இயேல் கட்டிடங்கள் - 4

Image hosted by Photobucket.com
இது நம்மூர்ப் பக்கத்துக் கதவுகளை நினைவூட்டியது!

கார்த்திக்ராமாஸ் வரவு, நியூஹேவன் விழாக்கோலம்!

நியூஹேவனின் Art & Ideas நிகழ்வுகளை இந்த வருடம் அதிகம் பதிய முடியவில்லை. 10 ஆவது வருட நிகழ்வின் இறுதி நாளான சனிக்கிழமை திடீர் விருந்தாளியான கார்த்திக்குடன் (செர்ரி, கதிர்காமஸ் போன்ற அவதாரப் பெயர்களையும் தாங்கியவர்) சென்று கலந்து கொள்ளவொரு வாய்ப்புக் கிட்டியது. இதை கார்த்திக்கின் வருகையையொட்டிய விழாவாகவும், அவரது பத்தாவது பிறந்த நாளாகவும் என்னைப் போலவே நீங்களும் கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பல்ல!

பாலகருக்கு அகவை மகுடம் சூட்டும் பாலகன்
Image hosted by Photobucket.com

பிறந்த நாளுக்கு வந்திருந்த திருக்கூட்டம்
Image hosted by Photobucket.com

மக்களுக்கு விநியோகிக்கப் பட்ட இனிப்பு
Image hosted by Photobucket.com


கார்த்திக்கிற்காக ஏற்பாடு செய்யப் பட்ட Bomb Squad இசைக் குழு
Image hosted by Photobucket.com

கார்த்திக்கின் திருமுகப் பொம்மையை ஏந்தி வலம் வரும் தொண்டர்கள்
Image hosted by Photobucket.com


வலைப்பதிவர்கள் இருக்குமிடத்தில் முகமூடி இல்லாமலா?!
Image hosted by Photobucket.com

பாய்மரப் படகில்

அன்றைக்கு மாலை. நானும் மற்றும் இரு அலுவலக நண்பர்களும் கிளம்பினோம். பேராசிரியர் தன்னோடு பாய்மரப் படகுச் சவாரிக்கு அழைத்திருந்தார். பரிசல், விசைப்படகு, துடுப்புப் படகு எல்லாவற்றிலும் ஒரு மணி நேரத்துக்கு இத்தனை ரூபாய் என்று சுற்றுலாக் காரனின் பரவசத்தோடு தத்தளித்துச் சுற்றியதுண்டு. ஒரு முறை பாய்மரப் படகிலும் யாரோ செலுத்த 30 பேரோடு கும்பலாய் உட்கார்ந்திருந்துவிட்டு வந்ததும் உண்டு. ஆனால் இது வித்தியாசமான அனுபவம். ஒரு பத்து மீட்டர் நீளமுள்ள படகு. படகின் அடித்தளத்தில் சில அறைகள். அதில் இருவர் வசிப்பதற்கான படுக்கை, கழிவறை, சமையலறை வசதிகள். மேலே 15 மீட்டர் உயர இரும்புத் தண்டு. அதிலிருந்து கிளைக்கும் கம்பிகள்.

நிறுத்துமிடத்திலிருந்து விசைப் படகாகக் கிளப்பினார். கடலுக்குள் வந்ததும் மோட்டாரை அணைத்து விட்டுப் பாய்களை விரித்தோம். இரண்டு வெள்ளை முக்கோணங்களாய்ப் பாய்கள் உயர்ந்து விரிந்து கொண்டன. படகைப் பற்றி எனக்கொன்றும் தெரியாது. கூட வந்த ஒருவனுக்குத் தெரியும், பேராசிரியருக்குத் தெரியும், அவர்தான் தலைமை மாலுமி, இந்தக் கயிற்றை இழு, இதை அவிழ்த்துவிடு, இறுக்கு, தளர்த்து, அதைப் பிடி என்பார் நாங்கள் ஓடி ஓடிச் செய்து கொண்டிருந்தோம். அன்றைக்குக் காற்று பலமில்லை. ஒரு நாட்டிகல் மைல் வேகத்தில் படகு செல்வதே பெரும்பாடாக இருந்தது, அத்தோடு கடைந்தெடுத்த மாலுமிகள் (நாங்கதான்!) வேறு. இந்த அழகோடு அங்கு நடந்து கொண்டிருந்த படகுப் போட்டியிலும் துணிந்து நுழைந்துவிட்டோம்.

ஒரு படகில் போட்டி நடத்துவோர் நங்கூரமிட்டிருந்தார்கள். படகின் பெயரைக் கேட்டுக் கொண்டார்கள். இன்னும் சில நேரங்களில் குழலூதுவோம், ஐந்து நிமிடங்களில் இந்த எல்லைக் கோட்டைக் கடந்து நீங்கள் படகைச் செலுத்தி அதோ அந்த என்னமோ பாறையைச் சுற்றிவிட்டு வர வேண்டும் என்பதாய்ப் போட்டி. காற்று இல்லை. படகுகளெல்லாம் அங்கேயே மிதந்து கொண்டிருந்தன.

நேரம் சென்றதேயொழியப் படகு செல்லவில்லை. மழை இருண்டு வந்தது. சட சட. நனைவது சுகம், குளிராதவரையில்! காற்றுமில்லை, மழை வேறு, இனி போட்டியில் இருப்பது அர்த்தமில்லையென்று போட்டியிலிருந்து விலகி, மோட்டாரை இயக்கிக் கரையை நோக்கி வர ஆரம்பித்தோம். பாதித் தொலைவு வந்ததும் காற்று வேகங்கூடி இருப்பதை உணர முடிந்தது. மறுபடியும் மோட்டாரை அணைத்துவிட்டுப் பாய்மரத்தால் செலுத்தினோம். மழைக் காற்று. இப்போது தள்ளியது. 4 நாட்டிகல் மைல் வேகத்தில் படகு சென்றது. மோட்டாரின் இறைச்சலில்லாமல், சடசடக்கும் மழையின் சத்தத்திலும் படகு கிழிக்கும் நீரின் சத்தத்திலும் அந்தப் பொழுது என்னவோ செய்தது. மழையின் முடிவில் கீழ்வானில் வானவில். இந்தக் கோடியில் கிளம்பி அந்தக் கோடி வரை முற்று முழுதாய் ஒரு வில். அதனருகிலேயே புரண்ட நிறங்களோடு இன்னொன்றும். இருட்டும் வரை படகைச் செலுத்திக் கொண்டிருந்துவிட்டுப் பின் திரும்பினோம்.

Image hosted by Photobucket.com

அந்த மாலை ஒரு புது அனுபவம். படகிலும், பயணத்தின் பின்னும் தமிழர்களின் திரைகடலோடிய திறனை நினைத்துப் போற்றாமலிருக்க முடியவில்லை. மெல்ல விரியும் அழகான அந்தப் பழங்கனவை, இப்போது தமிழர்களிடம் எத்தனைப் பாய்மரப் படகுகள் இருக்கின்றன, என்ற கேள்வி அடித்துக் கலைக்கிறது.

தென்னிந்திய வரலாற்று வரைபடம்

இன்றைய பிபிசி தமிழோசையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத் தொல்லியல் ஆராய்ச்சியாளர் முனைவர் கே. இராஜன் அவர்களுடனான செவ்வியைக் கேட்டேன். இவரும் இவரது சக ஆராய்ச்சியாளர்களும் தென்னிந்தியாவின் வரலாற்று வரைபடங்களைத் (Atlas, படத் தொகுதி?) தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவ் வரைபடங்கள் அரசியல், சமூக, கலாச்சார மற்றும் பொருளாதாரத் தகவல்களைத் தாங்கியிருக்கும். கற்காலத்திலிருந்து விஜயநகரப் பேரரசின் காலம் வரையிலான தகவல்கள் தொகுக்கப் படுகின்றன. கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முதல் முயற்சியாகப் புதுக்கோட்டை மாவட்டத்தினைக் குறித்த விபரங்கள் சேகரிக்கப் பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன (இன்னும் முழுமையடையவில்லை). ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலப் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயற்படுத்தப்படும் இப்புறத்திட்டுக்கு பிரெஞ்ச்-இந்திய அமைப்பொன்றும் ஃபோர்டு அறக்கட்டளையும் உதவுகின்றன. இப்புறத்திட்டினைப் பற்றிய மேலதிகத் தகவல்களை Historical Atlas of South India எனும் இணைய தளத்தில் காணலாம். வரைபடங்களை மோசில்லா உலாவியை விட எக்ஸ்ப்ளோரரின் மூலம் நன்றாகக் காண முடிகிறது.

இயேல் கட்டிடங்கள் - 3

இது இயேலின் ஒரு நூலகம். ஸ்டெர்லிங் நினைவு நூலகம். முன்பொருநாள் இதைப் பற்றிக் கொஞ்சம் எழுதியிருக்கிறேன். இது அப்பதிவில் பார்க்கும் கட்டிடந்தான், கொஞ்சம் அருகில்!

Image hosted by Photobucket.com

சில கோக்கு மாக்கான குறிப்புகள்!

Image hosted by Photobucket.com

1. திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் திறக்கப் படவிருக்கும் கோக் கும்பெனியை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி. இக் கும்பெனி நாளொன்றுக்கு 5 இலட்சம் லிட்டர்கள் தண்ணீரைப் பயன்படுத்த அரசால் அனுமதிக்கப் பட்டிருக்கிறது. தாமிரபரணியிலிருந்து இந்தத் தண்ணீர் உறிஞ்சப்படும். சொன்னதை விட அதிகமாக, அதாவது நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர்களை உறிஞ்சுமென மக்களால் அச்சம் தெரிவிக்கப் படுகிறது. சுற்றுப் புற விவசாயிகள் தாமிரபரணியையே நம்பியிருப்பதால் நாளடைவில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமென அஞ்சுகிறார்கள். மேலும் கோக் தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவுகள் இருக்கும் சுற்றுப்புறத் தண்ணீரையும், விளைநிலங்களையும் பாழடிப்பதாகவும் உதாரணங்கள் இருக்கின்றன.

2. இதே போன்றவொரு தண்ணீர் உறிஞ்சும் மற்றும் மாசுபடுத்தும் கோக் தொழிற்சாலை, பாலக்காட்டுக்கருகிலிருப்பது, போராட்டங்களின் காரணமாகத் தற்போது மூடப்பட்ட நிலையிலும், வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையிலும் இருக்கின்றது. (இந்தியாவில் மொத்தம் 27 கோக் தொழிற்சாலைகளுள்ளன!). பெருங்கோக்குப் புள்ளிகள் இந்தியாவுக்கு விரைந்திருப்பதாக இன்றைய செய்திகள்.

3. கோக் கும்பெனி விளைவிக்கும் கேடுகள் எண்ணிடலடங்கா. முக்கியமான சில:
அ) கொலம்பியாவில் முறைகேடுகளை எதிர்த்துப் போராடிய தொழிற்சங்கக் காரர்களை, கோக் வளாகத்துக்குள்ளேயே இராணுவம் கொன்றது;
ஆ) அமெரிக்காவில் கறுப்பரினத்தின் மீது சம்பளம், பணிவுயர்வு போன்றவற்றில் பாரபட்சமாக நடந்து கொண்டது;
இ) சோடாபுட்டியுடன் மெல்ல ஒரு நாட்டின் சந்தைக்குள் ஊடுருவும் கோக், கொஞ்சம் கொஞ்சமாக அந்நாட்டின் தண்ணீர் விற்பனையைக் கையகப் படுத்துகிறது. (தசானி கோக்கோட தண்ணிதான், இதுல புற்று நோய் வர வைக்கும் ப்ரோமேட் எனும் நச்சு அளவுக்கதிகமா இருக்கு!) விளைவு? நம்ம ஊரு ஆத்துத் தண்ணியை கோக் நமக்கே விற்கும்;
ஈ) இவை தவிர கோக்கின் உலகறிந்த சுகாதாரக் கேடுகள்!

4. கோக்கின் இத்தகைய பிறழ்வுகளை எதிர்த்துப் பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்ட வண்ணம் இருக்கின்றன. அவற்றில் சில:
அ) கோக்கைப் புறக்கணிப்போம் என்ற பொதுமக்களின் கூப்பாடுகள் (கோக்கின் பொருட்கள் ஒரு பெரிய பட்டியலில் அடங்கும்);
ஆ) இந்திய நாடாளுமன்றம் தனது வளாகங்களில் கோக்கை விற்க அனுமதிப்பதில்லையென்ற சட்டம்;
இ) உலகெங்கிலும் பல பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் கோக்கைப் புறக்கணித்தல், உதாரணம் க்வீன்ஸ் பல்கலை, கனடா, கலிபோர்னிய மாநிலப் பல்கலை;
ஈ) அண்மையில் வாஷிங்டன் மாநில மக்களாட்சிக் கட்சி (36வது மாவட்டத்தில்) அனைத்து கோக் பொருட்களையும் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது.

இந்த கோக்கை நாம புறக்கணிக்கனுமா வேண்டாமா? கங்கை கொண்டான் தண்ணியை கோக் உறிஞ்ச விடலாமா?

தொடர்புடைய சுட்டிகள் (தலைக்கு ஒன்று மட்டும்):
கங்கை கொண்டான் போராட்டம்
பாலக்காடு கோக் எதிர்ப்பு (மேதா பட்கரும் களத்தில்)
கொலம்பியா கொலைகள்
தண்ணீர்த் தொழிலை விழுங்கும் கோக்
அமெரிக்காவில் கோக்கின் இன வெறி
பொதுவான கோக் புறக்கணிப்புகளைப் பற்றிய தளம் (அடிக்கடி புதுப்பிக்கப் படுகிறது).

ஊர்க்குறிப்பு: கோக் என்றில்லை, எல்லா சோடா ரகங்களும் உடல் நலத்துக்குக் கேடானவை, எனவே இவற்றைப் பள்ளிகளிலிருந்து அகற்ற வேண்டுமென அமெரிக்காவின் கனெக்டிகட் மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை அதெல்லாம் அம்மாப்பா பாடு என்று ஆளுநர் தூக்கியெறிந்து விட்டார். இந்தத் தீர்மானத்தைத் தூக்கியெறிய வைக்க சோடாக் கம்பெனிகள் செலவழித்தது 250,000 டாலர்கள்!

இயேல் கட்டிடங்கள் - 2

Image hosted by Photobucket.com

காற்றுவாரி
கானெறி
திட்டி
நுழை
பலகணி
காலதர்
சாலேகம், சாலகம், சாலம்
நூழை
கதிர்ச்சாலேகம்
பின்னற்சன்னல்
குறுங்கண்
குறுங்குடாப்பு
காற்றுவாரிப்பலகை
நேர்வாய்க்கட்டளை
பசுக்கற்சன்னல்
இலைக்கதவு

இதெல்லாம் என்னன்னு கேக்குறீங்களா? சன்னலில் இத்தனை வகைகள் என்று விளக்குகிறார் மதுரபாரதி. சரி, மேலேயிருப்பது எதில் சேர்த்தி?

இயேல் கட்டிடங்கள்

வானை முட்டும் பெட்டியடுக்குக் கட்டிடங்கள் என்னைப் பெரிதும் வியப்புற வைப்பதில்லை. நியூ யோர்க்கைச் சற்றுத் தள்ளியிருந்து பார்த்தால் என் குவியத்தின் கூர்நுனி அந்தக் கட்டிடங்களுக்கிடையில் சிக்கித் திணறுவதைப் போலிருக்கும். புதிய கட்டிடக் கலையென்ற பெயரில் பழைய அழகிய நுணுக்கங்கள் பலவற்றையும் தப்ப விட்டு விடுகிறோமோ என்று நினைப்பதுண்டு. இவ்வகையில், பழைய கட்டிடக் கலையம்சங்களை இன்றளவும் தாங்கி நிற்கும் இயேல் (Yale) பல்கலையின் கட்டிடங்களை எனக்குப் பிடிக்கும். தேவையெனில் இக்கட்டிடங்கள் மிகுந்த அக்கறையுடன் (யோசிக்க வைக்கும் செலவுடனும்!) இயல்பு/தோற்றம் மாறாமல் மீட்டுருவாக்கம் செய்யப் படுகின்றன. இத்தொடர் பதிவில் நான் எடுத்த இயேலின் சில புகைப்படங்களை, குறிப்பாக வாயில்கள் மற்றும் சாளரங்களினதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

(போச்சு, இதை எழுதி முடித்துவிட்டு வாசித்த போது "காலத்தின் முடிவுறா வெளியில் எது புதியது எது பழையது என்று எப்படித் தெளிவாகச் சொல்வாய், கெக்கெ?" என்ற கேள்வியுடன் உள்ளேயிருந்து ஒருவன் எழுந்து வருகிறான் (அவனுக்குக் காலத்துக்குள் வெளியா அல்லது வெளிக்குள் காலமா என்றொரு உபகேள்வியும் இருப்பதாகப் பிறகு என்னிடம் சொன்னான்), அவனிடம் "பழையதைவிடப் புதியதைப் புதியது என்போம்" என்று சொல்லிப் பார்க்கிறேன். "அப்படியென்றால் பழையதும் முன்பு புதியதுதானே?" என்றபடி என்னை இந்தப் படத்தைப் போட விடாமல் இழுத்து மௌனத்தில் தள்ளிவிடப் பார்க்கிறான். இது ஒத்து வராது, இப்போதைக்கு அவனை விட்டுவிட்டுப் படத்தைப் பார்ப்போம்!)

Image hosted by Photobucket.com

'அற்றம்' பெற்றோம்!

அற்றம் என்றால் சமயம், சோர்வு, வருத்தம், அவமானம், வறுமை, அழிவு என்பதாகத் தமிழ் அகராதி சொல்கிறது. பூக்களையும், இசைகளையும் இதழ்களின் பெயர்களாகக் கேட்ட காதுகளுக்கு இழப்பும் துயரும் சார்ந்த எதிரிடையான பெயர் ஒரு வித்தியாசம். சட்டென்று பதியும் முகப்பெழுத்துருவம். புலம்பெயர் வாழ்வு அனைவருக்கும் சிக்கலானது, இதில் யாரையும் தனித்து விடும் எண்ணமில்லை, பெண்ணியத்தை அறைகூவி விற்பதற்கல்ல, எழுத்தில் ஆர்வமுடன் வரும் பெண்களுக்கு முன்னுரிமை போன்ற கட்டியங்களுடன் வருகிறது அற்றம். டொராண்டோ வலைப்பதிவர் கூட்டத்தில் நான் சந்தித்த தான்யா, பிரதீபா ஆகியோருடன் கஜானி, கௌசலா ஆகியோரைக் கொண்ட குழுவினால் நடத்தப்படுகிறது.

சிறுமிகளும் பெண்களுமாய் 16 அஞ்சல் தலைப் படங்களை முன்னட்டையில் கொண்ட மே 2005 இதழை வாசித்து முடித்த போது ஒரு மனக்கனம். சிறுகதைகள் என்றாலே அண்மைய காலங்களில் பின்வாங்குக்குப் போய்விடுகிறேன். இந்த இதழிலும் அதைக் கடைசியாகத்தான் படித்தேன். ஆனால் நிருபாவின் 'ஒரு பழம் தப்பிச்சுண்ணு' கிறக்கந்தரும் ஒரு மொழியுடனும், ஆங்காங்கே அள்ளித் தெளித்த அடிகளுடனும், மென் நகைகளுடனும், பாரந்தரும் முடிவுடனும் பிடித்துப் போனது. நெடுநாட்களின்பின் ஒரு நல்ல கதையைப் படித்திருக்கிறேன். கண்மணியின் 'மண்ணில் நல்ல வண்ணம்' கதை ஆதாம் ஏவாளை இன்னொரு தரம் போய்ப் பார்க்கிறது, அவர்களின் உரையாடலைப் பெண்மொழியில் பதிகிறது. சி.டி.பி.சி வானொலியில் சில நேரங்களில் கேட்டிருக்கும் நேயர் அழைப்பினை நினைவுக்குக் கொண்டு வருகிறது. இதழில் ஆங்காங்கே கவிதைகள். ஆகர்ஷியா, ஆழியாள், தான்யா, சுகந்தி சுப்ரமணியத்தின் கவிதைகள். கண்ணீர் வேண்டாம் சகோதரி, இனூயிட், BLACK, நடன அரங்கேற்றம் என்று கட்டுரைகள்/விமர்சனங்கள்/திறனாய்வுகள். 'அட' என்றொரு பத்தி பெண் எழுத்தாளர்கள் தமக்குள் முரண்பட்டுக் கொள்வதை இயல்பு படுத்துகிறது. இன்னொரு பிடித்த பகுதி நூலறிமுகம். பச்சைத் தேவதை, ரத்த உறவு, தனிமையின் ஆயிரம் இறக்கைகள், புதிய கதைகள், ஏன் பெண்ணென்று, தொடரும் தவிப்பு ஆகிய புத்தகங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகங்கள். வாசிக்க வேண்டுமென நினைத்தவை புதிய கதைகளும், தொடரும் தவிப்பும். 'ஓரினச் சேர்க்கையாளர்களைப் புரிந்து கொள்ளுதல்' என்றொரு உரையாடலைத் தொடங்கியிருக்கிறார் பொடிச்சி (ஆப்ஸ்ரஸ்க்கா என்றால் என்ன/யாரென்று தெரியவில்லை இச்சிறு மூளைக்கு). எனக்கென்னவோ 'ஓரின'ங்கற வார்த்தை இடிக்குது. ஆணும் பெண்ணும் மனித இனந்தானே. ஆண்பால், பெண்பால் மட்டுமே வெவ்வேறு என்பதால் 'தற்பால்' அப்படிங்கறதுதான் பொருத்தமாத் தெரியுது. கதையுரைத்தல் என்ற பகுதியில் அதீதா எழுதியிருக்கும் துணிவுமிக்க பெண்களை என் கிராமத்திலும் கண்டிருக்கிறேன். கடைசியா உங்க மூளைக்கு வேலை தந்தே ஆவோம் என்று இலக்கியப் புதிர் போடுகிறார்கள், கிசு கிசுக்களுக்கும் ஊர் வம்புகளுக்கும் உத்தரவாதம்! புலம் பெயர் வாழ்வில் அயலகத்தின் சமூக, அரசியற் கருத்துக்களோடும், கருத்துப் பதிவுகள் மற்றும் வெளிப்பாட்டு உத்திகளோடும் நாம் எவ்விதமெல்லாம் ஊடாடுகிறோம் என்பதையெல்லாம் அற்றம் சொல்லி வரும் என நம்புகிறேன்.

அற்றம் பெற விரும்புவோருக்கான குறிப்பு:
அற்றத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள attamm at gmail dot com

புத்தகங்களை விட்டுத் தப்பியோடி

நானும் என் வாசிப்பை எழுதியே தீருவது என்று முடிவெடுத்து விட்டேன். இனி உங்கள் பாடு, கேட்ட தங்கமணி, பிரதீபா பாடு!

அது ஒரு சின்ன பீரோ. அப்பாவுடையது. இதில் நான் எப்போது புத்தகங்களை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன் என்று தெரியாது. நினைவுக்கு வருவதெல்லாம் தாகூரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு சின்னப் புத்தகம். அவரே எழுதியிருப்பதைப் போன்றது. அகமது எனும் ஓடக்காரனோடு ஆற்றுக்குப் போய் முதலையிடமிருந்து தப்பியதிலிருந்து, பூக்களைப் பிழிந்து அந்தச் சாற்றில் கவிதை எழுதும் பரிசோதனை, குத்தகைக்குக் காணி கேட்டு வரும் ஆளின் கதை வரை அருமையான சம்பவங்கள் அடக்கம். சில வரிகள் இன்னும் நினைவிலிருக்கின்றன, "பூக்கள்தாம் குழைந்து கூழாயினவே தவிர" ரசம் வரவில்லை என்பதாய். அந்தப் புத்தகத்திலேயே என்றுதான் நினைக்கிறேன், அவரது சிறுகதைகளும் இருக்கும். தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் கல்லினைத் தொலைத்துவிட்டு ஆற்றங்கரைக் கூழாங்கற்களையெல்லாம் பொறுக்கியபடி திரியும் ஒரு பைத்தியக்காரன், காஞ்சி மன்னனுக்கும் காசி மன்னனுக்கும் சண்டையென்று தோப்பில் விளையாடும் சிறுபிள்ளைகள் இப்படியாக. பிறகு அதே பீரோவுக்குள்ளிருந்த "அன்பின் வடிவம் டாக்டர் ஐடா" எனும் ஒரு புத்தகம். இது டாக்டர் ஐடா ஸ்கடர் எனும் மருத்துவரைப் பற்றியது. வேலூர் சி.எம்.சியை நிறுவியவர் என்று பின்னால் தெரிந்து கொண்டபோது வியப்பாயிருந்தது. நெ.து.சுந்தரவடிவேலின் (இவர் பெயரைத்தான் அப்பா எனக்கு வைத்தாராம்!) நஞ்சுண்ட நாயகர்கள். யாரோ ஒருவர் விஷக் கோப்பையோடு இருப்பது மாதிரி ஒரு படம். இவற்றைத் தவிர அழ.வள்ளியப்பாவின் கவிதைகளும், பள்ளிக்கூடத்து நூலகத்தில் (அப்படியொன்று இருப்பதே ரொம்ப நாட்களுக்குத் தெரியாது) எப்போதாவது கிடைக்கும் 'வரப்புத் தகராறு' போன்றவையும்.

ஆறோ ஏழோ படிக்கும்போது பக்கத்து வீட்டுக்கு இன்னொரு ஆசிரியர் குடும்பம் வந்தது. அந்தப் பிள்ளைகளிடம் ரத்னபாலா (அதில் வந்த துப்பறியும் சுந்தர் நானென்றுதான் நினைப்பு!). அப்போதிலிருந்துதான் பொது நூலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தேன். அப்பா தன்னுடைய நூலக எண்ணான 51ல் புத்தகம் எடுக்கும் உரிமையை எனக்களித்தார். சில காலம் கழித்து எண் 621க்கு எனக்கொரு 5 அல்லது 10 ரூபாய் கட்டினார். காட்டுச் சிறுவன் கந்தன், கமலாவும் கருப்பனும், ராஜா மகள், ராட்சத சிலந்தி, பொம்மக்கா மற்றும் சிறுவர்களுக்கான நல்லொழுக்கக் கதைகளாகப் படித்து அந்நாயகர்களின் உலகில் சஞ்சரித்தபடியே வீட்டுக்கு வருவேன். இவற்றிலே பல கதைகளின் சம்பவங்கள் இப்போதும் திடீரென்று ஒரு கணத்தில் தலை தூக்குவதைக் கண்டு ஆச்சரியம் கொள்வேன். மறந்து போயிருக்கும் கதைகளினூடே இழையும் சோகம் கும்மென வந்து கவியும். இந்தக் காலகட்டத்தில்தான் அப்பாவின் பாரதியார் கவிதைகளைக் கையகப் படுத்தி என் பெயரைப் பச்சை நிற ஸ்கெட்ச் பேனாவால் கோணலாக எழுதி வைத்துக் கொண்டேன். நல்லதோர் வீணை செய்தேயில் ஆரம்பித்தது இன்றும் தொடர்ந்து வருகிறது.

நாளாக ஆக சிறுவர் கதைகள் ரொம்பவும் சிறிய பிள்ளைகளுக்கானதோ எனுமொரு தோற்றம். இருந்தாலும் "பெரியவர்களுக்கான" புத்தகங்களை எடுப்பதில் ஒரு தயக்கம். ஒரு நாள் ஏதோ ஒரு கதையின் முதல் வரியைப் படித்துவிட்டுக் கிடந்து சிரித்தேன் "துங்காநாயருக்குக் கோவம் வந்தது, கேவலம் ஒரு குண்டி வேட்டிக்குக் கூட" வழியில்லையே என்பதாக ஆரம்பிக்கும் கதை. இதன் மூலம் என்னைப் பெரியவர்களின் புத்தகங்களுக்கு அறிமுகம் செய்து கொண்டேன். இன்னொரு பட்டாம்பூச்சி, பாபி போன்றவற்றை மாமா வீட்டில் வாசித்தேன், அவர் குமுதம், விகடன் தொடர் கதைகளைக் கட்டித் தைத்து 'ஜெகதா படிப்பகம்' என்ற பெயரில் கேட்பவர்களுக்குக் கொடுப்பார். புரியாத கதைகளும் ஓவியங்களும் கவிதைகளும் அறிமுகமாயின. மருது எப்போதும் எனக்குப் பிடித்த ஓவியர். பக்கத்து வீட்டுக்கு வந்திருந்த தாத்தா ஒருவர் போகும்போது சத்தியசோதனையைக் கொடுத்துவிட்டுப் போனார். அதிலும் கொஞ்சம் படித்துவிட்டு ஜோகான்னஸ்பர்க் என்று சொல்லிக் கொண்டு திரிந்தேன், அயலகத்திற்கு வந்தபோது சீமான்கள் சீமாட்டிகளின் தொப்பிகளைப் பார்க்கும்போது அடுத்தாரின் தொப்பியைத் தொட்டுப் பார்த்து அவமானப்பட்ட இளங்காந்தியை நினைத்துக் கொள்வேன். அது பதின்மங்களின் கோளாற்றுக் காலம். கழுதைக்குக் 'காதலும்' அதற்கு ஒரு 'சோகமும்' வேறு சேர்ந்து கொண்டன! பிறகென்ன, கவிதைதான். அப்போதும் அதிகம் படிக்கவில்லை. ஒரு நாள் நண்பனொருவன் கொடுத்த "கருவண்டுக் கண்ணழகி"யைச் சாதாரணப் புத்தகம் என்று வீட்டுக்குக் கொண்டு வந்து படித்துப் பார்த்தேன். அது நான் முதன்முதலாகப் படித்த 'வயது வந்தோருக்கான இலக்கியம்'! பத்து முதல் பன்னிரெண்டாம் வகுப்புகள், பிள்ளைகளுக்கு, குறிப்பாய் வாத்தியார் பிள்ளைகளுக்கு, ஒரு ஊழ்வினையென்றுதான் சொல்ல வேண்டும். இக்காலத்தில் மற்ற புத்தகங்களை யார் கண்டது!

கல்லூரிக் காலத்திலும் அதற்குப் பின் இன்று வரையிலும் என் வாசிப்புக்கு முக்கியக் காரணம் தங்கமணி. தான் படிப்பவற்றையெல்லாம் எனக்கும் சொல்வான், படிக்கக் கொடுப்பான். அவனோடிருப்பதே போதுமென்ற அனுபவம். பல புத்தகங்கள் தரும் ஒரு உணர்வு. கல்லூரிக் காலங்களில் பாடந்தான் முதன்மையென்றாலும் நடுநடுவே விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த காலங்களிலும் கல்லூரியிலேயும் படித்த புத்தகங்களில் சிலவற்றை என் நாட்குறிப்பில் குறித்திருக்கிறேன். இப்போது படித்தால் வேடிக்கையாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும், சில நேரம் ஆச்சரியமாகவும் இருக்கிறது. அதைப் பெயர்த்து இங்கு:

29.5.1989 திங்கள். I dont know why I want to have friendship with younger boys and girls. I love them. அவர்களைப் போல் நாமும் இருக்க முடியாதா என்றொரு ஏக்கம். ஆகாச வீடுகளில் (வாஸந்தி) அந்த மீனு ராஜுவின் கையைப் பிடித்துக் கொண்டு வயல்வெளிகளில் நாரைகளைப் பிடிக்க ஓடுவது போல் ஓடமுடியாதா என்றொரு ஊமைக் கனவு. வயது? வீட்டில் விளையாடுவதற்கே முணுமுணுப்புகள். சின்ன வயதில் பெரியமனிதத் தனம், இப்போது சிறுபிள்ளையாக ஏக்கம். இக்கரைக்கு அக்கரைப் பச்சையா?

4.6.1989 ஞாயிறு. இன்று காலையில் விழிக்கும்போதே ஒரு கற்பனை, ஏதோ பெரிய எழுத்தாளன் போல "இரு முழங்கால்களுக்கிடையே அகப்பட்ட ஈயை உயிருடன் பிடிக்கப் பிரயத்தனப் படுபவன் கூனிக் குறுகுவதைப் போல அவன் கூனிக் குறுகினான்" - எப்படி இருக்கிறது. தெரியவில்லை. சிரிப்பு வந்தது. படுத்துக் கொண்டே ஏதேதோ யோசித்தேன். தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்'ஐப் படித்தேன். அதில் வருகின்ற அப்புவை நினைத்தேன். பாவம் அவன். என் தாய் தூயவள் என்று நினைத்துக் கொண்டேன். அலங்காரம் தன் மகனின் தேஜஸ் தீயின் மூலம் தன் பாவத்தைக் கழுவிக் கொள்ளலாம் என்று பாவம் செய்திருப்பாளோ என்று நினைக்கிறேன்.

5.6.1989 எண்டமூரி வீரேந்திரநாத்தின் 'பணம்' படித்துக் கொண்டிருக்கிறேன். எண்ண அலைகள் கொஞ்சம் லேசாக அடித்துக் கொண்டிருக்கின்றன. நிறைய யோசிப்பதில்லை. படிக்கிறேன். பேசுகிறேன். எழுதுகிறேன்(?).

16.6.1989 சுபா படித்தேன். Not bad. But I hardly like crimes. I want to read effective ending or tragic ending stories. இப்போது வீட்டில் நகை பேச்சு. 'பணத்'தில் படித்த ஒரு சில வரிகள்:
Money can buy books - not wisdom
Money can buy medicines - not health
Money can buy wealth - not happiness
Money can buy clothes - not beauty.
அவ்வரிகளின் நிஜம் எனக்குப் புரிந்தது. பணத்தின் தேவையும் புரிந்தது, But I totally dislike the people who are wandering for money only. Do they have any mind with affection? They can do anything for money. They are uselsss. Money is after all nothing. It is needed for living but money only is not life.

21.6.1989 இன்றுதான் கடைசி முழுநாள். நாளைக்குக் கல்லூரி. இப்ராம்சாவுக்கு லெட்டர் போட்டேன். ஒரு 60க்கு மேல் உள்ள கிழவருக்கும் (நார்த்தாமலை பூசாரி) ஒரு 25க்கும் திருமணம். பாவம் பெண். பரிதாபப் பட்டேன். தாலி கட்டிய விரல்களில் தடுமாற்றம். தளர்நடை. ஹ¥ம் சொத்துக்காக இருக்கும். தூங்கினேன். ஜானகிராமனின் 'அமிர்தம்' படித்தேன். மனதில் நாளை காலேஜ் என்ற உணர்வு மேலோங்கி இருந்ததாலும் தலை வலித்ததாலும் அக்கதையின் முடிவு என்னை மிகவும் பாதிக்கவில்லை. only to a slight extent.

26.6. 1989. Ananda vayal is a very effective novel. In moonstone I very much like the character Rosanna. அவளுடைய காதல் on Franklin is divine one.

17.8.1989, வியாழன். கன்யாலால் முன்ஷி எழுதிய ஜெய்சோம்நாத் எனும் நாவல் படிக்கிறேன். அப்பா! படிக்கும்போதே மயிர்க்கூச்செறிகிறது. சஜ்ஜன், பத்மடியுடன் ஒரு பிரிவு கஜினியின் படையைப் பாலைவனத்தின் கோரப் புயலில் மாட்டிவிட்டுத் தன் வாளைச் சுழற்றியபடி "ஜெய் சோம்நாத்" என்று கத்தும் போதும், கோகா ராணா கோட்டையில் இருந்து இறங்கி வந்து கஜினியின் படையினும் புகுந்து போரிட்டு வீழும்போதும் மெய் சிலிர்க்கிறது. இந்துக்கள் அனைவரும் படிக்க வேண்டிய நாவல்.

6.11.1989. நேற்று அகல்யா by Balakumaranல் இருந்து கொஞ்சம் படித்தேன். அதில் அவன் (சிவசு) சொல்வது போல் நான் இயல்பாய் இருக்கின்றேனா அல்லது ஒவ்வொருவரிடமும் நான் எனது வேஷத்தை மாற்றுகின்றேனா என்பது தெரியவில்லை. எனது நண்பர்களுக்கு நானொரு joker. வீட்டில் படு அமைதி. என்னியல்பு எது? கூடித்திரிகையில் கும்மாளமிடுவதா? தனியேயிருக்கையில் மனஞ்சுருங்கி அல்லது மிக விரிந்து, ஆடி அல்லது ஒடுங்கி, காமுற்றுத் திரிவதா? எல்லாவற்றையும் easyயாக எடுத்துக் கொள்வதா? கோபப் படுவதா? எல்லாவற்ருக்கும் சிரிப்பதா? வீண்வம்பு செய்வதா அல்லது சண்டை வந்தாலும் விலகிச் செல்வதா? எது என் இயல்பு எனக்கே தெரியவில்லை. இவை அனைத்தையும் நான் செய்கிறேன். ஆனால் அதிகம் செய்வது அதிகமாக ஆடுவதுதான். துருதுரு.

11.5.1991. பாலகுமாரனோட முன்கதைச் சுருக்கம் படிச்சேன். எனக்குள் ஒரு நெருப்பு. தங்கமணி சொல்வது போல். கொட்டாங்கச்சியாய்ப் பரபரவென்று திகுதிகுவென எரிகிறது. நீறு பூத்தது போலும் கனன்று கொண்டிருந்தது. கதை. எழுத வேண்டும். பக்கம் பக்கமாய். புத்தகம் புத்தகமாய். மொழி மொழியாய். இல்லை வேணாம். தமிழ்ல மட்டும். ஒவ்வொரு வார்த்தையும் கதையாய் வர வேண்டும். அப்படி யோசிக்கணும். மண்டை வெடிக்கணும். கண்னு முழியெல்லாம் பிதுங்கி ரிசல்ட் கொண்டு வந்து, பெருமூச்சு விடணும். வெறி. அனல் பறக்கும் மூச்சை இழுத்துக் கொண்டு பாலைவனத்தில் உத்வேகத்துடன் பறக்கும் வெள்ளைக் குதிரை மாதிரி, பிடறி சிலிர்க்க அப்படி ஒரு வெறி. எழுத வேண்டும். பணத்துக்காக அல்ல. புகழுக்காகவா? அதற்காக இருக்கலாம். இல்லாமலிருக்கலாம். என் மனதைக் கொட்ட வேண்டும். டன் கணக்கில் ஏற்றி வைத்துக் கொண்ட சுமைகளைக் கொட்ட வேண்டும். கொட்டியே ஆக வேண்டும். நான் பச்சை வயல் மனது ரெண்டாவது கதைல வர்ற புனிதாவாம். தங்கமணி சொல்றான். நெஜமா? இருக்குமா? நான் innocentஆ? நம்பவும் முடியல. நம்பாம இருக்கவும் முடியல. எனக்கு peak life வேணும். excitement வேணும். கீழே வர வேணாம். what i mean is mentally. இ.ரா மாதிரி. ஆனா அப்படி ஒரு பதட்டம் வேணாம். ஒரு அப்பாவித்தனமோ, மழுங்கலோ வேணாம். தீர்க்கமாய், நச்சென்று, வெண்ணெயை செவத்துல அடிக்கிற மாதிரி, சிட்டுக்குருவி தலையைத் திருப்புற மாதிரி வாலாட்டற மாதிரி, சப் சப்பென்று மூஞ்சியில அடிக்கிற மாதிரி அப்படி ஒரு புத்தியோட, தெளிவோட, pointஆ ஒரு excitement வேணும். அப்ப உக்காந்து எழுதனும். நான் எழுத முடியுமா? பாலகுமாரன் கன்னியா ராசி உத்திர நட்சத்திரமாம். நானும் தங்கமணியும் அதே. எனக்கு எழுத வருமா? எழுதுவேன், at least இது மாதிரி டைரியாவது. தினம் ஒரு நாலு பக்கம். போதுமே. வாழ்க்கைல retire ஆனதுக்கப்புறம் படிக்க ஒரு புக் கிடைக்குமே. ஒவ்வொரு secondஐயும் எழுதணும். எழுதணும். யோசிக்கணும். என்ன பண்ணலாம். தங்கமணி, யப்பா. என்ன அறிவு என்ன பேச்சு, தீர்க்கமென்ன, சுத்தி சுத்தி யோசிச்சு, நொறுக்கித் தள்ளி, அமுக்கி அப்படியே அந்தக் கருத்தைக் கழுத்தோட புடிச்சு நிர்வாணமா நமக்குக் காட்டுற தெளிவு என்ன தீவிரம் என்ன! (கட் கட்!). எழுதுவேன். ஒவ்வொன்று பற்றியும் தீர்க்கமாய், ஆணி அறைந்தாற்போல் எழுதுவேன். நிச்சயம் எழுதுவேன். பாலகுமாரா! Thanks. நானும் எழுதுவேன். உன்னை விட அதிகமாய். வீறு கொண்டு பரிணாம வளர்ச்சியோடு, துள்ளலாய், இளமையாய் இன்னும் எப்படியெல்லாமோ எழுதுவேன் at least இந்த டைரியையாவது.

அப்படியான ஒரு காலம். அதில் புத்தகங்களை விட மனிதர்களையும், என்னையும் அதிகமாக நேசித்தேன், உற்றுப் பார்த்தேன். என் சின்ன உலகில் நிகழ்வுகளையெல்லாம் நானே சென்று சேகரித்துக் கொண்டேன். மனிதர்களோடேயே இருந்ததாலோ என்னவோ புத்தகங்களை அதிகமாய்ப் படிக்காதது போன்றதொரு உணர்வு. சென்னைக்கு வந்து தங்கமணியின்றி இருந்த முதல் நாலைந்து வருடங்கள் வாசிப்பின் களப்பிரர் காலம் போலத்தான். அவன் வந்த பிறகு உயிரும் வந்தாற்போல். நிறைய வாசிப்பான். அறை முழுக்கப் புத்தகங்களாக இருக்கும். தாய், கன்னிநிலம், மக்ஸீம் கார்க்கியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டு, மூன்று தொகுதிகள்), தியாகுவின் சுவருக்குள் சித்திரங்கள் என்று பலதையும் படிக்க வாய்த்தது. விக்ரமாதித்யனின் உயிர்த்தெழுதலைப் படித்துவிட்டு கோவளம் தர்ஹாவுக்குக் கிளம்பிப் போனேன். பாவாவைப் பாக்கணுமென்றேன். பாவா இறந்துவிட்டிருந்தார். அவர் மகனைப் பார்த்துவிட்டு வந்தேன். அதே சூட்டோடுதான் ருத்ரனையும் பார்த்தேன். பாரதியார், தாயுமானவர் கவிதைகளையெல்லாம் வரிவரியாய்ப் படித்துப் பேசிக் கொண்டிருப்போம்.

பிறகு புதுடில்லியில் ஒரு வருடம். டில்லித் தமிழ்ச்சங்க நூலகம் மிகப் பிடித்தவொன்று. தி.ஜாவின் மரப்பசு, பிறகு செம்மீன், காண்டேகாரின் புத்தகங்கள் சில, ஜெயகாந்தனின் நாவல்களில் விட்டுப் போயிருந்தவை என்று. பெயர்ந்தகத்திற்கு வரும்போது சொற்பமான புத்தகங்களுடனேயே வந்தேன், சிந்தனையாளர் நியெட்ஸே (மலர்மன்னனின் மொழிபெயர்ப்பு), இராமாயணப் பாத்திரங்கள் (தந்தை பெரியார்) இப்படியாக விரல் விட்டு எண்ணி விடலாம். பின்பு மதுரையிலிருந்து கலீல் கிப்ரானின் ஞானிகளின் தோட்டம், தீர்க்கதரிசி, கண்மணி கமலாவுக்கு (புதுமைப்பித்தனின் கடிதங்கள்) இன்ன பிறவும் வரவழைத்துக் கொண்டேன். டொராண்டோவில் உறவேற்பட்ட பின்னர் (!) புத்தகங்களின் வரவு அதிகம். தலித்திய விமர்சனக் கட்டுரைகள், எட்வர்ட் செய்து, மகாராஜாவின் ரயில்வண்டி, இரவில் நான் உன் குதிரை இந்த வகையில். ஊருக்குப் போயிருந்த போது தங்கமணி எனக்காக ஒரு பெட்டியில் சில புத்தகங்களைப் போட்டு வைத்திருந்தான். டோட்டோசான் மட்டும் படித்திருக்கிறேன். உபபாண்டவம் இன்னுமில்லை. நிறைய புத்தகங்களை வாங்கியிருந்தாலும் கணிசமானவை அன்பளிப்பாகக் கிடைத்தவையே! இப்படியாக இப்போதைய டொராண்டோ சந்திப்பில் அன்பளிக்கப் பட்டவை ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், கொரில்லா என்று ஒரு தொகை. பாதி படித்ததும் தொடாததுமாய் ஏகப்பட்டவை இருக்கின்றன. எப்போதாவது படித்து ஞானியாகிவிடுவேனாக்கும்!

இத்தனைப் புத்தகங்களும் சொல்லாத கதைகளையும் கவிதைகளையும் என் நட்புகளும் உறவுகளும் என் நாட்களில் எழுதுவதாக ஒரு நினைப்பு. அதனாலேயே என்னை அதிகம் பாதிப்பதும் இவர்கள்தான். அப்படித்தான் நேற்று மாசிலன், அப்பா நானும் உங்களோடு குளிக்கிறேன் என்றார். சரியென்றேன். குளிக்கும்போது, அப்பா பாடிக்கிட்டே குளிங்கன்னார். விடுவேனா கிடைத்தவொரு ரசிகனை. என்ன பாடலாமென்று யோசித்தபோது முந்திக் கொண்டு வந்தது பாரதியின் 'மோகத்தைக் கொன்றுவிடு'. பாடினேன். 'பந்தத்தை நீக்கிவிடு அல்லாலுயிர் பாரத்தைப் போக்கிவிடு' என்று பாடிப் போனவனை இடைமறித்துக் கேட்டார் பிள்ளை "எந்த பாரத்தை அப்பா?" நூறு ஜென் கதைகளின் கடைசி வரிகள் கொடுக்கும் அதிர்வை, சிரிப்பை அவன் கேள்வி கொடுத்தது. இந்த மாதிரிப் பிள்ளையை வைத்துக் கொண்டு நான் என்னத்துக்குப் புத்தகம் படிக்கணும்னேன்?!

தங்கமணிக்கும், தம் பொழுதுகளையும் புத்தகங்களையும் பகிர்ந்த, பகிரும் நெஞ்சங்களுக்கும் நன்றி!

"இணையத்தில் தமிழ்" குறுந்தகடு வேண்டுமா?

Image hosted by Photobucket.com

தமிழ்ல கிறுக்கிக் கீறி நோட்டு நோட்டாவும், தாள் தாளாகவும் சேத்து வச்ச நானெல்லாம் இன்னிக்கு லொட்டு லொட்டுன்னு பொட்டிதட்டி வலையேத்துறேன்னா அதுக்கெல்லாம் காரணம் எத்தனையோ ஆர்வலர்களோட உழைப்பு. தமிழ் இணைய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கிறேன் அப்படின்னு செருமிக்கிட்டு ஒரு உரை நிகழ்த்துமளவு எனக்கு இதில் படிப்பினை இல்லை. நம்மில் பலரைப் போலவே எனக்கும் உரித்துக் கொடுத்தால் தின்னத் தெரியும். நிற்க!

எழுத்துருக்கள், தேடுபொறிகள், உலாவிகள், இலக்கியங்கள் என்று பரந்து கிடக்கும் தமிழ் இணைய உலகி்ன் முக்கியமான ஆக்கங்களை வெங்கட், டிசே மற்றும் மதி ஆகியோர் ஒரு குறுந்தகட்டில் திரட்டி வைத்திருக்கிறார்கள். "இணையத்தில் தமிழ்" எனும் இந்தக் குறுந்தகடு டொராண்டோவில் கடந்த வாரம் நிகழ்ந்த சந்திப்புகளின்போது புதியவர்களுக்கும், வேண்டுவோருக்கும் அளிப்பதற்காகத் தயாரிக்கப் பட்டது. என்னிடமும் சிலவற்றைக் கொடுத்து அமெரிக்காவிலிருப்போரிடம் பகிர்ந்து கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். எனவே அமெரிக்கவாழ் ஆர்வலர்கள் எனக்கு ஒரு மின்னஞ்சல் (sundarappaa yahoo com) அனுப்பி இக்குறுந்தகட்டினைப் பெற்றுக் கொள்ளலாம் (இலவசம்).

குறுந்தகட்டில் இருக்கும் கோப்புகள்:
கேட்பி (audio tool, audacity)
எ-கலப்பை
மின்னஞ்சல் (Chanakya, Columba Linux)
தமிழ் எழுத்துருக்கள்
காசியின் நியூக்ளியஸ் பற்றிய கோப்புகள்
மதுரை மின் தொகுப்புத் திட்டத்திலிருக்கும் நூற்கள் (இது ஒன்னே பத்தாதா?!)
சுரதாவின் செயலிகள் (எழுத்துருமாற்றிகள், தேடுபொறிகள்...)
உமரின் தமிழ் ஒருங்குறி

இவற்றையெல்லாம் உருவாக்கி நமக்களித்தவர்களுக்கு மீண்டுமொரு முறை நம் நன்றி!

இனியும் புகைக்க வேண்டாம் சகோதரி!

Image hosted by Photobucket.com

புதிய ஆய்வு ஒன்றின் முடிவுகள். அதாவது சிகரெட் நிறுவனங்கள் பெண்களைப் புகைக்கு அடிமைப் படுத்தும் நோக்கில் சிகரெட்டுகளைத் தயாரிக்கின்றனவாம். பெண்கள் விரும்புகின்ற வடிவுடனும், சுவையுடனும், ஆரோக்கியத்திற்கு உகந்தது என்ற தோற்றத்துடனும் இவை தயாரிக்கப் படுகின்றனவாம். இது உலக நலத்தில், முக்கியமாக வளரும் நாட்டுப் பெண்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இது பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

இதற்கு முந்தைய ஆய்வுகளின்படி சிகரெட்டுக் கம்பெனிகளின் விற்பனை உத்திகள் பெண் விடுதலை, அழகு/கவர்ச்சி, வெற்றியடைதல், மெலிந்திருத்தல் போன்றவற்றைச் சுற்றிப் பின்னப் பட்டிருந்தன. ஆனால், சிகரெட்டின் வடிவமைப்பு ஏன் எப்படி பெண்களைப் புகைப்போராய் ஆக்குகிறது என்பது பற்றி இன்று வரை அறியப் படவில்லை.

1998 Tobacco Master Settlement Agreementன் பின்னர், பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட சிகரெட் கம்பெனிகளின் ஆவணத்தை ஆராய்ந்த கேரி முர்ரே கார்ப்பெண்டர் (Carrie Murray Carpenter) என்ற ஹார்வர்டு பொதுநலக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் "இது வெறுமனே விற்பனை, விளம்பரம் என்ற கூறுகளையெல்லாம் தாண்டியது", என்கிறார். கடந்த 20 வருடங்களாக இந்தக் கம்பெனிகள் கடும் முயற்சியெடுத்து, பெண்களிடையே புகைப்பதை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன. பெண்களையும், இளமங்கையரையும் புகைக்க ஊக்குவிக்கும் காரணிகள் என்னென்ன, அவர்கள் எவ்விதமாகப் புகைக்கிறார்கள், எந்தெந்த வகை சிகரெட்டுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் போன்றவற்றை இக்கம்பெனிகள் ஆராய்ந்திருக்கின்றன.

இவ்விதமான தந்திரங்களுடன் தயாரிக்கப் பட்டவை இலேசான சிகரெட்டுகள். இவை சுகாதாரமானவையென்றும், பாதுகாப்பானவையென்றும் பெண்கள் நம்ப வைக்கப்பட்டார்கள்; மேம்பட்ட வாசனை, புகைத்தலின் பின்னான உருசி, குறைந்த அளவு புகை இவற்றின் மூலம் இவ்வகை சிகரெட்டுகளை நல்லவை என்று கருத வைக்கப் பட்டார்கள்; இவ்வகை சிகரெட்டுகள் பெண்களுக்குப் பிடித்தமான வாசனையுடனும், இதமான மென்மையான சுவையுடனும் வந்தன; பெண்களின் உடற்கூறியலின்படி இச்சிகரெட்டுகளை எளிதாக உறிஞ்சும்படியும், உணர்வின்பத்தைத் தூண்டும்படியும், நிகோடின் மற்றும் தார் அளவினை மாற்றியும் வடிவமைத்தார்கள். இதற்கெல்லாம் மேலும் பசியைக் குறைக்கும் பொருட்களைக் கலந்து, புகைப்பதன் மூலம் எடையைக் குறைத்துக் கொள்ளலாம் என்ற கருத்தும் உருவாக்கப் பட்டது. இந்த வகை இலேசான, மெல்லிய, நீண்ட சிகரெட்டுகள் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்காதவை, மன இறுக்கத்தைப் போக்குபவை, உடலை இளைக்க வைப்பவை போன்ற தோற்றங்கள் உருவாக்கப் பட்டன. இதன் விளைவாக, புகைப்பதற்கு எதிரான முழக்கங்கள் அதிகம் பலனளிக்காமல் போய்விடுகின்றன. புகைக்கும் பெரும்பாலான பெண்களுக்கு இத்தகைய சிகரெட்டுகளில் இருக்கும் நிகோடின், தார் போன்றவற்றின் அளவு தெரிவதில்லை, ஆனால் சிகரெட்டின் தோற்றத்திலிருந்து கேடு குறைவுதான் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.

1970களிலிருந்து இந்த சிகரெட்டுக் கம்பெனிகள் மனோரீதியாகவும், நடத்தை முறைகளாலும் பெண்களின் புகைக்கும் பழக்கங்களை ஆராய்ந்து வந்திருக்கின்றன. ஒரு கம்பெனி சிகரெட்டிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு மாறுவோர்களைக் குறிவைத்து கம்பெனிகள் தங்கள் வடிவமைப்பை மாற்றியவண்ணம் இருந்தன, முக்கியமாக 1970க்கும் 90க்குமிடையே. இன்றளவும் சிகரெட்டுக் கம்பெனிகள் பெண்களையே குறிவைக்கின்றன, ஆனால் இவர்களது உத்திகள் பலதரப்பட்டவையாகவும், எளிதில் அடையாளம் காணப்பட இயலாதனவாகவும் இருக்கின்றன.

சிகரெட் கம்பெனிகளின் இந்த நடத்தை வளரும் நாடுகளிலிருக்கும் நலத் துறையாளர்களுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்துகின்றன. ஏனென்றால் வளரும் நாடுகளில் ஆண்களின் புகைப் பழக்கம் குறைந்து வரும் அதே நேரத்தில், பெண்கள் புகைப்பது குபுகுபுவென்று ஏறிக்கொண்டே செல்கிறது. அதாவது 2025ம் வருடத்துக்குள் இன்னும் 20% பெண்கள் அதிகமாகப் புகைப்பார்களாம். இன்றைய நிலையில் புகைப்பதால் பெண்களுக்கு வரும் சுகாதாரக் கேடுகளுக்கு இந்தக் கம்பெனிகளின் தந்திரமே காரணமென்றும் இதனால் இன்னும் கேடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதென்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

புகைக் கட்டுப்பாட்டுக்கு இன்னொரு ஆராய்ச்சியாளர் இந்த அழைப்பை விடுக்கிறார்: "பெண்களைப் புகைக்கு அடிமையாக்கும் வகையில் இந்தக் கம்பெனிகள் சிகரெட்டுகளை வடிவமைக்கின்றன என்று தெரிந்து விட்டது. இனி நாம் இந்த முயற்சிகளைத் தடுக்கவும், புகைப் பழக்கத்தை ஒழிக்கவும் ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும். இப்புகைக்கு, வளர்ந்த நாடுகளில் ஏற்கெனவே நம் பெண்டிர் பலரைப் பலி கொடுத்தாயிற்று. இனியேனும் இந்தப் புதிய ஆராய்ச்சியின் முடிவுகளைப் பயன்படுத்தி, வளரும் நாட்டுப் பெண்கள் மடிவதைத் தடுக்க முற்படுவதே நம் தலையாய பணி."

தகவல்: Scienceblog
படம் நன்றி: Womenfitness
தலைப்பு: "இனியும் அழ வேண்டாம் சகோதரி", விவரணப் படத்தின் தழுவல்.

எ யெ ஏ யே மொழிக்குழப்பியே!

நான் Yaleஐ ஏல்னுதான் நெனச்சேன். அப்புடித்தான் எழுதிக்கிட்டிருந்தேன். முந்தி பெயரிலியும் அப்புறம் சமீபத்துல பத்ரியும் யேல்னு எழுதுனதைப் பாத்ததுக்கப்புறம் யோசிச்சுப் பாக்குறேன். யேல்தான் சரின்னு படுது. நான் ஏன் யேலை ஏல் என்று எழுதினேன் என்ற கேள்வியோட எனக்குள்ளே தூங்கிக் கொண்டிருந்த மொழிக்குழப்பி எந்திரிச்சுட்டான். இதற்கு விடை காணும் பொருட்டு அவன் கடந்த சில நாட்களாகப் பகலிலும், இரவிலும், தனிமையிலும், கூட்டந்தன்னிலும் எலி, யெலி, எறும்பு, யெறும்பு, ஏணி, யேணி என்று சொல்லிக் கொண்டும், எங்கே நிம்மதீx2, எலந்தப்பயம்x2, எங்கேயெனது கவிதை என்று பாடிக்கொண்டும் திரிந்தான். இந்த ஞானத்தேடலைத் தன்னோடு நிறுத்திக் கொண்டுவிடாமல், நெடுவாரக் கடைசியில் குடும்பத்தோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்த தன் நண்பர்களைக் கூப்பிட்டு நடுச்சந்திகளில் வைத்து எங்கே எ, யெ சொல்லு பாப்போம் என்று பயமுறுத்தினான் (இந்த நண்பர்களிலேயொருத்தன் தன் கைப்பேசியில் ஏ, யே என்றபோது முன்னாலே நடந்து போய்க்கொண்டிருந்தவர் திரும்பிப் பார்த்துப் போனாரென்பது உபகதை).

ஆகக் கடைசியில், இல்லை இப்படிக் கடைசியில் என்று முடிவாய்ச் சொல்லிவிட முடியாது என்பதால், இதுவரை மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சிகளின் முடிவில், இந்த மொழிக்குழப்பி கண்டுபிடித்தது என்னவென்றால், நம்மில் பெரும்பாலானோர் 'எ'யை 'யெ' என்றுதான் உச்சரிக்கிறோம். அதேபோலத்தான் ஏயும் யேயும். இது தவறு என்பது மொழிக்குழப்பியின் பக்கவாதம். ஒரே உச்சரிப்புக்கா ரெண்டு எழுத்துக்களை வச்சிருப்பாங்கன்னு தன் கறுப்பு மேலங்கியை மாட்டிக் கொண்டு கேக்குறான். அப்போ எது சரி? (இந்த இடத்துல, சாம்பல் பூசியிருந்த ஒரு சன்னாசி எந்திரிச்சு, தம்பி இதெல்லாம் சரி, இதெல்லாம் தவறுன்னு எதையெல்லாம் சொல்லுவாய் என்று கேட்டுவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டார். இது புதுக் குழப்பம், தனியாக வைத்துக் கொள்வோம்.) அப்ப, எயை எப்படித்தான் சொல்றதுன்னு கேட்ட மொழிக்குழப்பிக்கு ஒரு விடையை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சொல்லுது. ஒரு பி.எச். அப்துல் அமீது மாதிரி தன்னை நினைத்துக் கொண்டு எமது சேவை, எங்கள் மொழி, எந்தேயத்தவர்கள் என்று சொல்லிப் பார்க்கிறான். நல்ல வேளையாக இதையெல்லாம் நீங்கள் கேட்க வேண்டியிருக்கவில்லை. இந்த எ வித்தியாசமாயிருந்தது. யாராவது உச்சரிப்பொலிகளை/சுட்டிகளைக் கண்டால் தரலாம்!

அதனால இப்போதைக்கு எயும் யெயும் வெவ்வேறு என்பதைக் கண்டறிந்த மற்றும் இப்படி இருக்கலாமென்றொரு மாற்று உச்சரிப்பினைக் கண்டறிந்த மாபெரும் திருப்பதியோடு மொழிக்குழப்பி வேலையைக் குழப்பக் கிளம்புகிறான்!