தி இந்து பத்திரிகையில் மாவீரர் நாள் உரையைப் பற்றிய செய்தியில் அது பரப்பும் ஒரு தவறான சொற்றொடரைச் சுட்டிக் காட்டவே இந்தக் குறிப்பு:
இந்து சொல்கிறது: "...Prabhakaran said in his annual Heroes' Day speech on his 53rd birthday."
அதாவது மாவீரர் நாள் உரை என்பது பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவது போன்ற குறிப்பினைப் படிப்பவர்களுக்கு உணர்த்தும் நோக்கில் இவ்வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. இதுவரையில் போராடி மடிந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான இந்த நிகழ்வு, நானறிந்த வரையில், பிரபாகரனின் நண்பரும் போராளியுமான சார்ல்ஸ் அண்டனியின் மறைவு நாளையொட்டியே நினைவுகூரப்படுகிறது. பிரபாகரனின் பிறந்த நாள் நவம்பர் 26. ஆனால் இப்படியொரு இரட்டைநாக்கு வாசகத்தை எழுதுவதன் மூலம் தமிழ்நாட்டில் வசிக்கும் இந்து படிக்கும் பெரும்பாலானவர்களுக்கிடையே "பிரபாகரனின் பிறந்த நாள்தான் மாவீரர் நாள்" என்பதான கருத்தைப் பரப்ப இந்து விழைகிறது. இதன் மூலம் பிரபாகரன் என்பவர் சுய துதியில் திளைக்கும் ஒரு சாதாரண அரசியல்வாதியைப் போன்றவர் என்பதான கருத்தைத் திணிக்கிறது. சாதாரண மக்களுக்கு, அதுவும் கர்வம் கொள்ளக்கூடாது என்ற கருத்தியலில் ஊறித் திளைத்திருக்கும் நம் இந்தியக் குடிகளுக்கு, பிரபாகரனை ஒரு கர்வியாக, ஆணவத்தின் சின்னமாகக் காட்ட முயன்றிருக்கிறார்கள். ஆணவம் பிடித்தவர்கள் அழிவார்கள், அழிய வேண்டும் என்ற வரலாற்று நியதி நம் கதைகளுக்கு உண்டு. ஆணவம் பிடித்தவர்களுக்கு சுதந்திரம், மக்கள் நேயம் போன்ற சிந்தனைகள் இருக்கும் என்று சாதாரணர்கள் நம்புவதில்லை. எனவே ஆணவத்தோடு ஒருவரை அடையாளப்படுத்துவது நெடுங்கால நோக்கில் ஒருவரைப் பற்றிய நல்லபிமானத்தை எழச் செய்யாது.
அந்தச் செய்தியிலேயே "his outfit's cause" என்பதும், இவர் தனியொரு ஆளாக, கும்பல்களை வைத்து அட்டகாசம் செய்யும் ஒரு பேட்டை ரௌடியைப் போன்றதொரு படத்தையும் இந்து வரைய முனைகிறது. இது விடுதலைப் புலிகள் மீது ஈழத்தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கை, அபிமானம், இணக்கம், ஆதரவு ஆகியவற்றை மறுதலித்து, மக்களையும் புலிகளையும் தனித்தனியான அங்கங்களாகக் காட்டும் நரித்தனம். இவர்களால் கேணல் கருணாவை மக்களின் அங்கமாகக் காட்ட முடிந்தது. கருணா இங்கிலாந்தில் பிடிபட்டதற்குப் பிறகு, வெகு தந்திரமாக அவரைக் கழுவிவிட்டிருக்கிறது. இதே இந்து பிள்ளையான் அணி, பொக்கையான் அணி என்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்த அணி தோன்றினாலும் அதனை அரவணைத்துச் செல்லும். ஈழத்தைப் பொறுத்தவரை இவர்களது நோக்கம் புலிகளுக்கெதிரான, அதிலும் பிரபாகரனுக்கெதிரான, ஊடக, அரசியல் குழிபறிப்புதானேயொழிய ஈழச் செய்தி, தமிழர் சுதந்திரம், மக்களாட்சி என்று எந்த மண்ணாங்கட்டியுமில்லை.
இந்துவின் தமிழீழ விரோதப் போக்கைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இது எளிதில் விளங்கும். வலைக்கும், ஈழப்போராட்டத்தைப் பற்றிய பதிவுகளுக்கும் புதியவர்களுக்காக இந்தக் குறிப்பு.
தி இந்து பரப்பும் பொய்
Posted by சுந்தரவடிவேல் at 11 comments Links to this post
சிங்கள தேசியவாதம் அமைதிக்கு முட்டுக்கட்டை
இலங்கையின் சிங்கள தேசியவாதமே இன்றைய சிக்கல்களுக்கு மூல காரணம் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். இதுவே தொடர்ந்தும் அமைதி ஏற்படவிடாமல் தடுப்பதற்குமான காரணம் என்று International Crisis Group என்ற அமைப்பு தனது அண்மைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. தென்னிலங்கை ஆட்சியாளர்கள், தத்தமது கட்சிகளின் அரசியல் லாபங்களுக்காக, மக்களின் தேசிய உணர்வைத் தூண்டிவிட்டு, இன ரீதியான பாகுபாடுகளைப் பெருக்குகிறார்கள். இலங்கைக்குள் சென்று சமாதானத்தை ஏற்படுத்தப் போகும் நாடுகள் அல்லது அமைப்புகள் இந்த சிங்கள தேசியவாதத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இது மட்டுமே காரணமில்லை, வேறு காரணிகளும் இச்சிக்கலை முடிவின்றி நீட்டுகின்றன என்று கூறும் இக்கட்டுரையில் இணைத் தலைமை நாடுகள் உள்ளிட்ட பலருக்கும் பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. இனச் சிக்கலை அரசியல் ரீதியாகவும், அதிகாரங்களை இரு சாரருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதன் மூலமும், மற்றும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளுக்கும் சரியுரிமை கொடுப்பது, வாய்ப்புக்களில் இனப்பாகுபாடு காட்டாமலிருப்பது ஆகியவற்றின் மூலமும் களையலாம் என்றும் இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.
ஏட்டுச் சுரைக்காயைப் போலத் தெரிந்தாலும், தென்னிலங்கை அரசியல் பின்னணியும், அதனோடு இயைந்த தேசிய/இன வாதம் ஒரு நாட்டின் இத்தனை இழப்புக்களுக்கும் காரணமாகிறது என்பதை இவ்வறிக்கை முன் வைக்கிறது.
இத்தகைய தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு வால் பிடிக்கும் இந்தியப் பத்திரிகையாளர்களும், அரசியல்வாதிகளும் இலங்கையின் அமைதிக்கு எதிராகவும், இனவெறிக்கு ஆதரவாகவுமே செயற்படுகிறார்கள் என்றே நாம் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.
Posted by சுந்தரவடிவேல் at 0 comments Links to this post
சிலந்தி
என் வீட்டிலிருந்து தெருவுக்கு வரும் நடைபாதையில் செடிகளுக்கும் சுவற்றுக்கும் இடையே ஒரு சிலந்தி, வலை பின்னி அதில் இருக்கிறது. இந்தச் சிலந்தி மஞ்சளும் கருப்பும் பழுப்புமாக இருக்கிறது. இதனைப் போன்ற சிலந்தியொன்றை நான் பார்த்ததில்லை. இந்தக் கூடும் சற்றே வித்தியாசமாகத்தான் இருந்தது. வழக்கமான சிலந்திக் கூடு போல இருந்தது. ஆனால் வலையின் குறுக்கே இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசி வரை ஏணியைப் போல இன்னொரு பின்னலைப் போட்டிருந்தது. நடுவில் அது காத்திருக்கிறது. கலோவீன் (Haloween) அன்றைக்கு மிட்டாய் வாங்க வந்த பிள்ளைகள் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டுப் போனார்கள். அன்றைய நாளில் நிறைய வீடுகளில் சிலந்தி வலைகளும், சாலைகளில் 'சிலந்தி' மனிதர்களும் (spiderman)திரிந்தாலும், இந்தச் சிலந்தியைப் பார்த்தபோது அவர்கள் ஆச்சரியப் பட்டார்கள். இரவின் இருளில் என்ன நடந்ததென்று யாருக்குத் தெரியும். அடுத்த காலையில் சிலந்தி வலை ஒரு கோடான இழையாக மட்டும் தொடுத்திக் கொண்டிருந்தது. முற்றாகச் சிதைந்து விடவில்லை. அந்தச் சிலந்தி அப்போதும் இருந்தது. அது மீண்டும் ஒரு வலையைக் கட்டும். தனக்கான வீட்டைக் கட்டிக் கொள்வதற்கு சிலந்திக்கு வேட்கை எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். உங்களுக்கு அது புரிந்தாலுமோ (சிலந்திகளின் உலகத்துத் துன்பங்கள் உங்களது தடித்த தோலுக்குள் நுழையவில்லையென்றாலுமோ) அல்லது சிலந்திகளின் வாழ்விலிருந்து உங்களுக்குத் தேவையானதை மட்டுமே பிய்த்து எடுத்துக்கொண்டு அதுதான் சிலந்திகளின் வாழ்வு என்று நம்பிக்கொண்டு இருக்கும் அனுதாபத்துக்குரியவராக இருந்தாலுமோ...சிலந்திகள் தமது வீடுகளைக் கட்டிக் கொண்டே இருக்கும். அது அவற்றின் வாழ்வு.
Posted by சுந்தரவடிவேல் at 1 comments Links to this post
இலங்கை அரசு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறதா?
புலிகளின் அரசியல் தலைவராகவும், அமைதிப் பேச்சு வார்த்தைகளுக்குத் தலைமையேற்றவருமான சு.ப. தமிழ்ச்செல்வனைக் கொன்றிருப்பது இலங்கையரசுக்கு அரசியல் தீர்வின் மேல் இருக்கும் மரியாதையை இன்னொரு முறை வெளிக்காட்டுகிறது. ஒரு போர்க் குற்றத்துக்குள் இன்னொரு போர்க் குற்றமாக, ஒரு அரசியல் தலைவரைக் கொல்வதற்கு சூட்டழுத்த (thermobaric) ஆயுதத்தினைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது (பிபிசியின் குறிப்பை மேற்கோளிட்ட குருவிகளின் பதிவிலிருந்து http://kundumani.blogspot.com/2007/11/thermobaric.html).
சூட்டழுத்தக் குண்டுகளை இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தயாரிக்கின்றன. இவை ஏதாவது ஒரு நாட்டிலிருந்து இலங்கை இத்தகைய ஆயுதங்களை வாங்கியிருக்கலாம். பதுங்கு குழிகள், நிலவறைகள், கட்டிடங்கள் போன்றவற்றில் இருப்பவர்களை ஒரு அணு ஆயுதத்தைப் போலத் தாக்கி அழிக்கக் கூடியது இந்தச் சூட்டழுத்த ஆயுதங்கள். அணு ஆயுதங்களுக்கும் சூட்டழுத்த ஆயுதங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் கதிர் வீச்சு மட்டும்தான். சூட்டழுத்த ஆயுதங்களில் கதிர் வீச்சு கிடையாது. ஒரு இடத்தில் இந்த ஆயுதம் வெடிக்கும்போது அங்கிருக்கும் ஆக்சிஜனை முழுமையாக எரித்து ஒரு மாபெரும் வெற்றிடத்தினை உருவாக்குகிறது. இதனால் சுற்றியுள்ள இடங்களிலிருந்து அழுத்தம் பாய்ந்து வந்து நிரப்பப் பார்க்கிறது. அங்கேயிருக்கின்ற மக்களும் அதீத அழுத்தத்தால் ஏற்படும் உடற்சிதைவுக்கு (நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகள் முக்கியமாக பாதிக்கப்படும்) ஆளாகி இறக்க நேரிடுகிறது. இன்றைய குண்டு வீச்சில் இத்தகைய குண்டுகளை இலங்கை பயன்படுத்தியது போலத் தெரிகிறது, விரிவான செய்திகள் வெளிவரலாம். நேற்றைய இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகச் செய்தியொன்று நான்கு பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாகச் சொல்கிறது. பங்கர் என்ற சொற்பயன்பாட்டுக்கும் பங்கர்பஸ்டர் (bunker buster) என்ற சூட்டழுத்த ஆயுதப் பயன்பாட்டுக்கும் தொடர்பிருக்குமா என்று தெரியாது. ஆனால் மகிந்தவின் அரசு தன்னுடைய தோல்விகளைச் சரிகட்ட வேண்டிய அரசியல் அழுத்தத்தில் இருப்பதால், எதைச் செய்தாவது புலிகளை ஒடுக்கிவிட முயலும் என்று எண்ணத் தோன்றுகிறது. இவ்விடத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தவும் அரசு முயலக் கூடும். அமெரிக்காவானது ஈராக் பலூஜாவிலும், இஸ்ரேலானது பாலஸ்தீனத்திலும், ரஷ்யாவானது செச்னியாவிலும் செய்த அதே வேலையை இப்போது இலங்கை அரசு செய்யத் தீர்மானித்திருப்பது வெகு சாத்தியமே.
தமிழ்க் குடிமக்களைப் பற்றிய பெரும் கவலை இல்லாத இலங்கை அரசு, இத்தகைய ஆயுதங்களைக் கண்மூடித்தனமாக மக்களின் வாழ்விடங்களில் வீசி, புலிகளைக் கொன்றுவிட்டதாக வரும் நாட்களில் அறிவித்து, இன்றைப் போலவே குடித்து மகிழும். இன்றைப் போலவே எல்லா நாடுகளும் ஏடுகளும், தமிழ்ச்செல்வன் நல்ல மனுசன், அழகா சிரிப்பாரே என்று முனகுவதோடு நிறுத்திக் கொள்ளும். குடிமக்கள் மீது இரசாயன ஆயுதங்கள் (சூட்டழுத்த ஆயுதங்கள் உட்பட) ஏவப்படுவதை ஐ.நாவின் ஆயுத விதிகளுக்கு எதிராக இலங்கையரசு மேற்கொள்ளக் கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கான இராணுவ மற்றும் அரசியல் தற்காப்புக்களைப் புலிகள் எவ்விதம் மேற்கொள்வார்கள் என்பது இப்போதைய கேள்வி.
Posted by சுந்தரவடிவேல் at 0 comments Links to this post
