிர்ப்பும் தான். கடைசிவரையில் அவர் அதில் உறுதியாக இருந்தார். தமிழ்நாடு தமிழருக்கே என்ற அரசியல் கோரிக்கையை முன்வைத்தாலும் அரசியல் இயக்கம் எதையும் அவர் கட்டவில்லை. அமைப்புக்குள் ஜனநாயகத்தன்மையை கட்டமைக்காதது ஒரு மிகப்பெரிய குறை. தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற நிலையை அவர் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகத் தான் வீரமணி போன்றவர்கள் இப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தெளிவான கருத்தியலோ, அறிவியல் கண்ணோட்டமோ பெரியாரிடம் இல்லாததால் தான், அவர் பெயரைச் சொல்லி ஜெயலலிதாவால் அரசியல் நடத்த முடிகிறது..."
பேட்டியை முழுமையாகப் படிக்க இங்கு அழுத்தவும்
Sunday, May 18, 2008
அவமானச் சுவர் மீது சில கருத்துக்கள்
ஆதிக்க சாதி இந்துக்களுக்கு அரசு, அதிகாரிகள், காவல் துறை, கட்சிகள், பெரும் மக்கள் படை, ஊடகங்கள், செல்வம் என எல்லா ஆதரவுகளும் இருக்கின்றன. அனைத்துக்கும் மேலாகத் தாங்கள் உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் என்ற சாதிய இறுமாப்பும் இருக்கிறது. ஆனால் இதுநாள் வரையில் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு அவமதிக்கப்படும் தலித்துகளுக்கு ஆதரவு எது? பெரும்பான்மையாக இருக்கிற சாதி இந்துக்களின் மனங்களிலே 'தாம் உயர்குடிகள்' என்ற நினைப்பு ஒழிந்து, அனைவரும் மக்கள்தாம் என்ற புரிதல் வந்தாலொழிய அங்கே அமைதி நிலவாது. இவ்விடத்தில் வலுத்தவர்கள் இரண்டு விதங்களில் செயற்படலாம். ஒன்று தங்களது அதிகாரங்களைத் தட்டியெழுப்பலாம். அல்லது தங்களிடம் இருக்கும் ஆன்மாவைத் தட்டியெழுப்பலாம். ஆன்மாவைத் தட்டியெழுப்புவது கடினம். அதற்கு இத்தனைக் காலங்களாக, பரம்பரை பரம்பரையாகச் சேர்த்து வைத்திருந்த சாதிய 'உயர்வை'த் தொலைக்க வேண்டியிருக்கும். எல்லோரும் ஒன்றுதான் என்ற சமத்துவத்தின் தாங்கமுடியாத அவமானத்தை, தலித்துகளும் தாமும் ஒரே பிறவிதான் என்ற உண்மையின் வலியைத் தாங்க வேண்டியிருக்கும். தாம் மட்டுமே துய்த்து வந்த ஊர் வசதிகளான குளம், கிணறு, பள்ளி, கடை, கோயில் எல்லாவற்றிலும் சம உரிமையை தலித்துகளோடு பகிர்ந்துகொள்ளவேண்டிய கீழ்நிலையை அடைய நேரும். ஆனால் மற்ற தேர்வான அதிகாரத்தைக் கையிலெடுப்பது சுலபம். கூப்பிடு தூரத்தில் தம் சாதியைச் சேர்ந்த செல்வாக்குள்ளவர்களை வைத்துக் கொண்டு, இப்படிப்பட்ட ஒரு போராட்டத்துக்கு என்னவிதமான தீர்வினை ஆதிக்க இந்துக்கள் எடுக்க முடியும்? சுலபமான தீர்வே. தம்மிடம் இருக்கும் எல்லா வளங்களையும் பயன்படுத்தி இந்தப் போராட்டத்தை அடக்கலாம், திரிக்கலாம், பூசி மெழுகலாம், ஒன்றுமே இல்லாமல் ஆக்கலாம்.
ஆக, இது ஆதிக்க சாதி மனிதருக்குள்ளே ஆன்மாவுக்கும் அதிகாரத்துக்கும் நடக்கின்ற போட்டி. எதைக் கையில் எடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். தலித்துகள் இன்றைக்கு 'தேசிய'த் தலைவர்களைக் கொண்டு வந்து சமத்துவத்தை நிலைநாட்டப் பார்க்கலாம். ஆனால் எல்லாக் கூட்டமும் போனபிறகு, எல்லா ஆதரவுகளும் அகன்ற பிறகு அங்கேயிருக்கும் சிறுபான்மை தலித்துகளுக்கு எவரால் பாதுகாப்பு அளிக்க முடியும்? ஆதிக்கம் செலுத்தும் சாதி இந்துக்களிடமிருந்து அவர்களது சாதிய வெறி அகன்று, எல்லா மனிதர்களும் சமம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டால்தான் தலித்துகளுக்குப் பாதுகாப்பு. அப்போதுதான் தலித்துகளுக்கு சமவுரிமையை அனுபவிக்கும் நிலை ஏற்படும்.
ஆதிக்க சாதி இந்துக்களிடையே, உத்தப்புரமாகட்டும், இந்தியாவின் வேறு எப்பகுதியுமாகட்டும், 'தாம் உயர்ந்தவர்கள்' என்ற நிலையை உடைக்க, எல்லோரும் சமம் என்ற உணர்வைப் பரப்ப அரசும், சமூக அமைப்புகளான கோயில்கள், சங்கங்கள் முதலானவையும், ஊடகங்களும் என்ன செய்கின்றன? நம் சமூகச் சூழலில், சிறுமைக்கும், பெருமைக்குமான வேறுபாடு தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்டே வருகிறது. உதாரணமாக இந்தத் தொழில் செய்வது அசிங்கம், இது உயர்ந்த தொழில் என்று இடைவிடாது சுட்டப்படுதல். சுபவீ அவர்களின் கட்டுரை ஒன்றில் படித்தபோதுதான் திருக்குறளின் ஒரு வரி சுள்ளென்று உறைத்தது, "சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்." அதாவது செய்கின்ற தொழிலால் சிறப்பு வந்து சேர்வதில்லை. எல்லாத் தொழிலும் ஒன்றுதான். ஆனால் வருணாசிரமத்தின்படி கட்டமைக்கப்பட்ட நம் சமூகத்தில் இது பெரிது, இது சிறிது என்ற தொடர்ச்சியான புகட்டுதல் நடந்தபடியே இருக்கிறது. இது நம் இரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. அதனால்தான் டெல்லியில் இடவொதுக்கீட்டை எதிர்த்த மருத்துவ மாணவர்கள் இனி நாங்கள் சிரைக்கவும், சாலை கூட்டவும் போகலாம் என்று வேடம் போட்டு, அத்தொழில்களை அவமதிக்க முடிகிறது. இது மேன்மை, இது பெரிது, இதுதான் உயர்ந்தது, புனிதமானது என்று தொடர்ச்சியாக ஒரு கற்பிதம் இந்தியக் காற்றில் செறிந்து அடர்ந்து மிதக்கிறது. மேகக்கூட்டத்தைப் போல அது இந்தியப் பெருநிலமெங்கும், ஏன் கடல்களைக் கடந்து வாழும் இந்தியர்களிடையேயும் அது கவிந்துகொள்கிறது. சாதிய இந்துக்கள் அந்த உயர்ந்த கற்பிதத்தைத்தான் சுவாசிக்கிறார்கள். அந்த உயர்ந்த நிலையினை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், தாழ்ந்தவர்களிடமிருந்து தம்மைத் தெளிவாக, நன்றாகப் பிரித்து வைத்துக் கொள்கிறார்கள். இந்த அமைப்பை இந்து மதமும், அதன் ஆணி வேரான வருணாசிரமும் நன்கு காப்பாற்றி வைத்திருக்கின்றன. பிறப்புவாரியாக உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் ஒரு மதமும், அதனைக் குறை களையாது அப்படியே பின்பற்றுவோரும், அதற்காகப் பெருமை கொள்வோரும் இருக்கின்றவரை இந்தியர்களிடையே ஒற்றுமை இருக்காது. சமூக மாற்றத்தை, தனிமனிதருக்குள்ளே மாற்றத்தை ஏற்படுத்தாமல் வெறுமனே அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்வது பயன் தராது.
Monday, April 07, 2008
நான், எங்க தாத்தா மற்றும் கமலஹாசனின் தாயுள்ளம்
செவுடர் தாத்தா அப்பாவுக்குச் சித்தப்பா. செவுடர் என்பதை வசையாகவோ ஊனமாகவோ உணர்த்தப்பட்டதே இல்லை. அது ஒரு காரணப் பெயர். வெளிச்சியன், கருப்பையா என்பதுபோல் செவுடர். ரொம்பச் செவிடில்லை. எல்லாம் புரியும். பழனி அவர் பெயர். அவருக்கான மரியாதை அவருக்குக் கிடைத்தே வந்தது. 85 வயது வரை வேலை செய்தார். போன வாரம் செத்துப் போனபோது அவருக்கு வயது 95. எனக்குத் தெரிந்து தினமும் சாராயம் குடித்தார். சந்தோசமாகச் சிரித்தார். அவரது அண்ணியான என் அப்பாயியை வாய்ச்சண்டைக்கிழுப்பார். வெத்தலையும் புகையிலையும் சாராயமும் கலந்து மணக்கும் அவரது அண்மைக்கு இழுத்து "முட்டை முக்காக் காசு, முழு முட்டை எத்தனைக் காசு?" என்று கேள்வி கேட்பார். சுருக்குப் பையில் காசு வைத்து வேட்டி மடியில் முடிந்திருப்பார். ஒரு முறை எல்லோருக்கும் அவ்வைந்து காசு கொடுத்தார். சிரிப்பும், ஆர்ப்பாட்டமும், உழைப்புமாய்க் கழிந்துபோன அவரது வாழ்வுக்கு என் வணக்கம்.
கமலஹாசன் ஒகேனக்கல்லில் பேசியது பிடித்திருந்தது. மற்றவர்களது பிடிக்கவில்லை என்பதில்லை. அதிலும் கமல் பேசியதில் ஒன்று. தாய்மையுள்ளம் வேண்டும் என்றது. சில நாட்களாகவே அவ்வப்போது இந்த யோசனை எழுவதும் அமிழ்வதுமாக இருக்கிறது. கீற்றில் சில வாரங்களுக்கு முன் யாரோ எழுதியிருந்த சிறு பத்தி கிளப்பிய பொறிதான் அது. உலகின் போர்கள் அனைத்திற்கும் பின்னணியில் ஆண்களின் வெற்றிகொள்ளும் மனோநிலைதான் இருக்கிறது. குழப்பங்களின் முக்கியக் காரணி அது என்பதாக இருந்தது அப்பத்தி. சுட்டி கிடைத்தால் தருகிறேன். உண்மையாகத்தான் தோன்றுகிறது. ஆண்கள் மற்றவொரு ஆணை விஞ்சுவதில் அக்கறை காட்டுகிறோம். இது பெண் இணையைப் புணர்வதற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளும் பரிணாமப் பண்பிலிருந்து கிளைத்ததாகக் கூட இருக்கலாம். போட்டி மனப்பான்மை. ஐந்து ஆண்கள் மட்டும் இருக்குமிடத்தில் பிரச்சினை இராது. அங்கே ஒரு பெண் வந்துவிட்டால் பிரச்சினை முளைக்கும் என்று பெண்ணின் மேல் பழியை வைப்போம். ஆனால் பிரச்சினை பெண்ணால் வருவதில்லை. அப்பெண்ணை அடைவதற்கு ஆண்களினிடையே தோன்றும் போட்டியினால் வருவதே பிரச்சினை. கமலஹாசன் பேசியது தாயுள்ளம் வேண்டுமென்று. பெண்ணுறுப்புத் தேவையில்லை. எல்லோருக்குள்ளும் தாயுள்ளம் இருக்கிறதென்று. உண்மை. அதைக் கண்டுகொண்டோமானால் மற்றவரை மன்னிக்கவும், ஏற்றுக் கொள்ளவும், அரவணைத்துப் போகவும் முடியும். தாயுள்ளம் அடிமைத்தனமில்லை. அது பகுத்தாய்வது. ஆராய்ந்து கொள்வது. தாயுள்ளம் போராட்டக் குணம் மிக்கது. தற்காப்புக்காக மட்டுமேயன்றிப் பிறரின் சொத்தினை அபகரிக்கும் நோக்கோடு அது போராட்டத்தினைத் தொடுப்பதில்லை. தன் குட்டிகளைத் துன்புறுத்த வரும் ஒருவரைத் தாக்கி விரட்டும் அதே மூர்க்கம்தான் அடுத்தவரது குட்டிகளைக் கொல்லுதல் கூடாது என்ற புரிதலையும் தருகிறது. ஆண் விலங்குகளில் எத்தனையில் இக்குணத்தைக் காணவியலும்? ஆட்சியதிகாரங்களை வைத்திருப்பவர்கள் தாயுள்ளத்தோடு இருக்க வேண்டும், கர்நாடகம், தமிழகம், அமெரிக்கா, யாராயினும். பெண்ணாக இருக்கும் ஆண்களுக்குத் தாயுள்ளம் சாத்தியப்படாது. ஆண்+அவம் = ஆணவம். ஆணவம் என்பது ஆணின் அவம் (கீழான, பயனற்ற). அப்படின்னா போராட்டம் தேவையில்லையா? தேவைதான். போராட்டம் என்பது ஒரு சுழல். எங்கு எது ஒரு போராட்டத்தைத் தொடங்கிவிட்டதோ அவ்விடத்திலேயேதான் அப்போராட்டம் முடிவுறும். குழந்தைகளோடு விளையாடிப் பாருங்கள், புரியும்!
தலைப்பு: இன்றைய பதிவர் வட்டத்தில் இது ஒரு பிரச்சினை. எனக்கும், என் தாத்தாவுக்கும் (நானறிந்தவரை) கமலஹாசனோடு எவ்வித உறவுமோ அல்லது கொடுக்கல் வாங்கலுமோ கிடையாது. நான் எழுத வந்தவற்றைப் பற்றித் தலைப்பில் குறிப்பிட வேண்டும், ஆனால் அப்படிக் குறிப்பிடும்போது உங்களது மனம் உங்களையும் அறியாமல் அவற்றை ஒன்றோடொன்று தொடர்புபடுத்திக் கொள்ளும். இதை அறிந்திருந்தும் இப்படி ஒரு தலைப்பையோ அல்லது "கமலஹாசனை விட்டுப் பிரிந்த எங்க தாத்தா" என்பதான தலைப்பையோதான் நான் வைக்க வேண்டியிருக்கிறது!
Thursday, April 03, 2008
மறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்
சுற்றுச்சூழல் ஆர்வலரும், புதிய தென்றல் இதழ் இணை ஆசிரியரும், மனித உரிமைப் போராளியுமான தி. ஆனந்தராம்குமார் (எ) அசுரன் அவர்கள் அண்மையில் அவரது 38ஆம் வயதில் மறைந்தது அறிந்திருப்பீர்கள். தன்னுடைய இறுதி மூச்சு வரை மக்களுடைய அடிப்படைப் பிரச்னைகளை முன்வைத்து எழுதியும், போராடியும் வந்தார். கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில், நாகர்கோவில் ராஜேந்திரா சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். உடல் நோயால் அவதியுற்ற நிலையிலும் திண்ணை இணைய இதழ், புதிய தென்றல் இதழ்களில் எழுதி வந்தார். மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெறும் பொழுதே புதிய தென்றல் இதழில் இணையாசிரியராக மும்முரமாகப் பணியாற்றினார். பின்பு நோய் முற்றிய நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திண்டுக்கல்லில் இருந்து வெளியாகும் "புதிய கல்வி" என்ற சுற்றுச்சூழல் இதழின் இணை ஆசிரியராக பணியாற்றிய அசுரனுக்குச் சில ஆண்டுகள் முன்புதான் திருமணம் நடந்தது.
அசுரனின் தொண்டு பற்றிய செய்திகளைப் பின்வரும் சுட்டிகளில் படிக்கலாம்.
http://makkal-sattam.blogspot.com/2007/12/blog-post_22.html
http://madippakkam.blogspot.com/2007/12/blog-post_6603.html
http://athirai.blogspot.com/2007/12/blog-post_1945.html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20712277&format=print
அசுரனின் சில எழுத்துக்களைப் பின்வரும் சுட்டிகளில் படிக்கலாம்.
http://www.thinnai.com/?module=archives&op=searchauth&search_string=+அசுரன்
http://www.keetru.com/puthiyathendral/index.php
அசுரனின் தன்னலமற்ற பணிகளை நினைவுகூர்ந்து அவரது வாழ்க்கையைப் போற்றும் வண்ணம் அவரது சிந்தனைகளையும், சிறந்த எழுத்துக்களையும் தொகுத்து நூல் வடிவில் கொண்டு வர விரும்புகிறோம். அசுரனின் செயல்பாட்டின் மீது நம்பிக்கை கொண்ட எத்தனையோ வாசகர்களும், களப்பணியாளர்களும் அந்த நூலை வாங்கிக் கவுரவிப்பார்கள் என்ற முழுநம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அந்நூல் விற்பனையில் வரும் தொகையனைத்தையும், அசுரனது இளம் மகளது எதிர்காலக் கல்விக்காக முதலீடு செய்ய முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்துக்கு பொருளுதவியளிக்க விரும்பும் நல்ல உள்ளங்கள் பின்வருவோரைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். சிறு உதவிகள் கூட பெரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளப் படும்.
இந்தியா:
எஸ். பி. உதயக்குமார்
தொலைபேசி: 91-4652-240657
அமெரிக்கா:
சொ. சங்கரபாண்டி
தொலைபேசி: (443) 854 -0181
Sunday, March 23, 2008
பழங்குடி மக்களைப் பற்றிய கட்டுரை ஒன்று
ச. பாலமுருகன் கீற்றில் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையில் (பழங்குடி மதிப்பீடுகள் நம்பிக்கைகள்) பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, இயற்கையோடு அவர்கள் கொண்டிருந்த கொடுக்கல் வாங்கல் உறவுகள், தம் பகுதியின் மீதான ஆக்கிரமிப்பினை அவர்கள் எதிர்த்த வீரம், இந்திய விடுதலைப் போரில் அவர்கள்து பங்கு ஆகியவற்றை அழகாகத் தொகுத்துள்ளார். மேலும், பழங்குடியினருக்கும் அவர்களது வாழ்வாதாரமான மலை/காடுகளுக்கும் தற்போது பொதுமக்களாகிய நாமும், நாம் அங்கம் வகிக்கும் அரசாங்கமும் நிகழ்த்தும் இடர்களையும் காட்டியுள்ளார். நீங்கள் வாசிக்க வேண்டிய கட்டுரை. இவர்தான் சோளகர் தொட்டியை எழுதிய பாலமுருகனா என்று தெரியவில்லை. அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்.
Friday, March 21, 2008
சிலுவையில் தொங்கும் முயலும், முட்டையும்
இந்த வருடமும் ஈஸ்டர் வருகிறது! வழக்கம் போலவே முயலையும், முட்டையையும் கடைகளில் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். பலூன் முயல், பஞ்சு முயல், துணி முயல், முட்டை முட்டாய், முட்டை ரொட்டி, முட்டைக்குள் முட்டாய் என்றும், டோரா முட்டை, ஸ்பைடர் மேன் முட்டை என்றும் பலவகையாக நீங்கள் பார்க்கலாம். இந்நாட்களில் ஏசுவை விட, புனித வெள்ளியைவிட அதிகமாகப் பேசப்படுவது ஈஸ்டர் கொண்டாட்டம், அப்போதைய துணிக்கடைத் தள்ளுபடிகள், பீர் கடை கொண்டாட்டங்கள் இவை பற்றித் தாம். ஒரு மனுசன், நீங்க யோசிக்கிறதுக்கு நாலு தத்துவத்தைச் சொல்லிட்டு, உங்ககிட்ட அதைச் சொன்னதுக்காக சிலுவையில தொங்கிப் போனாரே அதை நெனைக்கிறீங்களா, அல்லது அவரு மறுபடியும் வந்தாருன்னு கொண்டாட நெனைக்கிறீங்களா, அல்லது உங்களுக்கு சுகமும் துக்கமும் கொண்டாட்டாந்தான் என்ற பேரின்ப நிலையில இருக்கீங்களா? ஒன்னுமே புரியலையேப்பா. அது சரி, என்னத்துக்கு இத்தனை முட்டை? முட்டைக்கும் ஈஸ்டருக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை 40 நாள் விரதமிருந்தவங்கள்லாம் விரதம் முடிக்கிறப்ப தெம்புக்காக முட்டை சாப்பிடுவாங்களான்னு யோசிச்சேன். இருக்கலாம். ஒருத்தரு சொன்னாரு, முட்டை என்பது உயிர்ப்பின் அடையாளம். அதுக்குள்ளேருந்துதான் எல்லாம் வருது. அதே மாதிரி ஏசுவும் மறுபடியும் வருவார். சரி, இருக்கட்டும், முயல்? அதுவா, அது வந்து ஸ்பிரிங்க் வருதுல்ல, அது. துள்ளித் துள்ளிக் குதிக்குதுல்ல, அதான். ரொம்பச் சரி. உங்க கடைகளையும், 50% சிறப்புத் தள்ளுபடி விளம்பரங்களையும் பாத்துட்டு, உங்களுக்காகத் தொங்கின ஆளோட ஆத்மா சாந்தியடைஞ்சாச் சரிதான்.
படம்: எல்லாப் பெற்றோர்களும் தலா 12 பிளாஸ்டிக் முட்டைகளை வாங்கி அதற்குள் பரிசை (மிட்டாய் என்று அர்த்தம்) வைத்துப் பள்ளிக்கூடத்துக்குக் கொடுத்துவிட வேண்டும். அங்கே ஆசிரியர்கள் அதை 'ஒளித்து' வைத்துவிட்டுப் பிள்ளைகளைக் கண்டுபிடிக்கச் சொல்வார்கள். நல்ல செய்தி என்னவென்றால், ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு எண்ணைச் சொல்லிவிட்டு அந்த எண் போட்டிருக்கும் முட்டையைத்தான் அந்தப் பிள்ளை கண்டுபிடிக்க வேண்டும். ஆசிரியர்கள் ஒவ்வொரு எண்ணையும் 12 முட்டைகளின் மேல்தான் போடுவார்கள். இதனால் எல்லோருக்கும் ஒரே எண்ணிக்கையுள்ள முட்டைதான் (12) கிடைக்கும். தெறமை இருக்க புள்ள பொறுக்கிக்கன்னு விட மாட்டாங்க. ஏன்னா சில பிள்ளைகள் பொறந்ததுலேருந்து முட்டை பொறுக்கிக்கிட்டே இருக்கும், சிலதுகளுக்கு முட்டைன்னா என்னன்னே தெரியாது, அதை எங்க ஒளிச்சு வைப்பாங்கன்னே தெரியாது. அப்படி இருக்கப்ப “இந்தா புள்ளைகளா, இங்கின 240 முட்டை இருக்கு, தகுதியும் தெறமையும் இருக்க புள்ளைக போயி பொறக்கிக்கங்க”ன்னா வகுப்பு வெளங்குமா? அதுக்குத்தான் சமமாக் குடுக்கணும்கறது. படம் மாசிலன் எடுத்தது.
Thursday, March 20, 2008
கறுப்பும் வெளுப்பும்
குற்றவாளி என்று கருதப்படும் ஆள் ஓடுகிறார். அவரைத் துரத்துகிறது போலீஸ் கார். அவர் தப்புவதற்காக சாலையோரத்துக்கு ஓடுவதற்குள் அவரை அடித்துத் தூக்கியெறிகிறது கார். சற்றைக்குப் பின் அவர் மேல் காரை மோதியதைப் பெருமையோடு நண்பர்களோடு பகிர்ந்துகொள்கிறார் காவலர். அடிபட்டது கறுப்பர். காவலர் வெள்ளையர். இது நேற்று வெளிவந்திருக்கும் செய்தி. அடிச்சது சரிதான் என்று சிலர். என்ன இருந்தாலும் இப்படியா என்று சிலர். தெரியாம அடிச்சுட்டாரு என்றொரு போலீஸ்காரர். இப்படி அடிச்சதோட இல்லாம அதப் பத்தித் தம்பட்டம் அடிச்சுக்குற போலீஸ் எங்களுக்கு வேணாம் அப்படின்னாங்க கூட வேலை செய்யுற அம்மா.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. அதுல இயக்குனர் மறைந்திருந்து படம் பிடிக்கிறார். சில பதின்ம வயதுப் பையன்களைக் கொண்டு அங்கே நிறுத்தியிருக்கும் கார் ஒன்றின் மீது (அவர்களது கார்தான்) பெயிண்டால் கிறுக்கவும், ஏறிக் குதிக்கவும் சொல்கிறார். அது வழியே நடந்து போகிறவர்கள் என்ன மாதிரி நடந்துகொள்கிறார்கள், யாரேனும் போலீஸைக் கூப்பிடுகிறார்களா, அந்தப் பையன்களைக் கண்டிக்கிறார்களா என்று பார்க்கிறார். முக்கியமானது - அந்தச் சோதனையை வெள்ளைக்காரப் பையன்களைக் கொண்ட ஒரு குழுவைக் கொண்டும், கறுப்புப் பையன்களைக் கொண்ட ஒரு குழுவைக் கொண்டும் நிகழ்த்துகிறார். வெள்ளைக்காரப் பிள்ளைகள் அட்டகாசம் செய்தபோது தட்டிக் கேட்டவர்கள் ஒன்றோ என்னவோ. 911க்கு ஒருத்தரோ இரண்டு பேரோதான் கூப்பிட்டார்கள். ஆனால் அதையே கறுப்புப் பையன்கள் செய்யும் போது 911 அனல் பறந்தது, யார் யாரோ வந்து கேட்கிறார்கள். இது எதைக் காட்டுது? கறுப்பர்கள் என்றாலே தப்பு செய்பவர்கள், கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதாக நம்மிடையே வளர்க்கப்பட்டிருக்கும் மனோநிலையைத்தான்.
தென் கரோலினாவில் கறுப்பர்கள் நிறைய. மேற்கண்ட ஒளிப்படம் சில அதிர்வுகளைப் பரப்பும். நேத்து ராத்திரி ஒபாமா, நிறப் பாகுபாட்டைக் களைய வேண்டும் என்று பேசியிருக்கிறார். உரையாடலையாச்சும் தொடங்குவாங்க.
Saturday, March 15, 2008
சில புழுக்களை ராணியாக்குவது எப்படி?
நம் உடம்பு மரபலகுகளின் (ஜீன்கள்) வேலைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதாவது ஒரு மரபலகு எல்லா நேரங்களிலும் எல்லாத் திசுக்களிலும் இயங்கிக் கொண்டு இருப்பதில்லை (இயங்குதல் என்பது அதற்கான புரதத்தை உண்டாக்குதல் எனக் கொள்க). சில நேரம் அமைதியா இருக்கும். அந்த அமைதிக்குக் காரணம் அந்த மரபலகின் மூலக்கூறுகளில் (டி.என்.ஏ) ஏற்படும் ஒரு சின்ன வேதியியல் மாற்றம், Methyl ஏற்றம். (சரக்கு அடிச்சா அதுல இருக்கது Ethyl alcohol. எத்திலை விடக் கொஞ்சம் சிறியது மெத்தில். ஆனா நீங்க சரக்கடிக்கிறதுக்கும் இதுக்கும் எதுனா சம்பந்தம் இருக்கான்னு கேக்கப்படாது. இல்லன்னு நானும் சொல்ல முடியாது!). மெத்திலேற்றம் நடந்த மரபலகு அமைதியா இருக்கும். அமைதியா இருந்தா அது உண்டாக்க வேண்டிய புரதம் உண்டாகாது. அந்தப் புரதம் இல்லன்னா அந்த செல்லோட வேலைப்பாடு மாறும். ஒன்ன மாதிரி நாலு பேரு இருந்தா வேலை நடந்துடும் அப்படின்னு நாம சொல்றது இல்லையா. அதுமாதிரிதான், ஒரு நாலு புரதங்கள் சேர்ந்தா, அல்லது இல்லாமப் போனா, உடம்பே மாறிப் போயிடும். இந்த மெத்திலேற்றத்தைச் செய்யும் ஒரு நொதிக்குப் பேர் DNMT3. சில மரபலகுகளை DNMT3 மெத்திலேற்றம் செய்து வைக்கும்போது அந்த மரபலகு அமைதியாக இருக்கிறது. இப்போ நீங்க DNMT3 ஐ லபக்குன்னு புடுங்கி எறிஞ்சுர்ரீங்க, அப்போ என்னாகும், எந்தெந்த மரபலகுகளை DNMT3 அமுக்கி வைத்திருந்ததோ அதெல்லாம், மடை திறந்த வெள்ளமாகப் பாயும். அந்தப் புரதங்களெல்லாம் அதிகமாக உருவாகி, செல்லை, உடம்பை மாற்றும். புரிந்துகொள்ள வேண்டிய 2) DNMT3 ஒரு விசை. அதை இயக்குவதன் மூலம் முக்கியமான மரபலகுகளின் வேலைகளை இயக்கலாம். சரி, இதுக்கும் தேனீக்கும் என்ன சம்பந்தம்? அதான் அடுத்தது.
தேனீக்களின் புழுக்கள்ல இருக்க DNMT3 ஐ நீக்கிட்டா அந்தப் புழுக்கள் எல்லாம் ராணித்தேனீயா மாறுது. பூம்!! ராயல் ஜெல்லி புகட்டாமலேயே இது நடக்குது. இது எப்படி நடக்குது? DNMT3 இல்லாத போது புழுக்களில் இருக்கும் 'இராணித் தேனீயாக்கும்' புரதங்கள் தங்குதடையின்றி உருவாகின்றன. சாதாரணப் புழுக்களில் ராயல் ஜெல்லியை நன்றாகப் புகட்டினால்தான் இப்படியான ஒரு நிலை ஏற்படும். அப்படியென்றால், ராயல் ஜெல்லி எப்படியோ ஒரு வழியாக DNMT3 மூலம் ஏற்படும் மெத்திலேற்றத்தைக் குறைத்து ராணியாவதற்குரிய வழியைச் செய்கிறது. புரிந்துகொள்ள வேண்டிய 3) தேன் புழுக்களின் உடலிலிருந்து DNMT3 ஐக் கழற்றிவிட்டால் அத்தனையும் ராணியாகிவிடும்.
அதுனால என்னா இப்ப?
1) நாம் இயற்கையைப் படுத்தும் பாட்டில் உலகம் முழுக்கத் தேனீக்கள் குறைந்துகொண்டே வருகின்றன. ராணித் தேனீக்களை நிறைய உருவாக்கினால் கூடுகளை உயிர்ப்பித்துவிடலாம் என்று கருதுகிறார்கள்.
2) ராயல் ஜெல்லியை ஏற்கெனவே புட்டியில அடைச்சு வச்சு, நீடித்த வலிமை, குன்றாத இளமை, அழகு அப்படின்னு கந்தர் சஷ்டி கவசம் பாடினா கிடைக்கக் கூடிய அத்தனை நன்மைகளும் ராயல் ஜெல்லியால கிடைக்கும் அப்படின்னு ஒரு இணையத்துல கடை கட்டிக்கிட்டுத் திரியிறாங்க்ய. அவங்களுக்கு லாபம் பார்க்க இன்னொரு 'அறிவியல் கண்டுபிடிப்பு.'
3) தேனீக்களுக்கு என்ன? DNMT3 இன்னும் எதுக்குத் தேவைன்னு தெரியாத நிலையில் அதைப் புடுங்கி எறியுறது தேனீக்களுக்கு ஆபத்தாகப் போகலாம். இன்னொரு மரபுமாற்றம் செய்யப்பட்ட வீரிய கொடுக்கால் இப்போதிருக்கும் தேனீக்கள் கொட்டப்பட்டு விரட்டப்படப் போகின்றனவா?
Friday, March 14, 2008
சைக்கிள் பாதை
இந்த ஊரு பஸ்ல எல்லாம் முன்னாடி, வெளிய, ஒரு சின்ன rack இருக்கு. அதுல ரெண்டு சைக்கிள் வச்சுக்கலாம். போற எடத்துக்கெல்லாம் சைக்கிளையும் எடுத்துக்கிட்டுப் போகலாம். அதைப் பார்த்ததும் எனக்கும் சைக்கிள் ஆசை வந்துடுச்சு. ஆனா பிரச்சினை வீட்டுலேருந்து வால் மார்ட்டுக்கு வர்றது 55 மைல் வேகப் பெரிய ரோடுதான். அதுல சைக்கிள் பாதையும் இல்ல. ஒரு ஞாயித்துக் கெழம சைக்கிளை எடுத்துக்கிட்டு அது வழியாத் திரிஞ்சப்ப ஒரு சின்ன உள் ரோடு இருக்கதைக் கண்டுபிடிச்சேன். அது ஒரு காடு மாதிரி இருக்கும். Campground இருக்க இடம். ஒரு அழகான சின்ன ஏரி, அல்லது பெரிய குளம். நிறைய மரங்கள். வளைந்து வளைந்து போகும் பாதை. காரோடு முட்டிக்கத் தேவையில்லாம சின்ன நடை/சைக்கிள் பாதை. ஆகா. கிளம்பிட்டேன். இப்பதான் கொஞ்சம் குளிர் குறைஞ்சுக்கிட்டு வருது.
நேத்து நல்ல வெய்யில். சைக்கிள்லதான் வந்தேன். ஊர்ல இருக்கும்போது, விடுமுறைக்குப் போகும்போதோ தங்கமணியுடன் சேர்ந்துகொண்டு பெரியாறு, கருப்பர்கோயில் அப்படின்னு சைக்கிள்ல திரிவோம். சைக்கிள்ல போயிக்கிட்டே அவனைக் கூப்பிட்டேன். இருந்தான். கொஞ்ச நேரம் கதையடிச்சோம். அப்புறம் அமெரிக்கக் குடிநீர்ல மருந்து கலந்திருக்காம்னு பேச்சு வந்துச்சு. செயற்கை மருந்துகள். மண்ணுயிரிகளால் சாதாரணமாக அழிக்கப் பட முடியாத மருந்துகள். உங்க உடம்புல ரொம்ப நேரம் தங்கி வேலை செய்யணும்னே திடமாகச் செய்யப்பட்ட மருந்துகள். திடமாகவே மண்ணிலும், தண்ணீரிலும் தங்கிவிடுகின்றன. மறுபடியும் மனிதனுக்கே வருகின்றது என்று பதறுகிறார்கள். யாரு அப்படியாபட்ட மருந்துகளைக் கண்டுபுடிக்கச் சொல்லுறது? இயற்கை மருந்துகளைப் பற்றிய அறிவை நாம் சரிவரப் பயன்படுத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால் நம்ம ஊர்லயே மஞ்சளிலிருந்து கிடைக்கும் curcumin என்ற மருந்தை, கூடுதல் செயற்பாட்டுக்காக வேதிமாற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதெல்லாம் சாதாரணமாக மட்கிப் போகக் கூடிய இயற்கை மருந்துப் பொருட்களை ப்ளாஸ்டிக் மாதிரி ஆக்கி உடம்பையும், வெளியையும் மாசுபடுத்துகின்றன. இதில் இந்த மருந்துக் கம்பெனிகளின் அராஜகம் தாங்க முடியாதது. இதெல்லாம் மாற வேண்டுமானால் மக்களின் உணவு முறையில், இயற்கை சார்ந்த உணவாக, வாழும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதை அமெரிக்கா விரும்பாது. இப்படியாக வளர்ந்த பேச்சு கீற்றின் பக்கம் திரும்பியது. யமுனா ராஜேந்திரன் சினிமா விமர்சனத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் தமிழ் சினிமாவின் விமர்சகர்கள், சினிமாவைப் பற்றிய இலக்கியப் படைப்பாளிகள் ஆகியோரை ஒரு வாங்கு வாங்கியிருக்கிறார். கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் உபபாண்டவம் படித்து முடித்து எஸ்.ராமகிருஷ்ணன் சுழற்றிவிட்டிருந்த பரிசலில் மிதந்துகொண்டிருந்தேன். சினிமா, மற்றும் சினிமா அரசியல் குறித்து எஸ்.ராவை யமுனா போட்ட போட்டில் பரிசல் ஆட்டம் கண்டுபோச்சு.
அ! வீடு வந்துடுச்சு. சைக்கிளை வெளியே சுவரோரம் சாய்த்துவிட்டு (ஏன்னா ஸ்டாண்டு இல்ல பாருங்க) வீட்டுக்குள்ள போனேன். ஒரு சிங்கம் பாய்ந்து வந்தது. ஆமா, அவங்க பள்ளிக்கூடத்துல இன்னக்கி சர்க்கஸாம். இவர்தான் சிங்கமாம். மூஞ்சியில அப்பின சாயத்தோட அப்பாகிட்ட காட்டுறதுக்காக நிக்கிறார். இனிமே பேச்செல்லாம் வேற இடங்களுக்குப் பறந்து போகும்.
Friday, February 29, 2008
சுஜாதா இன்னும் இறக்கவில்லை!
சுஜாதா இன்னும் இறக்கவில்லை. அவரது கதைகளிலும், கருத்துகளிலும், ஒவ்வொரு சொல்லிலும் இன்னும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்!
Wednesday, February 13, 2008
காரால் அடித்துத் தூக்குவது எப்படி? விளக்கப் படம்!
கடவுள் மேல் கொண்ட காதல் கண்களை மறைக்கிறது.(இதற்குத்தான் சொன்னான், ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்று!) அல்லது இது சாதாரண மதவெறி, சாதிவெறி, பணவெறி கேசா?
நடந்தது கன்னியாகுமரி மாவட்டத்தில். இது குறித்த பதிவெதுவும் என் கண்ணில் படவில்லை.
காரோடும் படத்தை ஓட்டிப் பார்க்க இதை அழுத்தவும்!
Saturday, February 02, 2008
எனக்கு வாய்கண்ட மருந்து - திரிபலா
தொண்டை வலி:
சளி பிடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்தீங்கன்னா தொண்டை ஒரு மாதிரி கரகரக்கும். அப்பவே தெரியணும், நமக்கு நாளைக்கு சளி பிடிக்கப் போவுதுன்னு. அந்த மாதிரி நேரத்துல நான் என்ன செய்வேன்னா, கொஞ்சம் திரிபலாவை எடுத்து சுடுதண்ணியில போட்டு, நல்லா வாய் கொப்பளிப்பேன். அம்புட்டுதான். சளி வராது. தொண்டைக்கும் இதமா இருக்கும். பிள்ளை அவ்வப்போது பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவரும் மற்ற தொண்டை வலிகளுக்கும் இது நல்ல மருந்து. வாய் கொப்புளிச்சுத் துப்பத் தெரிந்த குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். முழுங்கினாலும் பெரிய பிரச்சினை இல்ல, இருந்தாலும் ரொம்ப சின்ன பிள்ளைங்களுக்கு வேணாம்.
பல்லிடுக்குப் பிரச்சினை:
சில நேரம் பல்லிடுக்கில் உணவுத் துகள் மாட்டிக் கொள்கிறது. காரட் துண்டு, ஆட்டுக்கறி இப்படி. அப்போது கவனிக்காம விட்டுட்டா, அடுத்த நாள் வலிக்கும். அப்போ அந்தத் துணுக்கை floss போட்டு எடுத்துட்டாலும் வலிக்கும். அந்த நேரத்தில் திரிபலாவை சுடுதண்ணியில போட்டு வாய் கொப்பளிச்சா, அல்லது அந்த இடத்தில் வைத்து லேசாக பல் தேய்ப்பது போலத் தேய்த்தால் வலி மாயமாய்ப் போகிறது. மற்ற வகை பல்/ஈறு வலிகளுக்கும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன்.